Monday, December 31, 2007

118.ஆதியா மிருவர் நட்புக் கவமதிப் புற்ற

விவேக சிந்தாமணி
*********************
118.ஆதியா மிருவர் நட்புக் கவமதிப் புற்றவர்க்குள்

சூதினால் கபடஞ்செய்து துணைபிரிந்திடுவ ரென்றால்
வேதியன் பவளவாயில் வேசைதாய் பச்சைநாவி
யூதியகதை போலாகி யறுநர கெய்துவாரே.

முதலில், இரு நண்பர்கள் நட்பு மிகுதியால் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். சில நாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் அவமதிக்க வேண்டுமென எண்ணி, அதற்காக சூது வஞ்சகங்கள் பல செய்தனர். அதனால் பகை நேர்ந்து ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிவது எவ்வாற் உள்ளதெனில்:

ஒரு விலைமாது, தன் மகளோடு இணைபிரியாது வாழ்ந்துவந்த வேதியனின் வாயில் கொடிய விடத்தை வைத்து ஊதிய கதை போலாகும்.

விவேக சிந்தாமணி
***********************
117.மங்கை கைகேசி சொற்கேட்டு மன்னர்புகழ் தசரதனும் மரணமானான்

செங்கமலச் சீதைசொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான்பின்
தங்கையவள் சொற்கேட்ட இராவணனுங் கிளையோடு ...............தானுமாண்டான்
நங்கையர்சொற் கேட்பதெல்லாங் கேடுவரும் பேருலகோர் ..............நகைப்பர்தாமே.

மங்கை=(இங்கு) சுயநல ஆசைமிகு பெண்டிர்
கிளையோடு= சுற்றத்தாரோடு

இராமாயணத்தில் வரும் நிகழ்வு.

மனைவி கைகேயியின் சொற்கேட்டு சிறிதும் சிந்தியாது மன்னன் தயரதன் சிறப்புக்களை உடைய இராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு அப்பிரிவைத் தாங்காது சோகத்தில் இறந்தான். இராமனும் இலக்குமியாகிய சீதாப் பிராட்டியின்,"மானைப் பிடித்துத் தாருங்கள்" எனும் சொற்கேட்ட மாத்திரத்திலே யோசியாது மானை விரட்டிச் சென்று சீதையை இழந்து வருந்தினான். தன் தங்கையின் சூது நிறைந்த சொற்களை அப்படியே நம்பிய இராவணனும் சீதையைச் சிறையெடுத்து, அதற்காகத் தன் சுற்றத்தாரோடு இராமனல் அழிக்கப்பட்டான்.

ஆகவே, இவர்களைப்போல் சுயநல ஆசை மிக்க பெண்களின் சொல்கேட்டு சிறிதும் சிந்தியாது அப்படியே கேட்டு நடப்போருக்கு தீங்கு உறுதியாய் வரும். அதுவன்றி, அவரடையும் அழிவு கண்டு இப்பெரிய உலகில் உள்ளோர்கள் ஏளனம் செய்து சிரிப்பார்கள்.

116.மையது வல்லியம்வாழ் மலைக்குகை

விவேக சிந்தாமணி
********************
116.மையது வல்லியம்வாழ் மலைக்குகை தனிற்புகுந்தே
ஐயமும் புலிக்குக் காட்டி யடவியிற் றுரத்தும் காலை
பையவே நரிக்கோளாலே படுபொரு ளுணரப்பட்ட
வெய்யவம் மிருகந்தானே கொன்றிட வீழ்ந்ததன்றே.

மையது=ஆட்டுக்கிடாவானது
வல்லியம்=புலி
அடவி=காடு
வெய்ய=கொடிய

ஓர் ஆட்டுக்கடா, புலியிருக்கும் குகைக்குள் புகுந்து, அச்சம்தரும் கொடிய விலங்கைப்போல் நடித்தது. அந்த உருவங்கண்டு புலியும் பயந்து குகையை விட்டு ஓடியது. அப்பொழுது அங்கு வந்த வந்த நரி புலியை நோக்கி,"இந்த அற்பமான ஆட்டைக் கண்டு ஏன் பயந்து ஓடுகிறாய்" என்று கோள் சொல்லப் புலியானது ஆட்டின் நடிப்பாகிய செயலைக் உணர்ந்து திரும்பிச்சென்று ஆட்டின்மீது பாய்ந்து கொன்றழித்தது.

ஆகவே இதுபோன்று நடிப்பாகவேனும் செய்யத்தகாத செயல் செய்வோருக்கு (கேடு வரும்)அழிவு உறுதி.

115.மதியிலாமறையோன் மன்னன் மடந்தையை

விவேக சிந்தாமணி
*********************
115.மதியிலாமறையோன் மன்னன் மடந்தையை வேட்கையாலே

இருதுவதுகாலந்தன்னில் தோடமென்றுரைத்தேயாற்றில்
புதுமையா யெடுத்தபோது பெட்டியில் புலிவாயாலே
அதிருடன் கடியுண்டன்றே யருநர கடைந்தான்மாதோ.

மதியிலா=அறிவற்ற
மறையோன்=வேதங்களைக் கற்றறிந்தவன்
இருதுவதுகாலந்தன்னில்=பருவமடைந்த காலத்தே
தோடம்=கேடு
அதிர்=நடுக்கம்,அச்சம்

முன்னொரு காலத்தே அறிவற்ற வேதியன் ஒருவன், தன்னிடம் கல்வி பயின்ற மன்னன் மகளின் அழகில் மயங்கி, அவளை அடையவேண்டி முயன்று தோற்று, அவளைச் சூழ்ச்சியால் அடைய எண்ணி, அவளின் இருது காலப்படி அவளுக்குத் தோடம் இருப்பதாகவும், அதனால் அவளைப் பெட்டியில் அடைத்து ஆற்றில் விட்டு விடுக என்று மன்னனிடம் கூறி அவனை அங்ஙனமே செய்ய வைத்தான். பின்னர் அப்பெட்டியைத்தேடி வெகுதூரம் சென்றான். அதற்குள், ஆற்றின் கரையில் வந்த ஒரு அரசன் பெட்டியைத் திறந்து அதற்குள்ளிருந்த இளவரசியை மீட்டுப்பின் அப்பெட்டியினுள்ளே ஒரு புலியை அடைத்து அனுப்பினான். அது அறியாது வேதியன் பெட்டியைக் கண்டு மகிழ்வுற்றுத் திறந்தான். அங்கிருந்த புலியைக்கண்டு அஞ்சி நடுங்கினான். அப்புலியும் வேதியனைத் தின்றது; அவனும் நரகம் அடைந்தான்.

ஒருவன், (பெண் வேட்கையால்) ஒருவருக்குத் தீங்கிழைத்தால் அவன் இறந்து நரகம் எய்துவான்.

114.நட்பிடைக் குய்யம் வைத்தார் பிறர்மனை

விவேக சிந்தாமணி
**********************
114.நட்பிடைக் குய்யம் வைத்தார் பிறர்மனை நலத்தைச் சேர்ந்தார்

கட்டழற் காமத்தீயாற் கன்னியைக் கலக்கினோரும்
அட்டுயி ருடலந் தின்றா னமைச்சனா யரசு கொன்றான்
குட்டநோய் நரகந் தம்முட் குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.

குய்யம் - வஞ்சனை
நலம் - அழகு
சேர்ந்தார் - கூடிக் குலவியவரும்
கட்டழல் - மிகுதியான நெருப்பு
கலக்கினோர் - கற்பழித்தோர்

நட்பு மிகுந்த இடத்தில் வஞ்சனை புரிந்தவனும், பிறன் மனைவியின் அழகில் மயங்கி அவளுடன் கூடி அநுபவித்து மகிழ்ந்தவனும், காமத்தீயால் வெந்து உந்தப்பட்டு கன்னியைக் கூடிக் கற்பழித்து, அவள் மனம் கலங்கப் பின் அவளை மணம் செய்ய மறுத்தவனும், ஒரு உயிரின் உடலைக் கொன்று இறைச்சியைத்(கசாப்பு) தின்பவனும், அமைச்சனாய் இருந்து அரசனைக் கெடுத்தவனும், ஆகியோர் இப்பிறவியில் கொடிய தொழு நோய்கண்டு வருந்தி மறு பிறவியில் நரகில் மூழ்குவராம்.

113. உயிரனை யானுடன் கலந்த உளவறி

விவேக சிந்தாமணி
********************
113. உயிரனை யானுடன் கலந்த உளவறிந் தீண்டெனை

.............மணந்தோ னுடன்றிச் செய்கை
செயலென யென்றிலை மறைகாயெனத்
............துணிவதா லிருவரையுந் தீதென்
றயில்விழியாய் மயற்போது வூழ்வலித்தினும்
...........பெண்மதி யெனது வூழின்
இயலென வள்ளுவ ருரைத்தார் சான்று
...........நீயெனப் புகன்றே னின்புற்றானே.

வேல் போன்ற கூரிய கண்களை உடைய தோழியே! எனது உயிரினும் சிறந்த ஆசைநாயகனுடன் நான் கூடிக் குலவி வரும் மருமத்தை என் கணவன் இலை மறை காயென அறிந்து பின், என் மீது சினங் கொண்டு இப்படிப்பட்ட இழிவான காரியம் செய்யத் துணிந்தமைக்குக் காரணம் யாதென வினவ, அப்பொழுது உண்டெனினும் இல்லையெனினும் எனக்குத் தீங்காகவே முடியும் என சிந்தித்து, காமம் பொதுவெனவும், தலையில் எழுதிய எழுத்து தவறாது எனவும் கூறினேன். அவர், முன்னிலும் அதிகக் கோபங்கொண்டு, விதியை மதியால் வெல்ல முடியாதா? என்று கேட்டான். அதற்கு, "ஐயோ! பெண் புத்தி பின் புத்தி அல்லவா? ஆண்களுக்கு சிறந்த புத்தி உண்டே! மேலும் இதற்கு சாட்சி தாங்களாக இருக்க வேறு தேடுவதேன்?" என்றேன். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்தார். இதை அறியாயோ?

கயல்விழி இழிமாதர் சொல்லை ஆராயாமல் அப்படியே நம்பலாகாதே!

112.நிலமதிற் குணவான்றோன்றி னீள்குடி

விவேக சிந்தாமணி
*********************
112.நிலமதிற் குணவான்றோன்றி னீள்குடித்தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந்தோன்றும் சந்தனமரத்திற் கொப்பாம்

நலமிலாக் கயவன்றோன்றின் குடித்தனம் தேசம்பாழாம்

குலமெலாம் பழுதுசெய்யுங் கோடரிக்காம்பு நேராம்.


உலகினில் நல்ல குணமுடைய ஒருவன் பிறந்தால், அவனும் அவன் குடியைச் சேர்ந்த அனைவரும் நீண்டு வாழ்வார்கள். அவன் இருக்கும் இடமெல்லாம் நறுமணம் கமழும்; அந்த மணமானது சந்தண மரத்திலிருந்து வரும் மணத்துக்கு ஒப்பாகும். உலகெலாம் புகழ் மணம் வீச வாழ்வான். அப்படி இல்லாது, நன்மை இல்லாத கீழ்மகன் பிறந்தால், அனைவருக்கும் தீங்கு செய்யும் குணம் இருப்பதால், அவன் குலத்தோருக்கும் கேடு செய்வான். இவன் கோடாரிக் (பிடிக்கும் மரத்தாலாகிய)காம்பாகப் பிறந்தானே எனக் குலத்தோரும் உலகமும் பழிக்கும்.

111.சலந்தனிற் கிடக்கு மாமை சலத்தை

விவேக சிந்தாமணி
*********************
111.சலந்தனிற் கிடக்கு மாமை சலத்தை விட்டகன்றபோது
கொலைபுரி வேடன்பற்றி வலையினிற் கொண்டுசெல்ல

வலிமைசே ரவனை வெல்லும் வகைபுரிந் ததனைக்காத்த

கலையெலி காகம் போல்வார்க் கலத்தலே நலத்ததாமே.


இப்படியும் உரைப்பவர் உண்டு:

சலந்தனில் கிடக்குமாமை சலத்தைவிட் டகன்றபோது

கொலைபுரி வேடன்கண்டு வலையினிற் கொண்டுசெல்ல

வலுவினாலவனை வெல்ல வகையொன்று மில்லையென்று

கலையெலி காகஞ்செய்த கதையென விளம்புவோமே.


இது பஞ்சதந்திரக் கதையில் வருவது:

முன்னொரு காலத்தில், ஒரு கலை(மான்),காகம், எலி, ஆமை ஆகிய நால்வரும் நண்பர்களாயிருந்தன. நீரிலிருந்த வெளிவந்த ஆமையைக் கொலைபுரிவதையே தொழிலாகக் கொண்ட வேடன் பிடித்துத் தன் வலைபோன்ற பையில் ஆமையை இட்டுக்கொண்டு சென்றான். வேடனை எதிர்க்கும் வல்லமை நம் மூவருக்கும் இல்லையென மானும், காகமும் எலியும் ஒரு தந்திரம் செய்தன. மான் இறந்ததுபோல் கிடக்க, காகம் அதன்மேல் கொத்தி தின்னுவது போல் நடிக்க, வேடனும்,"ஆகா! நமக்கு இன்று நல்ல விருந்து" என எண்ணி, ஆமையைப்போட்டுவிட்டு மானை எடுக்க ஓடினான். அச்சமயம், எலி வலையைக்கடித்து ஆமையை விடுவிக்க ஆமை அருகில் உள்ள குளத்தில் இறங்கி தப்பித்துக் கொண்டது. மான் எழுந்து ஓட, காகம் பறக்க எலியும் ஓடி மறைந்தது. இப்படிப்பட்ட நண்பர்களுடன்தான் பழகவேண்டுமென்பது கருத்து.

"உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
என்னும் குறளுக்கிணங்க, இடுக்கண் வருங்கால் நண்பர்களைக் காக்கவேண்டுமெனும் நீதியும் சொல்லப்பட்டுள்ளது.

"இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்காதே!" என்னும் நீதியும் விளங்கும்.

110.வில்லது வளைந்ததென்றும் வேழ

விவேக சிந்தாமணி
*********************
110.வில்லது வளைந்ததென்றும் வேழம துறங்கிற்றென்றும்
வல்லியம் பதுங்கிற்றென்றும் வளர்கடா பிந்திற்றென்றும்

புல்லர்தஞ் சொல்லுக்கஞ்சிப் பொறுத்தனர் பெரியோரென்று

நல்லதென்றிருக்க வேண்டா நஞ்செனக் கருதலாமே.


எதிரியைக் கொல்வதற்காக வளைந்துள்ள வில்லைக்கண்டு, இதனால் தீங்கேதும் வராது என நினைப்பது, தன் பகைமுடிக்க நேரம் பார்த்துத் தூங்குவதுபோல் கண்ணை மூடிக்கிடக்கும் யானையைக்கண்டு இது தீங்கு செய்யாது என நினைப்பது, பதுங்கும் புலியால் தீங்கு வராதென நினைப்பது, வேகத்தோடு தாக்குவதற்காகப் பின்வாங்கும் கடாவாலும் தீங்கு வராரது என்று நினைப்பது, தம்மை நிந்திப்போர் தானாகவே அழியும் தருணத்தினை எதிர்நோக்கி பொறுமையுடன் இருக்கும் சான்றோரின் பொறுமையை, இவர் கீழ்மக்களின் சொற்களுக்கு அஞ்சித்தான் ஒதுங்கிச் செல்கின்றனர் என்று நினைப்பதும் நன்மை என நினைக்க வேண்டாம்; கொடிய நஞ்சைப் போன்ற கேடு என்று நினைக்கலாம்.

109.குரங்குநின்று கூத்தாடிய கோலத்தை

விவேக சிந்தாமணி
*********************
109.குரங்குநின்று கூத்தாடிய கோலத்தைக்கண்டே
அரங்குமுன்னிநாய் பாடிக்கொண்டா டியதுபோலும்

கரங்கணீட்டியே பேசிய கசடரைக்கண்டு

சிரங்களாட்டியே மெச்சிடுமறிவிலார் செய்கை.


பெருமையாகக் கைகளை நீட்டி தம்மைப் புகழ்ந்துபேசும் கீழ்மக்களைக் கண்டு தத்தம் தலைகளை ஆட்டி அவர்களைப் புகழும் அறிவில்லா மூடர்களின் செயல் எவ்வாறுள்ளதாம்?

முச்சந்தியிலே வேடிக்கை காட்டும் குரங்காட்டியின் கைக்குரங்கு ஆடுவதைக் கண்ட நாய், அவ்விடத்திலேயே குரங்கின் ஆட்டத்திற்குத் தக்கபடி குரங்கைப் புகழ்ந்து பாடுவதை ஒப்பாகும்.

108.அலகு வாள்விழி யாயிழை

விவேக சிந்தாமணி
************************
108.அலகு வாள்விழி யாயிழை நன்னுதற்
றிலகங் கண்டெதிர் செஞ்சிலை மாரனும்

கலகமே செய்யுங் கண்ணிது வாமென

மலரம் பைந்தையும் வைத்து வணங்கினான்.


கூர்மையான வாள்போலும் கண்ணை உடைய தலைவியின் எடுப்பான நெற்றியில் உள்ள பொட்டின் அழகை, அழகிய வில்லை உடைய மன்மதன் கண்டு கலகம் விளைவிக்கும் கண்ணோவென்று எண்ணித் தன் மலர் அம்புகள் ஐந்தினையும் அவளின் முன்வைத்து வணங்குவான்.

இதுவும் இடைச் செருகலே.

107.அருகிலிவ ளருகிலிவ ளருகில்

விவேக சிந்தாமணி
********************
107.அருகிலிவ ளருகிலிவ ளருகில்வர வுருகுங்
கரியகுழல் மேனியிவள் கானமயில் சாயல்

பெரியதன மிடைசிறிது பேதையிவ ளையோ

தெருவிலிவ ணின்றநிலை தெய்வமென லாமே.


கரிய நிறங்கொண்ட கூந்தலையும், அழகிய மேனியையும், கானமயில் போன்ற சாயலையும், புடைத்துப் பெருத்த தனங்களையும், சிறுத்த இடையும் உள்ள மங்கை அருகில் வர மனம் உருகும். வீதியில் இவள் நிற்கும்போது பார்த்தால் தெய்வப்பெண்ணோ என மயங்கிச் சொல்லுதல் வேண்டும்.

இதுவும் இடைச் செருகலே.

106.கொல்லுலை வேற்கயற்கண் கொவ்வை

விவேக சிந்தாமணி
*********************
106.கொல்லுலை வேற்கயற்கண் கொவ்வையங் கனிவாய்மாதே
நல்லணி மெய்யிற்பூண்டு நாசிகா பரணமீதில்

சொல்லதிற் குன்றிதேடிச் சூடியதென்னா லென்றான்

மெல்லியல் கண்ணும்வாயும் புதைத்தனள் வெண்முத்தென்றாள்.


"கொல்லனுலையில் காய்ச்சிப் பதப்படுத்திக் கூர்மை செய்த வேலாயுதத்தையும் கெண்டைமீனையும் ஒத்த கண்ணாளே! கோவைப்பழம் போல் சிவந்த வாயினை உடயவளே! நல்ல மாற்றுக்குறையாத ஆபரணங்களை உடலில் பூட்டியவளே! உன் மூக்கில் அணிந்திருக்கும் அணிகலனாம் மூக்குத்தியில் மட்டும் குற்றம் பொருந்திய குன்றிமணியை வைத்துள்ள காரணம் என்ன?," எனத் தலைவன் வினவ, தலைவி வெட்கித் தலைகுனிந்து, முகமலரைக் கைகளால் மூடி,"வெண்முத்து" என்றாள்.

இதுவும் இடைச் செருகலே.

105.கரந்தொருவன் கணைதொடுக்க

விவேக சிந்தாமணி
*********************
105.கரந்தொருவன் கணைதொடுக்க மேற்பறக்கும் இராசாளி ................கருத்தும்கண்டே
உரைந்து சிறுகானகத்தி லுயிர்ப் புறாபேடு தனக் குரைக்குங்காலை

விரைந்து விடந்தீண்ட வுயிர்விடும் வேடன்கணையால் வல்லூறும் ...............வீழ்ந்த

தரன்செயலே யாவதல்லாற் தன்செயலால் ஆவதுண்டோ ..............வறிவுள்ளோரே.


கரந்து = மறைந்திருந்து

முன்னொரு காலத்தே, கானகத்திலே ஒரு வேடன் மறைந்திருந்து, மேலே பறக்கும் தம்பதிப் புறாக்களைக் கொல்ல வேண்டி அம்பு தொடுத்துக் குறிவைக்க, அப்பொழுது ஒரு இராசாளியும் தன் உணவுக்காக அதே புறாக்களைக் குறிவைத்துப் பறந்துகொண்டிருந்தது. அப்பொழுது ஆண்புறா தன் பேடையிடம்(பெண் புறா), "நம் நிலையைப் பார்" எனக் கூறியது. அப்பொழுது, வேடனை ஒரு நாகம் தீண்ட அதனால் குறிவைத்த அம்பு புறாக்களைத் தாக்காது இராசாளியைத் தாக்கிக் கொன்றது. இவையெல்லாம் அரன் செயலாலல்லாது, நம்முடைய நற்செயல்களாலாகுமோ? ஆகாது.

இதுபோல், உலகில் கொடியோர், ஒருவருக்குத் தீங்கு செய்ய நினைக்கினும் இறைவன் அருளால் அது நிறைவேறாது தாமே அழிவார்கள்.

104.உண்டதை யொழிக்கும் வாசலோர

விவேக சிந்தாமணி
*********************
104.உண்டதை யொழிக்கும் வாசலோரநீ ரொழித்துமேலே
வண்டலு மழுக்குஞ்சேறு முதிரமு மாறாவாசல்

உண்டத னிருப்பைக்கண்டு பெருங்களி யுள்ளங்கொண்டு

கண்டன ரிளைஞரெல்லாங் கதியெனக் கருதுவாரே.


நாம் உண்டதைச் செரித்துப்பின் வெளித்தள்ளும் மலவாயிலை அடுத்துள்ள உவர் நீர் ஒழுகச் சேறுபோன்ற அழுக்குத் திரண்டு இரத்தம் வரும் வாயில் ஒன்றுண்டு. அதைப்பார்த்த இளைஞர் எல்லாம் மனம் மகிழ்ந்து சுவர்க்கம் இதுவே எனக் கருதுகிறார்கள்.

சிற்றின்பப் பாடலாயுள்ளதால் இடைச்செருகலென்பர். எண் வரிசை கெடலாது எனும் நோக்கத்துடன் ஈங்கு தரப்பட்டுள்ளது.

103.காரெனுங் குழல்கடப்பிக் கடுஞ்சிலை

விவேக சிந்தாமணி
***********************
103.காரெனுங் குழல்கடப்பிக் கடுஞ்சிலை வாளிதப்பி
மேரென வளர்ந்து நின்ற வேழத்தின் கோடுதப்பித்

தாருறு கரியரோமச் சங்கிலிவழியே சென்று

சீரியனென வளர்ந்த செல்வனல் குலிற்கை வைத்தான்.


நேர் வழியே வளர்ந்த செல்வனாகிய தலைவன், கூந்தலாகிய மேகத்துக்கும் புருவமாகிய வில்லம்புகளுக்கும், உயர்ந்து வளர்ந்த யானையின் தலைமுகடு போன்ற பருவச் செழிப்புகட்கும் தப்பி உரோமச் சங்கிலி வழியே சென்று கருக்குழிதனில் கைவைத்தான்.

சிற்றின்பப் பாடலாயுள்ளதால் இடைச்செருகலென்பர். எண் வரிசை கெடலாது எனும் நோக்கத்துடன் ஈங்கு தரப்பட்டுள்ளது.

102.சலதாரை வீழ்நீருஞ் சாகரந் தன்னை

விவேக சிந்தாமணி
*********************
102.சலதாரை வீழ்நீருஞ் சாகரந் தன்னைச் சார்ந்தாற்
குலமென்றே கொள்வதல்லால் குரைகடல் வெறுத்ததுண்டோ?

புலவர்கள் சபையில்கூடிப் புன்கவியாளர் சார்ந்தால்

நலமென்றே கொள்வதல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம்?


குரை=ஒலிக்கும்

வீட்டிலிருந்து சாக்கடை வழியாக அருவருக்கத் தக்க கழிவுநீர் எப்பொழுதும் ஒலியெழுப்பிக் கொண்டுள்ள கடலில் கலக்கும்போது, அக்கடல் கழிவு நீரைத் தன் இனமென நினைத்து தன்னோடு சேர்த்துக்கொள்ளுமே அல்லாது அதனை வெறுத்து ஒதுக்குவதுண்டோ? இல்லையாம்; அதுபோல, கவி இலக்கணத்துக்கு ஒவ்வாத, அற்பமான கவிதைகளைப் புனையும் கவிஞர்கள், பேரறிஞர்கள் கூடியுள்ள அவையிலே கலந்து தங்களின் கவிதைகளை வெளியிடும்போது, அவ்வறிஞர்கள் புன்கவிகளை கவிஞர்களென ஏற்றுக்கொள்வார்களே அன்றி வெறுத்து ஒதுக்க மாட்டார்கள்.(குறைகண்டுபிடித்தல் அல்ல; அதுவேறு)

101.மாகமா மேடைமீதில் மங்கை

விவேக சிந்தாமணி
***********************
101.மாகமா மேடைமீதில் மங்கைநின் றுலாவக்கண்டு
ஏகமா மதியென்றெண்ணி யிராகுவந் துற்றபோது

பாகுசேர் மொழியினாளும் பற்றியே பாதம்வாங்கத்

தோகைமா மயிலென்றெண்ணித் தொடர்ந்தரா மீண்டதன்றே.


உப்பரிகையில் மங்கைப் பருவமுடைய தலைவி நின்று உலவும்போது அவளின் முகத்தைப் பூரணச் சந்திரன் என்று எண்ணி இராகுவாகிய கரும்பாம்பு அவளைப் பிடிக்க எண்ணி வந்தது கண்டு, கரும்பின்பாகு போன்ற மொழியாள் மனம் பதறி விரைவாகத் திரும்பி நடந்து உள்ளே போக, அவள் நடை மயிலைப்போல் இருப்பது கண்டு இராகு பயந்து திரும்பி ஓடிவிட்டதாம்.

இதையும் இடைச் செருகல் என்பார்கள்.

100.உந்தியின் சுழியின்கீழ்சே ருரோம

விவேக சிந்தாமணி
*********************
100.உந்தியின் சுழியின்கீழ்சே ருரோமமாங் கரியநாகஞ்
சந்திரனெனவே யெண்ணித் தையலாள் முகத்தைநோக்க

மந்திரகிரிகள் விம்மி வழிமறித் திடுதல்கண்டு

சிந்துரக் கயற்கண்ணோடிச் செவிதனக் குரைத்ததம்மா.


உந்திச் சுழியாகிய நாபிக்கு அடுத்துள்ள உரோமம் அடர்ந்த பகுதி கரிய நாகம்போலுள்ளது. அது தலைவியின் முகத்தைச் சந்திரன் என எண்ணி மேல்நோக்க இரு மலைக்குன்றுகள் வழிமறித்தன. இதைப்பார்த்துச் செவ்வலரி பறந்த கயல்மீன்போலும் கண்கள் ஓடிப்போய் செவிகளுக்குச் சொல்லியதாம்.
இது தலைவியின் அங்கங்களை வருணித்தலாம். இது நீதி உரைக்காமையால் இடைச்செருகல் என்பர் சிலர்.

99.பொல்லார்க்குக் கல்விவரிற் கருவமுண்டா

விவேக சிந்தாமணி
********************
99.பொல்லார்க்குக் கல்விவரிற் கருவமுண்டா
............மதனோடு பொருளுஞ் சேர்ந்தால்

சொல்லாலுஞ் சொல்லுவிக்குஞ் சொற்சென்றாற்
...........குடிகெடுக்கத் துணிவர் கண்டாய்
நல்லோர்க்கிம் மூன்று குண முண்டாகி

..........வருளதிக ஞான முண்டாம்

எல்லோர்க்கு முபகார ராயிருந்து
..........பரகதியை யெய்து வாரே.

பொல்லாருக்குக் கல்வியுண்டானால் கர்வம் உண்டாகும். அதோடு கொஞ்சம் பொருளும்(பணமும்) சேர்ந்தால் சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லவைக்கும். அதற்குமேலும் அவர்களுக்குச் செல்வாக்கும் சேர்ந்தால், பிறருக்கு நல்லதைச் செய்வதை விட்டுவிட்டு, பல கொடியவர்களை ஏவிவிட்டு அடுத்தவரின் குடும்பத்தைக் கெடுக்க எண்ணுவார்கள். ஆனால் நல்ல குணமுடைய நல்லவர்களுக்கு இம்மூன்று நன்மைகளும் கிடைக்குமானால், அவர்கள் எல்லோருக்கும் உதவிசெய்வார்கள்; செல்வாக்கால் பிறருக்கு நன்மை செய்வார்கள். அந்த அறத்தின் செம்மையால் அருள் கிடைக்கும்; அதன் பயனாய் நன்முத்தி கிடைக்கும்.

98.பெண்டுகள்சொல் கேட்கின்ற பேயரேனும்

விவேக சிந்தாமணி
**********************
98.பெண்டுகள்சொல் கேட்கின்ற பேயரேனும்
...........குணமூடப்பேடி லோபர்
முண்டைகளுக் கிணையில்லா முனைவீரர்
...........புருடரென மொழியொணாதே
உண்டுலக முதிப்பாருள் கீர்த்தியற
..........மின்னதென உணர்தலில்லார்
அண்டினவர் தமைக்கெடுப்பா ரழிவழிக்கே
.........செய்தவ ரறிவுதானே.

அறிவற்ற பெண்களின் சொல்கேட்டு நடக்கும் பேய்க்குணம் உடையவர்களே அறிவற்ற குணம் உடையவராம்; அவர் ஆண்தன்மை இல்லா பேடி என இகழப்படுவார். இத்தகையோரின் நிலை கைம்பெண்ணின் நிலையை விட ஒருபடி தாழ்ந்ததுதான்.(கணவனை இழந்தமையால் உதவியில்லாமையால் கைம்பெண்ணால் அக்காலத்தே ஒரு காரியமும் செய்ய இயலாது.)
போர் செய்யும் வீரம் உள்ள ஆடவரென்றும் கூறலாகாது. இவ்வுலகில் பிறப்போருள் அவர் அறத்தன்மை இன்னவகை என அறியும் தன்மை இல்லாதவராம். நல்லவரென நினைத்துத் தம்மிடம் சேர்ந்தோரைக் காப்பாற்றாது கெடுத்து விடுவார். பொய்வழக்குரைப்பதே இவர் அறிவின் இயற்கைக் குணமாம்.

97.தன்னைத்தான் புகழ்வோருமந் தன்குலமே

விவேக சிந்தாமணி
*********************
97.தன்னைத்தான் புகழ்வோருமந் தன்குலமே
...........பெரிதெனவே தான்சொல்வோரும்
பொன்னைத்தான் தேடியறம் புரியாம

...........லவைகாத்துப் பொன்றினோரும்

மின்னலைப்போல் மனையாளை வீட்டில் வைத்து
...........வேசைசுகம் விரும்புவோரும்
அன்னைபிதா பாவலரைப் பகைப்போரு

...........மறிவிலாக் கசடராமே!


ஒருவன் மற்றவரால் புகழப்படுவதில்தான் சிறப்பு. ஆயினும், தன்னைத்தானே புகழ்ந்துகொள்வோனும், தான் சேமித்து வைத்த செல்வத்தில் தன்குடும்ப நலனுக்குப் போக மீதியைத் தானும் அநுபவிக்காது, அறச்செயல்களுக்குப் பயன்படுத்தாத கருமியும், மின்னலைப்போல அழகான இல்லாள் இருக்க விலைமாதரிடம் காம இன்பம் அநுபவிப்பவனும், அன்னை தந்தை ஆசான்(புலவர்) ஆகியோரைப் பகைப்பவனும், உலகோரால் அறிவற்ற கீழ்மகன் என்று அழைக்கப்படுவர்.

96.தன்மானங் குலமானந் தன்னை

விவேக சிந்தாமணி
*********************
96.தன்மானங் குலமானந் தன்னைவந்தடைந்த
............வுயிர் தங்கண் மானம்
என்மான மாகிலென்ன வெல்லவரும்
............சரியெனவே யெண்ணும் போந்து
நன்மானம் வைத்தெந்த நாளுமவர்
............தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற
...........வள்ளலென வழுத்த லாமே.

(இவ்வாறுமுளது)

தன்மானங் குலமானந் தனை வேண்டி வந்தடைந்தோர்
............தங்கண் மானம்
என்மான மிவைசமமா மென்றெண்ணிப் பிறரிடத்து
...........மினிமை யான
நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு
...........நலஞ்செய்வோனை
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென
...........வழுத்த லாமே.

இருபாடலுக்கும் பொருள் வேறுபாடு ஒன்றுமில்லை.

பெருமை பொருந்தியதாய்க் கருதப்படும் தன்மானம், தன் குலப்பற்று ஆகிய இரண்டும் பெரிதென எண்ணித் தன்னை அண்டி வந்தடைந்தோரின் மான அபிமானங்களைத் தன்னுடையதாய்க் கருதி, எப்பொழுதும் நன்மை செய்யும் ஒருவனை மரியாதை உடையவர் என்றும், தன்னைச் சார்ந்தோரைக் காக்கும் வள்ளல் எனவும் கூறலாம்.

சுருங்கச் சொல்லின், தன்குலத்தின்மீது எவ்வளவு பற்று வைத்துள்ளானோ அவ்வளவு பற்றையும் தன்னை அண்டிவந்தோரிடமும் செலுத்துவோனை வள்ளலென இவ்வுலகம் அழைக்கும்.

95.வல்லியந்தனைக் கண்டஞ்சி மரம்

விவேக சிந்தாமணி
********************
95.வல்லியந்தனைக் கண்டஞ்சி மரம்தனிலேறும் வேடன்
கொல்லிய பசியைத்தீர்த்து ரட்சித்தகுரங்கைக் கொன்றான்

நல்லவன் றனக்குச்செய்த நலமது மிக்கதாகும்

புல்லர்க டமக்குச் செய்தா லுயிர்தனைப் போக்குவாரே.


வல்லியம் = புலி
புலியைக் கண்டு அஞ்சிய வேடன், தன் உயிரைக் காத்துக் கொள்ள ஒரு மரத்தில் ஏறி ஒளிந்தான். அப்போது அவன் பசியை பழம் முதலியன கொடுத்து ஒரு குரங்கு தீர்த்தது. தன்னைக் காப்பாற்றிய அக்குரங்கையே நன்றி மறந்து வேடன் கொன்றான்.

அதுபோல், நன்றி கெட்ட அற்பருக்கு நல்லது செய்து உதவினால், அவர்கள் செய்நன்றி மறந்து உதவி செய்தவன் உயிரினை நீக்கிக் கொல்லுவார்கள். நற்குணமுடைய மனிதனுக்குச் செய்த நன்மையால் மேன்மை மேலும்மேலும் பெருகிக்கொண்டு போகும்.

94.ஆரம்பூண்ட மணிமார்பா வயோத்தி

விவேக சிந்தாமணி
********************
94.ஆரம்பூண்ட மணிமார்பா வயோத்திக்கரசே யண்ணாகேள்
ஈரமிருக்க மரமிருக்க இலைகளுதிர்ந்த வாரேது

வாரங்கொண்டு வழக்குரைத்து மண்மேணின்று வலிபேசி

ஓரஞ்சொன்ன குடியதுபோல லுதிர்ந்து கிடக்குந்தம்பியரே.


மாலையணிந்த அழகிய மார்பை உடைய அண்ணனே! அயோத்திக்கு அரசனே!
மரம் இருக்க, அதற்கு உயிராகிய தண்ணீரால் ஈரமும் இருக்க அதன் இலைகள் மட்டும் உதிருவது எப்படி உள்ளது?

பூமியில், தன் பேச்சின் வலிமையால் இல்லாததை இருப்பதுபோல் வழக்கை விவாதித்து, ஓரவஞ்சகமாய்த் தீர்ப்பு சொல்லி அதில் வரும் வரும்படியில் பங்கு கொண்டவன் குடும்பம்போல் உதிர்ந்து கிடக்கும், தம்பியரே!

93.பூதலத்தில் மானிடராய்ப்பிறப்ப

விவேக சிந்தாமணி
************************
93.பூதலத்தில் மானிடராய்ப்பிறப்ப தரிதெனப்
............புகல்வர் பிறந்தோர் தாமும்
ஆதிமறை நூலின்மறை யருள்கீர்த்தி

...........யாந்தலங்க ளன்பாய்ச் சென்று

நீதிவழு வாதவகை வழக்குரைத்து
..........நல்லோரை நேசங் கொண்டு
காதவழி பேரில்லார் கழுதையெனப்
..........பாரிலுள்ளோர் கருதுவாரே.

(இப்படியும் பாடல் உண்டு)

பூதலத்தின் மானிடரா யொருவர் பிறந்திடலரிது பொருந்தினாலும்
ஆதிமறை நூலின்முறை யறிந்துபுக ழார்தலங்க ளன்பாச் சென்று
நீதிவழு வாமல்வருஙம் வழக் குரைத்து நல்லோரை நேசங் கொண்டு
காதள வேனும்பேர் பரப்பரே லவர் பிறப்புக் கழுதையாமே.

உலகில் மானிடராய்ப் பிறத்தல் அரிதெனப் பிறந்தவர்கள் கூறுவர். அப்படியே பிறந்தாலும், முறைப்படி கற்கவேண்டிய சாற்றிறங்களையும் நூல்களையும் கற்று, அருள், புகழ் ஆகியன பெற்று, வழிபடவேண்டிய தலங்களுக்குச் சென்று வழிபட்டு, வழக்கில் நீதி வழுவாது தீர்ப்பு வழங்கி, நல்லோருடன் நட்புகொண்டு, ஒரு காத வழிதொலைவுக்காவது நல்லவர் எனு பெயர் பெற்றிறாதவர்களை கழுதைப் பிறப்பென்று மற்றவர்கள் கருதுவார்களே.

92.கரியொரு திங்களாறு கானவன்

விவேக சிந்தாமணி
********************
92.கரியொரு திங்களாறு கானவன் மூன்றுநாளும்
இரிதலைப் புற்றில்நாக மின்றுணு மிரையீதென்று

விரிதலை வேடன்கையில் விற்குதை நரம்பைக்கவ்வி

நரியனார் பட்டபாடு நாளையே படுவர்தாமே.


கரி = யானை
கானவன் = வேடுவன்
இரிதலை = நசுங்கிக் கெட்ட தலையுடைய
விரிதலை = ஒழுங்கு படுத்தப்படாத தலை

வேட்டையாடச் சென்ற வேடன் ஒருவன், எதிரே நின்ற யானையைக் கொல்ல வசதியாக அருகே இருந்த பாம்புப் புற்றின் மீதேறி அம்பு எய்து யானையைக் கொன்றான். அது அது சமயம், அவன் எடையால் உடைந்த புற்றில் வசித்த நாகம் வெளியே வந்து வேடனைக் கொத்தியது. விடம் ஏறி வேடன் இறந்தான். வேடன், இறக்குமுன் தன் கத்தியால் பாம்பின் தலையைக் கொய்ய அதுவும் இறந்தது. அதைக் கண்ட நரி ஒன்று, இன்று பாம்பைத் தின்னலாம்; வேடனை மூன்று நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம். யானையை 6 மாதங்களுக்கு வைத்துக்கொள்ளலாம் எனக் கணக்கு போட்டுக் கொண்டு, வேடன் கையில் இருந்த வில்லில் பூட்டிய அம்பைக் கண்டது. அதையகற்ற, வில்லின் நாணைக் கடித்து இழுக்க, அம்பு விடுபட்டு நரியின்மீது பாய்ந்து நரியைக் கொன்றது.

ஆகவே, செல்வம் ஆகியவற்றை நாம் எண்ணும்படி அனுபவிக்க முடியாது. நாமொன்று நினைக்க அது ஒன்றாய் முடியும். அற்பர் வீணான ஆசைகொண்டு அப்பேராசையால் தானும் அழிந்துபடுவராம்.

91.நிலைத்தலை நீரில்மூழ்கி நின்ற

விவேக சிந்தாமணி
************************
91.நிலைத்தலை நீரில்மூழ்கி நின்றவ டன்னை நேரே
குலைத்தலை மஞ்ஞைகண்டு கூவெனக் காவில்ஏக

முலைத்தலை யதனைக்கண்டு மும்மதக் கரிவந்துற்ற

தலைத்தலைச் சிங்கமென்றக் களிறுகண் டேகிற்றம்மா.


நிலத்திலிருக்கும் குளத்தில் மூழ்கிக் குளிக்கும் மங்கையைக் கூட்டமாயிருந்த மயில்கள் பார்த்து அவளின் அழகு கண்டு பயந்து "கூ"வென அலறி பக்கத்தில் இருந்த சோலையில் மறைந்தன. அவளின் மார்பகங்களைக் கண்ட மதம் பொழியும் யானைகளின் கூட்டம் தம் இனமென ஓடிவந்துபார்க்கும்போது அவளிடைகண்டு சிங்கமென நினைந்து ஓடிச் சென்றன.
(இப்பாடல் விவேகம் கூறாமையால் இடைச் செருகலென்பர்.)








90.மருவு சந்தணக் குழம்புநன் மண

விவேக சிந்தாமணி
********************
90.மருவு சந்தணக் குழம்புநன் மணமலர் மகிழ்வணிந் தாலும்
சருவ வையமாமனமுள மாதர்பார் சார்வது மாகாதே

பருவ தங்கள் போற் பற்பல நவமணிப் பைம்பொனை யீந்தாலும்

கெருவ மிஞ்சிய மானிட ருறவெணிக் கிட்டலு மாகாதே.


மருவு = பொருந்திய

சந்தணப் பூச்சையும் நறுமணம் பொருந்திய மலர்களையும் பார்ப்பவருக்கு மகிழ்ச்சி அதிகரிக்குமாறு அணிந்து அலங்கரித்துக் கொண்டாலும், எச் சமயம் நமக்குக் கேடு விளையுமோ எனப் பிறரைச் சந்தேகப்படத்தக்க கணிகையர் பக்கம் ஒருவர் நெருங்குவது கூடாது. அதுபோல், மலைபோல நவமணிகளையும் பசும் பொன்னையும் கொடுத்தாலும், தன்முனைப்பு அதிகமுள்ள மனிதனின் நேயத்தை விரும்பி அவர் அருகே நெருங்குதலும் பெருந்தீங்கையே விளைவிக்கும்.

89.தண்டுலாவிய தாமரைப்பொய்கை

விவேக சிந்தாமணி
********************

89.தண்டுலாவிய தாமரைப்பொய்கையில்
மொண்டுநீரை முகத்தருகேந்தினாள்

கெண்டைகெண்டை எனக்கரையேறினாள்

கெண்டைகாண்கிலள் நின்றுதயங்கினாள்.


மங்கையின் கண்ணை வருணித்தல்
****************************************
இப்பாடல் விவேக சிந்தாமணியில் ஏன் உள்ளது? எனும் வினா என்னுள்ளே இருப்பினும், தொடர்பு விட்டுப்போகாவண்ணம் தருகிறோம்.

கொடிகள் படர்ந்துள்ள தாமரைத் தடாகத்தில் உள்ள நீரைக் கையில் எடுத்து முகர்ந்து பார்க்கும்பொழுது, அதில் தெரிந்த தன் முகத்தைக் கண்டாள். அதில் உள்ள கண்களைப் பார்த்து, "கெண்டை! கெண்டை!!" எனக் கூவிக்கொண்டு கரை ஏறினாள். கரை ஏறியபின் பார்க்கும்பொழுது கெண்டையை எங்குமே காண இயலவில்லை.

பிகு: இப்பாடல் இடைச் செருகலாகவும் இருக்கலாம்.

88.கற்பூரப் பாத்திகட்டிக் கத்தூரி

விவேக சிந்தாமணி
*********************
88.கற்பூரப் பாத்திகட்டிக் கத்தூரி
............யெருப்போட்டுக் கமழ்நீர்பாய்ச்சிப்

பொற்பூர வுள்ளியினை விதைத்தாலு
...........மதன்குணத்தைப் பொருந்தக்காட்டும்

சொற்பேதை யர்க்கறிவிங் கினிதாக
..........வருமெனவே சொல்லினாலும்

நற்போதம் வாராதாங் கவர்குணமே
.........மேலாக நடக்குந்தானே.


பச்சைக் கற்பூரத்தால் பாத்தி கட்டி அதில் மணம் கமழும் கத்தூரியை எருவாக்கி இட்டபின்னர் அதில் வெள்ளைப் பூண்டை விதைத்து, நறுமணம் கமழும் பன்னீரைப் பாய்ச்சி அதை வளர்த்தாலும், அது வளர்ந்த பின்னர், தன்னுடைய (உள்ளி)மணத்தையே வீசும். அதுபோல், இவ்வுலகில், பழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளத் தயங்காத முழு மூடருக்கு என்னதான் இனிமையாக நற்புத்தி புகட்டினாலும் நல்ல அறிவு வரவேவராது. அவர்தம் இயற்கையான தீய குணங்களே மேலோங்கி நிற்கும்.

87.கொண்டு விண்படர்கருடன்

விவேக சிந்தாமணி
********************
87.கொண்டு விண்படர்கருடன் வாய்க்கொடு வரிநாகம்
விண்டநாகத்தின் வாயினில் வெகுண்டவன்றேரை

மண்டுதேரையின் வாயினிலகப் படுவண்டு

வண்டுதேனுக ரின்பமே மானிட வின்பம்.


அடுத்தடுத்து வரும் துன்பங்கள் என்னென்ன, இறுதியி மரணம் வரும் என்பதையெல்லாம் தெரிந்திருந்தும், அற்ப இன்பங்களைத் தேடி ஓடி மிகுந்த பாடுபட்டு அவைகளை அநுபவிக்கும் மானிடரே! இவ்வின்பங்கள் நிலையற்றது.

தேனையுண்ணும் வண்டானது தவளை வாயில் சிக்கியது; அந்தத் தவளையோ, கவ்விய வண்டுடனே வரிகளுடன் கூடிய உடலை உடைய நாகத்திடம் சிக்கியது; நாகம் கவ்விய தவளையுடன் செல்லும்போது ஒரு கருடன் வந்து நாகத்தைக் கவ்விப் பறந்தது. இந்த சூழ்நிலையில், நிலையற்ற மானிட இன்பம், தேனைச் சுவைத்துக் கொண்டுள்ள வண்டின் நிலையை ஒத்ததாம்.

86.நானமென்பது மணங்கமழ் பொருளது

விவேக சிந்தாமணி
*********************
86.நானமென்பது மணங்கமழ் பொருளது நாவிலுண்பது வோசொல்
ஊனுணங்குவோய் மடந்தைய ரணிவதே யுயர்முலைத் தலைக்கோட்டில்

ஆனதங்கது பூசினால் வீங்குவதமையுமோ வெனக்கேட்க

கானவேட்டுவச்சேரி விட்டகன்றனர் கடிகமழ் விலைவாணர்.


நானம் = மணம், வாசனை, கத்தூரி
உணங்குவோய் = உண்பவனே

வேடர் குடியிருப்புக்கு ஒரு வர்த்தகன், தான் விற்கும் வணிகப்பொருள்களாம் வாசனைப் பொருட்களுடன் சென்றான். வேடுவருக்கோ, வாசனைப் பொருட்களின் குணம், பண்பு தெரியாது. வர்த்தகன், வேடுவரையழைத்து, "நானம்" விற்க வந்துள்ளேன் என்றுகூறியதற்கு வேடுவர் விழிக்க, வர்த்தகர்,"நானம் என்பது வாசனைப்பொருள்; பூசிக்கொள்ள; உண்பதற்கு அல்ல" என்றார். பின்னர்,"மாமிசம் உண்பவர்களே! இப்பொருட்களை, மங்கையர் தங்களுடைய உயர்ந்த தனங்களிடையே பூசிக்கொள்ளும் பொருள்" என்றனர். அதற்கு வேடுவரோ,"அப்படிப் பூசிக்கொண்டால், வீக்கம் அமுங்கிவிடுமோ" என்றனர். இப்படி அருமை தெரியாத இடத்தில் வணிகம் செய்ய வந்தோமே என நொந்துகொண்டு, அவ்விடம் விட்டு அகன்றனர், வணிகர்.

அருமை, பெருமை தெரியாதோரிடம், அவைகளை எடுத்துச் சொல்லியும் ஒரு பயனும் விளயப்போவதில்லை. ஒதுங்கிவிடுதலே மேல்.

85.சேய்கொண்டா ரும்கமலச் செம்மலுடனே

விவேக சிந்தாமணி
*********************
85.சேய்கொண்டா ரும்கமலச் செம்மலுடனே யரவப்
பாய்கொண்டா ரும்பணியும் பட்டீ சுரத்தானே

நோய்கொண்டா லும்கொளலாம் நூறுவய தாமளவும்

பேய்கொண்டா லும்கொளலாம் பெண்கொள்ள லாகாதே.


சேய்=சிவந்த
பணியும் = தொழில்புரியும்

பட்டீசுவரத்தில் எழுந்தருளியிருந்து, சிவந்த இதழுடைய தாமரை மலரில் வீற்றுள்ள பெருமனுடனும்(பிரமனும்), ஆதிசேடன் எனும் பாம்பின் மீது பள்ளிகொண்ட எம்பெருமாளாம் திருமாலுடனும் சேர்ந்து மூன்று தொழில்களையும் நடத்தும் அப்பனே!

ஒருவன் நூறு வயதளவு வரை வாழ்ந்து, நோயென்னும் பிணிகொண்டு வாழ்ந்தாலும் வாழலாம். அதுவன்றி, பேயை ஒன்றைத் தமது உடைமையாக்கி, அத்துடன் வாழ்ந்தாலும் வாழலாம்.

ஆனால், மனதளவால் மாறுபட்ட ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்து அவளுடன் வாழ்வது மிகக் கொடிதாகையால், அத்தகைய பெண்ணைக் கொள்ளலாகாது.

84.கோளரி யடர்ந்தகாட்டிற் குறங்கில்

விவேக சிந்தாமணி
*********************
84.கோளரி யடர்ந்தகாட்டிற் குறங்கில்வைத் தமுதமூட்டித்
தோளினிற் றூக்கிவைத்துச் சுமந்து பேறாவளர்த்த

ஆளனைக் கிணற்றிற்றள்ளி யழகிலா முடவர்சேர்ந்தாள்

காளநேர்க் கண்ணினாரைக் கனவிலும் நம்பொணாதே.


நற்குணம் இல்லாத மங்கை, முன்னொரு காலத்தில் தளர்ந்திருந்தபோது, தன்னை மடியில்(துடையில்) வைத்து உணவைத் தன் கையால் பாசத்தோடு ஊட்டி, அன்புமிகுதியால் தன்னைத்தன் தோளின்மீது தூக்கி வைத்துச் சுமந்து காப்பாற்றி வளர்த்த கணவனை, கொலை செய்வதைத் தன் தொழிலாய் உடைய சிங்கங்கள் நிறைந்து வாழும் காட்டில், நன்றி மறந்து கிணற்றிலே தள்ளிக் கொலை செய்துவிட்டு, காலில்லாத ஆசைக்குரியவனுடன் சேர்ந்து மகிழ்ந்தாள். ஆகையால், இத்தகைய கொடிய நஞ்சைப்போன்ற கண்களுடைய வஞ்சக மங்கைகளைக் கனவில்கூட நம்பக்கூடாது.

83.உண்ணல்பூச்சூடனெஞ் சுவத்த

விவேக சிந்தாமணி
*********************
83.உண்ணல்பூச்சூடனெஞ் சுவத்தலொப்பனை
பண்ணலெல்லாமவர் பார்க்கவேயன்றோ?

யண்ணல்தன்பிரிவினை யறிந்துந்தோழிநீ

மண்ணவந்தனையிது மடமையாகுமால்.


என்னுயிர்த் தோழியே! உலகில் கற்பிற் சிறந்த பெண்கள் இனிமையுடைய உணவுப் பண்டங்களை உண்ணுதலும், வாசனை மிகுந்த மலர்களை அணிந்து கூந்தல் முடித்தலும், மனமகிழ்ச்சி, முகமலர்ச்சியோடு இருத்தலும் மற்றும் அழகிய ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து கொள்ளுதலும், தன் மனதுக்கு இசைந்த கணவன் கண்டு மகிழவே. அப்படி இருக்க, பெருமையிற் சிறந்த என் கணவன் தற்போது என்னைவிட்டு அகன்றிருப்பது தெரிந்தும், என்னை அலங்காரம் செய்ய வந்திருப்பது உன் அறியாமையால் அல்லவா?

82.கன்மனப் பார்ப்பார் தங்களை

விவேக சிந்தாமணி
********************
82.கன்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக்
............காகத்தை யென்செயப் படைத்தாய்?
துன்மதி வணிகர் தங்களைப் படைத்துச்
...........சோரரை யென்செயப் படைத்தாய்?
வன்மன வடுகர் தங்களைப் படைத்து
..........வானர மென்செயப் படைத்தாய்?
நன்மனைதோறும் பெண்களைப் படைத்து
.........னமனையு மென்செயப் படைத்தனையே?

வேதியரில் கல்போன்ற மனதையுடையவரையும், காகத்தையும், வணிகருள் பிறரை ஏமாற்றுபவரையும், கெட்ட மனத்தை உடையவரையும், திருடரையும், வலிய நெஞ்சத்தை உடைய வடுகரையும், குரங்கையும், நல்ல இல்லம்தோரும் பெண்களைப் படைத்து, அத்துடன் உயிரை வாங்கும் நமனையும் ஏன் படைத்தாய், நான்முகனே?

இப்படியல்லாது, பின்வருமாரும் பொருள் கொள்வாருண்டு:

வேதியரில் கல்போன்ற மனதையுடையவரைப் படைத்தாய்; பின் காகத்தை ஏன் படைத்தாய்?
வணிகருள் பிறரை ஏமாற்றும் வணிகரைப் படைத்துப் பின் திருடரை ஏன் படைத்தாய்?
கெட்ட மனத்தை உடையவரையும், வலிய நெஞ்சத்தை உடைய வடுகரையும் படைத்துப் பின், குரங்கையும் ஏன் படைத்தாய்?
நல்ல இல்லம்தோரும் பெண்களைப் படைத்துப் பின் உயிரை வாங்கும் நமனையும் ஏன் படைத்தாய், நான்முகனே?

81.உணங்கி யொருகால் முடமாகி

விவேக சிந்தாமணி
**********************
81.உணங்கி யொருகால் முடமாகியொருகண் ணின்றிச் செவியிழந்து
வணங்கு நெடுவா லறுப்புண்டு மன்னு முதுகில் வயிறொட்டி

அணங்கு நலிய மூப்பெய்தி யகல்வா யோடு கழுத்தேந்திச்

சுணங்கன் முடுவல் பின்சென்றா லியாரைக் காமன் றுயர்செய்யான்?


காமத்தால் உடல் மெலிந்து, ஒருகால் நொண்டியாகி, ஒரு கண்ணில்லாது, அறுபட்டதால் செவிகள் இல்லாது, வளைந்த நீண்ட வால் அறுக்கப்பட்டு முதுகுடன் வயிறு ஒட்டிய, மூப்பு அடைந்து அழகு குன்றிய, அகன்ற வயுடன் கூடிய கழுத்தை உடைய ஒரு ஆண் நாயும்கூட ஒரு பெண் நாயின் பின் அலையும். அப்படிக் காம வேதனையினால் அலையுமேயானால், மன்மதன் இவ்வுலகில் யாரைத்தான் துன்புறுத்த மாட்டான்? உலகில் மன்மதன் எத்தகையவர் மனத்தையும் கலங்க வைத்துத் துயரூட்டுவான்.

80.மடுத்தபாவாணர் தக்கோர் மறை

விவேக சிந்தாமணி
*********************
80.மடுத்தபாவாணர் தக்கோர் மறையவ ரிரப்போர்க்கெல்லாம்
கொடுத்தவர் வறுமையுற்றார் கொடாதுவாழ்ந் தவரார்மண்மேல்

எடுத்து நாடுண்டநீரு மெடாதகாட் டகத்துநீரு

மடுத்தகோ டையிலேவற்றி யல்லதிற் பெருகுந்தானே.


நாட்டிலுள்ள மனிதர்கள் எடுத்துக் குடித்த ஊரையடுத்துள்ள தடாக(குள) நீரும், அவர்களால் குடிக்க இயலாத காட்டில் உள்ள குளத்து நீரும், மனிதன் பருகுவதால் குறைவதுமில்ல; பயன்படுத்தாதால் கூடுவதும் இல்லை. அடுத்துவரும் வேனில்(கோடை) காலத்தே வெப்பத்தால் அந்த நீர்நிலைகள் வற்றி, அதன்பின் வரும் கார்(மழை) காலத்தில் நிறையும். இவைபோலவே, தம் மனத்திலே நிறைந்த பாடல்களால் வாழக்கூடிய புலவருக்கும், தகுதியுடைய முனிவருக்கும், மறைகளை நன்குணர்ந்து ஓதிவரும் மறையவருக்கும், பொருளில்லாதவருக்கும், அவர்தம் தகுதி அறிந்து தம் கையில் உள்ளதைக் கொடையாய்க் கொடுத்து வறுமைநிலை அடைந்தோர் யார்? ஒருவருமிலர். ஒருவருக்கும் ஒன்றும் ஈயாக்கருமியாய் இருந்து அதனால் வாழ்ந்தோர் யார்? ஒருவரும் இல்லை. பழவினைப் பயனால் தாழ்வும் வாழ்வும் நேருமேயன்றி, கொடுப்பதாலும், கொடாமல் இருப்பதாலும் நேருவதில்லையாம்.

79.நிலைதளர்ந்திட்டபோது நீணிலத்து

விவேக சிந்தாமணி
*********************
79.நிலைதளர்ந்திட்டபோது நீணிலத்துறவுமில்லை
சலமிருந்தகன்றபோது தாமரைக்கருக்கன் கூற்றம்

பலவனமெரியும்போது பற்றுதீக் குறவாங்காற்று

மெலிவது விளக்கேயாகில் மீண்டுமக் காற்றேகூற்றாம்.


நீர் நிறைந்திருந்தபோது குளத்தின்மேலுள்ள தாமரை சூரிய ஒளியால் செழித்து வளர்ந்திருக்கும். ஆனால் நீர் வற்றிய உடனே, அந்தச் சூரிய ஒளியே(வெப்பம்) தாமரைக்கு எமனாகிவிடும். வெப்பம் தாங்காது தாமரை அழிந்துபடும். மழை முதலிய நல்ல பயன்களை கொடுக்கக்கூடிய காடு தீப்பற்றி எரியுங் காலத்தில், பற்றி எரியும் தீக்குக் காற்று துணைநின்று எரிவதை அதிகப்படுத்தும்; அப்பெரு நெருப்பானது மெலிவடைந்து சிறிய விளக்கின் தீச்சுடராகிவிட்டால், அந்த காற்றே அதை அணைக்கும் எதிரியாகிவிடும். இவைகளைப்போல், இப்பரந்த உலகில், மக்களின் உயர்ந்தநிலை கெட்டுத் தாழ்ந்த நிலை அடையும்பொழுது யாரெல்லாம் உதவிபெற்று, உயர்ந்து துணை நின்றார்களோ அவர்களெல்லாம் பகையாகி ஒதுங்கி விடுவர்.

78.தாய்பகை பிறர்நட்பாகில் தந்தைகடன்

விவேக சிந்தாமணி
********************
78.தாய்பகை பிறர்நட்பாகில் தந்தைகடன் காரனாகில்
மாய்பகை மனைவியாரும் மாவழ குற்றபோது

பேய்பகை பிள்ளைதானும் பெருமைநூல்கல்லா விட்டால்

சேய்பகை யொருவர்க்காகு மென்றனர் தெளிந்தநூலோர்.


தாய்க்கு தன்மீது அன்பில்லையெனில் தனக்குத் தாயும் பகையாவாள். கடனை வாங்கிவிட்டுத் தன்னை அக்கடனைக் கட்டச் சொன்னால் கடன் வாங்கிய தகப்பனும் பகையாம். மிகுந்த அழகுள்ள மனைவியும் நல்லறிவை இழந்திருக்கப் பேய் ஆவாள்; அப்பொழுது அவளும் பகையே. ஞானமுண்டாக்கும் அறிவுடைய நூல்களைக் கற்காத மகனும் பகையாவான். இது நூல்களை நுணுகி ஆராய்ந்தது தெளிந்து உணர்ந்தோரின் கருத்தாம்.

77.ஆவீன மழைபொழிய வில்லம்வீழ

விவேக சிந்தாமணி
*********************
77.ஆவீன மழைபொழிய வில்லம்வீழ
..........அகத்தடியாள் மெய்நோவ வடிமைசாவ

மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
.........வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
கோவேந்த ருழுதுண்ட கடமைகேட்கக்
........குருக்கள்வந்து தட்சணைக்குக் குறுக்கேநிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்கப்
........பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே.

இவ்வுலகில் பாவியாய் இருப்பவன் படும் துன்பங்கள்:
தன் பசு கன்றுபோட அதற்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதற்கு இடையூறாக விடாது மழைபொழிய, அம்மழையால் தான் குடியிருக்கும் வீடு இடிந்து விழுகிறது.

அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தன் தருத்தரித்த மனைவி, பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறாள். இதற்கு என்ன செய்யலாம் என்று கலங்கித் தவிக்கும் நேரத்திலே, தன் (அடிமை) வேலைக்காரப் பெண் இறந்துபோக, அது விதை விதைக்கும் பருவமாதலின் நிலத்தில் ஈரம் காய்துவிடுமே என்று எண்ணி அடிமைப்பெண்ணின் சடலத்தை அப்படியே போட்டுவிட்டு விதையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான்.

அப்படிப் போகும் வழியில் கடன் கொடுத்தவன் அவனை மறித்துக் கடனைக் கொடுத்துவிட்டுப் போ என்கிறான்.

அப்போது அரசனுக்காக வரி வசூல் செய்பவன் தீர்வை செலுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்த, அந்த நேரத்திலே இறைவனுக்கு பூசை செய்ததற்காகப் பணம் கேட்டு குருக்கள் நிற்கிறார்.

இக்கட்டான நிலையில், கவிஞர்கள் அவனைப்பாடிப் பரிசில் கேட்கின்றனர்.
இங்ஙனம் பல துன்பங்கள் படுகின்ற பாவியின் துன்பம் பார்த்துப் பொறுக்க இயலாது.

இப்பாடலை இப்படியும் சொல்கிறார்கள்:

அகத்தடியாள் மெய்நோவ வடிமைசாவ
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ளச்
சாவோலை கொண்டொருவ னெதிரேசெல்லத்

தள்ளவொணா விருந்துவரச் சர்ப்பந்தீண்டப்

பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்கப்
பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே.

தன் பசு கன்றுபோட அதற்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதற்கு இடையூறாக விடாது மழைபொழிய, அம்மழையால் தான் குடியிருக்கும் வீடு இடிந்து விழுகிறது. அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தன் தருத்தரித்த மனைவி, பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறாள். இதற்கு என்ன செய்யலாம் என்று கலங்கித் தவிக்கும் நேரத்திலே, தன் (அடிமை) வேலைக்காரப் பெண் இறந்துபோக, அது விதை விதைக்கும் பருவமாதலின் நிலத்தில் ஈரம் காய்துவிடுமே என்று எண்ணி அடிமைப்பெண்ணின் சடலத்தை அப்படியே போட்டுவிட்டு விதையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான். அப்படிப் போகும் வழியில் கடன் கொடுத்தவன் அவனை மறித்துக் கடனைக் கொடுத்துவிட்டுப் போ என்கிறான். அப்போது நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த செய்தி கொண்டுவருபனிடம் விவரம் கேட்டு அறிவதற்குமுன், தட்ட முடியாத விருந்தினர் வீட்டிற்கு வருகிறான்.
அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டுத் தொடர்ந்து வயலுக்குப் போகும்போது அவனைப் பாம்பு கடித்து மயங்கி விழும் நிலையில், கவிஞர்கள் அவனைப்பாடிப் பரிசில் கேட்கின்றனர்.
இங்ஙனம் பல துன்பங்கள் படுகின்ற பாவியின் துன்பம் பார்த்துப் பொறுக்க இயலாது.

76.அன்னம் பழித்தநடை யாலம் பழித்த

விவேக சிந்தாமணி
*********************
தலைவன் வருந்துதல்
**************************


76.அன்னம் பழித்தநடை யாலம் பழித்த விழி
...............யமுதம் பழித்த மொழிகள்
பொன்னம் பெருத்தமுலை கன்னங் கறுத்தகுழல்
..............சின்னஞ் சிறுத்தவிடை பெண்
என்னெஞ் சுருக்கவவ டன்னெஞ்சு கற்றகலை
.............யென்னென் றுரைப்பதினி நான்
சின்னஞ் சிறுக்கியவள் வில்லங்க மிட்டபடி
.............தெய்வங்களுக் கபயமே!

அன்னத்தைப் பழிக்கும் நடையும் நஞ்சைப் பழிக்கும் வேல்போன்ற கண்களும், அமுதத்தைப் பழிக்கும் மொழிகளும், பொன்போலும் பெருத்த தனங்களையும், கன்னங்கரிய கூந்தலையும், சின்னஞ் சிறிய இடையும் உடைய பெண்ணானவள் என் நெஞ்சை உருக்க, அவள் கற்ற மாயக் கலைகளையும், இனி நான் என்ன சொல்லுவேன்? அச் சிறுக்கியால் நான் அடைந்த தொல்லைகட்குத் தெய்வத்தை நோக்கி முறையிடுவது அல்லாது என்னால் செய்யத் தக்கது யாது?

75.நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த

விவேக சிந்தாமணி
*********************
75.நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த
.................பெரியோர்க ணிமலன்றாளைக்
கிட்டையிலே தொடுத்து முத்தி பெருமளவும்
.................பெரியசுகங் கிடைக்குங்காம
வெட்டையிலே மதிமயங்குஞ் சிறுவருக்கு
................மணம்பேசி விரும்பித்தாலிக்
கட்டையிலே தொடுத்து நடுக்கட்டையிலே
...............கிடத்துமட்டுங் கவலைதானே.

மனதை ஒருநிலைப்படுத்தும் யோகத்திலே அசைவற்று நின்று, பற்று நீக்கி மனதால் துறவு நிலை அடைந்த பெரியோர்கள் மலமற்ற இறையின் திருவடிகளை முதன்முதலில் தவத்திலே சேரும்பொழுது மகிழ்ச்சி தொடங்கி இறுதியில் எல்லாவற்றையுங் கடந்து வீடுபேறு அடையும் வரையிலும் பேரின்பத்தில் மூழ்கித் திளைத்து இருப்பர். காமப்பேயால் சித்தங்கலங்கித் தடுமாறும் சிறியோருக்கு, தாய்தந்தையர் திருமணம்பேசி முடிவெடுத்து, மணப்பெண்ணுக்குத் தாலி அணிவித்தது முதல் துன்பம் தொடங்கிப் பின்னர் அவன் இறந்து இடுகாட்டில் சடலம் எரிக்கும் வரையில் அத்துன்பம் தொடரும்.

74.நற்குண முடையவேந்தன் நயந்து

விவேக சிந்தாமணி
********************
74.நற்குண முடையவேந்தன் நயந்து சேவித்தலொன்று
பொற்புடை மகளிரோடு பொருந்தியே வாழ்தலொன்று

பற்பல ரோடுநன்னூல் பகர்ந்து வாசித்தலொன்று

சொற்பெறு மிவைகண்மூன்று மிம்மையிற் சொர்க்கந்தானே.


நல்ல குணம் பொருந்திய அரசனை விரும்பிப் பார்த்தலும்(அவனிடம் பணிபுரிதலும்), நற்குணமிகுந்த அழகிய இல்லாளுடன் இல்லறம் நடத்தலும், கல்வியிற் சிறந்துவிளங்கும் குருவுடனும் அவர்தம் மாணாக்கரொடும் நல்ல பல நூல்களை ஐயமின்றிக் கேட்டுப் பயில்தலும், ஆகிய இம்மூன்று காரியங்களும் இவ்வுலகில் இப்பிறப்பில் சொர்க்கமே.

73.மண்டலத்தோர்கள் செய்த பாவ

விவேகா சிந்தாமணி
**********************
73.மண்டலத்தோர்கள் செய்த பாவமன் னவரைச்சேருந்
திண்டிரன் மன்னர்செய்த தீங்குமந் திரியைச்சேரும்

தொண்டர்கள் செய்ததோடந் தொடர்ந்துதங் குருவைச்சேரும்

கண்டன மொழியாள்செய்த கன்மமுங் கணவர்க்காமே.


நாட்டில் உள்ளவர்கள் செய்த தீவினைகள், அவர்களை ஆளும் மன்னனைச் சாரும் - மக்களைச் சரியாக வழி நடத்தாததால். வலிமையும் வெற்றியும் உடைய மன்னன் செய்த தீவினைகள், நல்வினை தீவினைகளை ஆய்ந்து அரசனை நல்வழி நடத்தாததால் மந்திரியைச் சாரும். அதுபோலவே, சீடர்கள் செய்த பாவம் குருவைச் சேரும். கணவன் தன் மனைவியைச் சரியான பாதையில் வழி நடத்தாததால், கற்கண்டு போல மொழியுடைய மனைவி செய்த தீவினை கணவனுக்காம்.

72.மண்ணார் சட்டி கரத்தேந்தி

விவேக சிந்தாமணி
*********************
72.மண்ணார் சட்டி கரத்தேந்தி மரநாய் கௌவுங் காலினராய்
அண்ணாந்தேங்கி யிருப்பாரை
யறிந்தோ மறிந்ததோ மம்மம்மா
பண்ணார் மொழியார் பாலடிசில்
பைம்பொற் கலத்தில் பரிந்தூட்ட
உண்ணா நின்ற போதொருவர்க்
குதவா மாந்த ரிவர்தாமே.

மண்ணால் செய்த சட்டியைக் கையிலேந்தி தெருநாய் விரட்டிக் காலைக் கெளவ, அண்ணாந்து பசியினால் ஏக்கமுற்று உணவு(பிச்சை) எங்கே கிடைக்கும் என வாடியிருக்கிற பிச்சைக்காரரைத் தெரிந்துகொண்டோம். அவர் யாரெனில், மனதை மயக்கும் இசை போல் சொற்களை உடைய மனைவியர், பொன் தட்டில் பால் சோற்றைத் தம் கணவருக்கு ஊட்டும்பொழுது, பிச்சை கேட்டு வந்த ஒருவருக்கு அன்னம் அளிக்காத மாந்தர் ஆவார். இவ்வளவு செல்வம் இருந்தும் பிச்சையிடாதோரே அடுத்த பிறவியில் பிச்சை எடுப்பவராம்.

71.ஏரிநீர் நிறைந்தபோதங் கிருந்தன

விவேக சிந்தாமணி
*********************
71.ஏரிநீர் நிறைந்தபோதங் கிருந்தன பட்சியெல்லாம்
மாரிநீர் மறுத்தபோதப் பறவையங் கிருப்பதுண்டோ?

பாரினை யாளும்வேந்தன் பட்சமு மறந்தபோதே

யாருமே நிலையில்லாம லவரவ ரேகுவாரே.


ஒரு குளத்தில் நீர் பெருகியிருக்கும்பொழுது அதிலே பறவைகள் எல்லாம் இரை கிடைப்பதால் கூடியிருக்கும். மழையின்றி, அக்குளத்தில் நீர் வற்றியபோது, பறவைகளுக்கு இரை கிடைப்பது அரிதாகையால் அவை பறந்துவிடும். அதுபோல, நாட்டை ஆளும் அரசன் இரக்கமுள்ளவனாக இருந்தால், நமக்கெல்லாம் நல்லது நடக்குமென எண்ணிக் குடிமக்கள் அந்நாட்டில் நிறைந்து இருப்பார்கள். அன்பு செய்யவேண்டும் எனும் எண்ணத்தை அரசன் மறந்தால், மக்களும் இடம்பெயர்ந்து போய்விடுவார்கள்.

ஒளவையின் மூதுரை சொவது:

"அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு"


70.துப்புறச் சிவந்தவாயா டூயபஞ் சணை

விவேக சிந்தாமணி
*********************

70.துப்புறச் சிவந்தவாயா டூயபஞ் சணையின்மீதே
ஒப்புறக் கணவனோடு யோர்லீலை செய்யும்போது

கற்பகஞ் சேர்ந்தமார்பில் கனதன மிரண்டுந்தைத்தே

அப்புற முருவிற்றென்றே யங்கையாற் றடவிப்பார்த்தாள்.


பவளம் போன்ற சிவந்த வாயை உடையவள் பரிசுத்தமான பஞ்சணையில் தன் கணவனோடு உல்லாசமாய்ப் புணர்ச்சி செய்யும்பொழுதில், கணவனின் இளமை ததும்பும் மார்பினில் தன்னுடைய பருத்த கூர்மையான தனங்களால் அம்பு பாய்ச்சுவதுபோலக் கட்டித்தழுவிப் பின், அது எங்கே தன் கணவனின் மார்பைப் பிளந்து முதுகுப்புறம் வந்துவிட்டதோவென ஆரத் தழுவும் சாக்கில் பின்புறம் தடவிப் பார்த்தாள்.

இப்பாடல் இடைச் செருகலென்பார் சிலர்.

69.நாரிகள் வழக்கதாயி னடுவறிந் துரைப்பார்

விவேக சிந்தாமணி
*********************
69.நாரிகள் வழக்கதாயி னடுவறிந் துரைப்பார் சுத்தர்
ஏரிபோல் பெருகிமண்மே லிருகணும் விளங்கிவாழ்வார்

ஓரமே சொல்வாராகி லோங்கிய கிளையுமாண்டு

தீரவே கண்களிரண்டும் தெரியாது போவர்தாமே.


தங்கள் வழக்கை எடுத்துரைக்கத் தெரியாத ஏழைப்பெண்களின் வழக்காயிருந்தாலும், அதை நன்கு ஆய்ந்து அறிந்து நடுநிலை தவறாது தீர்ப்பு அளிக்கும் தூய்மை உடையோர் நீர்நிறைந்த குளம்போல் நன்மைகள் பெருகி இம்மண்ணுலகில் இருகண்களும் பிரகாசமாக ஒளிவீச நீண்டகாலம் வாழ்ந்திருப்பர். ஒருபக்கம் சார்ந்த தீர்ப்பை அளிப்பவர்கள், தன் சுற்றமாகிய கிளைகள் மாண்டு இரு கண்களும் கெட்டுத் துன்பம் அடைந்து இறப்பார்கள்.

68.தந்தையுரை தட்டினவன் றாயுரை

விவேக சிந்தாமணி
*********************
68.தந்தையுரை தட்டினவன் றாயுரை யிகழ்ந்தோன்
அந்தமுறு தேசிகர்த மாணையை மறந்தோன்

சந்தமுறு வேதநெறி தாண்டினவிந் நால்வர்

செந்தழலின் வாயினிடை சேர்வது மெய்கண்டீர்.


தந்தை சொல் மிக்க மந்திரமில்லை; தாய் சொல்லைத் தட்டாதே! என்னும் மூதுரையை மறந்தவர்களுக்கு அறிவுரை. தந்தை சொல் தட்டியவன், தாய் சொல்லை இகழ்ந்தவன், அழகு பொருந்திய ஆசானின் கட்டளையை மறந்து மீறியவன், நற்குணம் நிறைந்த நீதிநூல்களின் அறிவுரைகளைத் தாண்டியவன் ஆகிய நால்வரும் சிவந்த தீயைப்போன்ற நரகுலகில் வீழ்வார்கள்; கண்டீரோ!

67.மெய்யதைச் சொல்வாராகில் விளங்கிடு

விவேக சிந்தாமணி
********************
67.மெய்யதைச் சொல்வாராகில் விளங்கிடு மேலுநன்மை
வையக மதனைக்கொள்வார் மனிதரிற் றேவராவார்

பொய்யதைச் சொல்வாராகில் போசன மற்பமாகும்

நொய்யரி சியர்களென்று நோக்கிடா ரறிவுள்ளோரே.


உண்மைகள் பேசும் ஒருவரிடத்தே நன்மைகள் யாவும் அவரிடம் அண்டி ஒளிபெற்று விளங்கும். உலகிலுள்ளோர், அவரை மேன்மையுடையவர் என ஏற்றுக்கொள்வார். அஃதோடன்றி, அவர்கள், மனிதரில் தேவர்களைப்போல் விளங்குவர். மெய்கலவா பொய்யே பேசித்திரிபவர்களுக்கு, உண்ண உணவு கிட்டாது. அறிவுடைய ஆன்றோர்கள் அவர்களை நொய்யரிசி போன்ற அற்பர் என்று ஒதுக்கிக் கண்ணால்கூடத் திரும்பிப் பாரார்.

66.இடுக்கினால் வறுமையாகி

விவேக சிந்தாமணி
*********************
66.இடுக்கினால் வறுமையாகி யேற்றவர்க் கிசைந்தசெல்வங்
கொடுப்பதே மிகவுநன்று குற்றமேயின்றி வாழ்வார்

தடுத்ததை விலக்கினோர்க்குத் தக்கநோய் பிணிகளாகி

உடுக்கவே உடையுமின்றி யுண்சோறு மருமையாமே.


வறுமையால்(இல்லாமையால்) வந்து இரப்பவருக்கெல்லாம் அவர்தம் மனம் குளிரப் பொருத்தமானவைகளெல்லாம் கொடுத்தலே நல்லது. இத்தகைய பண்புடையோர் ஒரு குறையுமின்றி நீடுவாழ்வார். அத்தருமச் செயலைத் தானும் செய்யாது, அடுத்தவரையும் செய்யவிடாது தடுக்கும் கருமிகட்குத் தகுந்த நோய்நொடி உண்டாகி, உடுக்க உடையும் உண்ண உணவுமின்றித் தவிப்பர்.

65.குருவுப தேசமாதர் கூடிய

விவேக சிந்தாமணி
*********************
65.குருவுப தேசமாதர் கூடிய வின்பந்தன்பால்
மருவிய நியாயங்கல்வி வயதுதான் செய்ததர்மம்

அரியமந் திரம்விசார மாண்மையிங் கிவைகளெல்லாம்

ஒருவருந் தெரியவொண்ணா துரைத்திடி லழிந்து போமே.


தனக்கு மட்டிலும் ஞானாசிரியன் உபதேசித்த உபதேசம், மடந்தையருடன் புணர்ந்தபோது கிட்டிய இன்பம், மனதில் பொருந்திய நியாயம், தான் பெற்ற உயர்ந்த கல்வி, ஆயுள், மிகுதியாய்ச் செய்த தருமம், தன்னிடம் இருக்கும் அரிய மந்திரம், துன்பம், வல்லமை ஆகியனவற்றை வெளியிடல் ஆகாது; வெளியிடின் அழிந்து போகும்.

குரு உபதேசித்த மந்திரத்தை வெளியிட்டால் அதற்கு மதிப்பில்லாமல் போகும். மடந்தையருடன் புணர்ந்தபோது கிட்டிய இன்பத்தை வெளியிட, அதனால் தூற்றுதலும் பகையுமுண்டாகும். ஒருவர் தம் நியாயமான தீர்ப்பை முதலிலேயே கூறிவிட்டால், தனக்கு வேண்டியவர்கள் அதை மாற்றுமாறு கட்டாயப்படுத்த, அதனால் நிலை தடுமாறும் நிலை வரும். தன் கல்வித் தகுதியை மூடரிடம் கூற, அதை ஏற்றுக்கொள்ளாது கூறியவரையும் பழிப்பார்கள். மிகுதியாய்ச் செய்த தருமத்தை வெளியிட, அதைத் தற்புகழ்ச்சி என மற்றவர் பழிப்பார்கள். துன்பத்தை வெளியிட, மற்றவர் இகழ்வார்கள். வல்லமையை வெளியிட,"ஆண்மையில்லாமையால் வாய் வீரம் பேசுகிறார்" என்னும் ஏச்சுக்காளாக நேரிடும்.

64.அறிவுளோர் தமக்குநாளு மரசருந் தொழுது

விவேக சிந்தாமணி
*********************
64.அறிவுளோர் தமக்குநாளு மரசருந் தொழுதுவாழ்வார்
நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ்செய்வார்

அறிவுளோர் தமக்கீயாதோ ரசடது வருமேயாகில்

வெறியரென் றிகழாரென்றும் மேதினி யுள்ளோர்தாமே.


அறிவுடையவர்களுக்கு நாள்தோறும் பிறரை வணங்காத அரசனும் வணக்கம் கூறி கீழ்ப்படுவர். இவ்வுலகில் உள்ள மற்றவரும் உறுதிமாறா அன்புடனே வணங்கிப் பணிவர். அத்தகைய அறிவுடையோருக்கு குற்றம் வந்துசேர்ந்து இன்னல் படுவாராகில் உலகிலுள்ள மேலோர், அவரைப் பித்தர் என்றும் வெறியர் என்றும் என்றைக்கும் இகழமாட்டார்கள். மதியிலாச் செல்வந்தர் மட்டிலுமே அடக்கமுடையாரை அறிவிலி என்று இகழ்வார்கள்.

63.தேளது தீயில்வீழ்ந்தால் செத்திடா

விவேக சிந்தாமணி
**********************
63.தேளது தீயில்வீழ்ந்தால் செத்திடா தெடுத்தபேரை
மீளவே கொடுக்கினால் மெய்யுறக் கொட்டலேபோல்

ஏளனம் பேசித்தீங்குற் றிருப்பதை யெதிர்கண்டாலும்

கோளினர் தமக்குநன்மை செய்வது குற்றமாமே.


தேளானது தீயில் வீழ்ந்துவிடுகிறது; அது இறந்துவிட்டதா இல்லையா எனப் பார்க்க எடுத்தவரை திருப்பிக் கொடுக்கினால் உடலில் பதியக் கொட்டும். அதுபோல, அங்கதம்(ஏளனம்) பேசி அதனால் துன்பமடைந்தவரைக் கண்முன்னே கண்டாலும் திருந்தாது கோள்சொல்லி அலைபவருக்கு நாம் நன்மை செய்தால் அதனால் துன்பமே வரும்.

62.கல்லாத மாந்தரையும் கடுங்கோப

விவேக சிந்தாமணி
*********************
62.கல்லாத மாந்தரையும் கடுங்கோபத்
துரைகளையும் காலம்தேர்ந்து
சொல்லாத வமைச்சரையுந் துயர்க்குதவாத்
தேவரையுஞ் சுருதிநூலில்
வல்லாவந் தணர்தமையுங் கொண்டவனோ
டெந்நாளும் வலதுபேசி
நல்லார்போ லருகிருக்கும் மனைவியையு
மொருநாளு நம்பொணாதே.

கல்வி அறிவில்லாத மனிதர்களையும், கடுங்கோபமுள்ள அரசர்களையும், வருங்கால நிகழ்வுகளை ஆய்ந்து அறிந்து நன்மை தீமைகளை வருமுன் சொல்லாத அமைச்சர்களையும், துன்பம் வந்து அல்லலுறும்போது அத்துன்பங்களை நீக்காத தெய்வங்களையும், வேதநூலின் உள்வயணங்கள் அறியா அந்தணர்களையும், எந்நாளும் வல்லமை பேசி நல்லவர்களைப்போல் கணவனின் அருகிருக்கும் மனையாட்டியையும், ஒரு நாளும் நம்பலாகாதே.

61.தூம்பினிற் புதைத்தகல்லும் துகளின்றி

விவேக சிந்தாமணி
*********************
61.தூம்பினிற் புதைத்தகல்லும் துகளின்றிச் சுடர்கொடாது
பாம்புக்குப் பால்வார்த்தென்றும் பழகினும் நன்மைதாரா
வேம்புக்கு தேன்வார்த்தாலும் வேப்பிலைக் கசப்புமாறா
தாம்பல நூல்கற்றாலுந் துர்ச்சனர் தக்கோராகார்.

பலரும் நடக்கும் வழியில் புதைக்கப்பெற்ற கல்லானது பலருடைய பாதங்களாலும் மிதிபட்டுத் துகள்(பிசிறு) இல்லாது தனக்கு இயல்பாக ஏற்பட்ட களங்களின்றி மாசு நீங்கி, பொன் முதலியன தேய்ந்தால் ஒளிதருவது போல், ஒளி தராது. பாம்புக்குத் தினமும் பால் கொடுத்து நட்புடன் பழகி வந்தாலும் நன்மை தராது. சுவையுடைய தேனைத் தண்ணீருக்குப் பதில் ஊற்றி வேப்பச் செடியை வளர்த்தாலும் அதன் கசப்பு மாறாது. இவைகளைப்போல், எவ்வளவுதான் நீதிநூல்கள் கற்றாலும் தகவிலார் நல்ல மேன்மக்களாக மாட்டார்கள்.

60.பொருளிலார்க் கின்பமில்லை புண்ணிய மில்லை

விவேக சிந்தாமணி
********************
60.பொருளிலார்க் கின்பமில்லை புண்ணிய மில்லையென்று
மருவிய கீர்த்தியில்லை மைந்தரிற் பெருமையில்லை
கருதிய கருமமில்லை கதிபெற வழியுமில்லை
பெருநிலந் தனிற்சஞ்சாரப் பிரேதமாய்த் திரிகுவாரே.

இவ்வுலகில் பொருளில்லா வறியோர்க்கு உலக இன்பமில்லை; பொருளின்மையால் அறம் செய்ய இயலா நிலயில் இருப்பதால் புண்ணியமில்லை; புகழுமில்லை. மற்றைய மனிதர்கள் கூட்டத்தில் நன்மதிப்பில்லை. நினைத்தபடி எச்செயலையும் செய்ய இயலாமை. நற்கதி பெற நல் வழி கிட்டவில்லை. இப்பரந்த உலகில் வறியோர் நடைப்பிணமாக அலைந்து திரிவர்.

59.முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை

விவேக சிந்தாமணி
*********************
59.முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதா னவனைக் கொல்லும்

தடவரை முலைமாதேயித் தரணியிலுள்ளோர்க் கெல்லாம்
மடவனை யடித்தகோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.

மலைபோன்ற பெருத்த தனங்களையுடைய பெண்ணே! அகங்காரங்கொண்ட மூர்க்கன் ஒருவன் கைகால் முடங்கிய(இயலாமையுடன் உள்ள) முடவனைக் கொன்றால், அவனை அவனைவிட வலிய மூர்க்கன் கொல்லுவான்; அல்லது அவனுடை சினமே(முனி) அவனைக் கொல்லும். புத்தியில்லாத ஏழையை(மடவனை) வலியவன் கொன்றால் அவனை மறலியாம் ஏமன் கொல்லுவான். செல்வச் செருக்காலே (செல்வம்)இல்லாதவனை அடித்த கோலே அச்செல்வனை அடிக்கும்.

58.குறைகடல் வறுமையுங் குறத்தி

விவேக சிந்தாமணி
**********************
58.குறைகடல் வறுமையுங் குறத்தி யுண்மையும்
நறையற மருந்தையுண் டிளமை நண்ணலும்
விறைசெறி குழலினாள் வேசைய ராசையும்
அரையரன் பமைவது மைந்து மில்லையே.

வற்றாக் கடல் போன்ற வறுமையும், திருடுவதையே தொழிலாகக் கொண்ட குறத்தியின் சத்தியமும், மருந்துண்டு அடையும் வாலிபப் பருவமும், பரத்தையருக்கு ஒருவன்மேல் மட்டும் ஆசையுண்டாதலும், எல்லோரிடமும் அன்பு செலுத்தவேண்டிய அரசன் ஒருவர்மேல்மட்டும் தனிப்பட அன்பு செலுத்துதலும், இவை ஐந்தும் கிட்டல் அரிது.

57.சந்திரனில்லா வானந் தாமரையில்லா

விவேக சிந்தாமணி
**********************
57.சந்திரனில்லா வானந் தாமரையில்லாப் பொய்கை
மந்திரியில்ல வேந்தன் மதகரி யில்லாச்சேனை
சுந்தரப் புலவரில்லாத் தொல்சபை சுதரில்வாழ்வு
தந்திக ளில்லாவீணை தனமிலா மங்கைபோலாம்.

சந்திரன் இல்லா ஆகாயம், தாமரை இல்லாத தடாகம், மந்திரியில்லா அரசன், மதயானை இல்லாத சேனை, அழகுதமிழ்ப் புலவர் அற்ற சவை, நன்மக்களற்ற வாழ்க்கை, தந்தி நரம்பு இல்லாத வீணை, இவை யாவும் இருதனங்களற்ற மங்கையிடம் பெறும் சுகம் போல் வீணாகும்.

56. மங்குலம் பதினாயிரம் யோசனை

விவேக சிந்தாமணி
**********************
56. மங்குலம் பதினாயிரம் யோசனை மயில்கண்டு நடமாடும்
தங்குமா நூறாயிரம் யோசனை தாமரை முகம்விள்ளும்
திங்களா மதற்கிரட்டி யோசனை யுறச்சிறந்திடு மரக்காம்பல்
எங்கணாயகனு மன்பா யிருப்பவ ரிதயம்விட் டகலாரே.

ஐம்பதினாயிரம் யோசனை தூரத்தில் உள்ள மேகம் கண்டு மயில் நடனமாடும்.
நூறாயிரம் யோசனை தூரத்தில் உள்ள சூரியனைக் கண்டு தாமரை மலரும்.
இருநூறாயிரம் யோசனை தூரத்தில் உள்ள சந்திரனைக் கண்டு செவ்வல்லி மலரும்.
அதுபோல, எவ்வளவு தூரத்தில் இருப்பவராயினும் அன்பராயிருப்பவர்கள் இதயத்தை விட்டு அகலார்.

55. தெருளிலாக் கலையினார் செருக்கு

விவேக சிந்தாமணி
**********************
55. தெருளிலாக் கலையினார் செருக்கு மாண்மையும்
பொருளிலா வறியர் தம்பொறி யடக்கமும்
அருளிலா வறிஞர்தம் மெளன நாசமும்
கருவிலா மங்கையர் கற்பு மொக்குமால்.

தெளிந்த கல்வி அறிவு இல்லாதாவர் செருக்கும், மனவன்மையும், பொருளற்ற ஏழையின் ஐம்பொறிகளின் அடக்கமும், அருள் இல்லா ஞானியின் மவுனமும், கருத்தரிக்கவியலா மங்கையின் கற்பும் பலனற்றதாம்.

மூடனின் செருக்கு இழிவை உண்டாக்கும். ஒருவேளைக் கஞ்சிக்குத் தடுமாறும் ஏழையின் புலனடக்கத்தால் ஒரு பயனுமில்லை. பொருள் இருந்தால்தானே நுகர்வதற்கு. அருள் இல்லாத ஞானி பேசினாலும் அதனால் உலகத்துக்கு எப்பயனுமில்லை.

54. மயில்குயில் செங்காலன்னம்

விவேக சிந்தாமணி
**********************
54. மயில்குயில் செங்காலன்னம் வண்டுகண் ணாடிபன்றி
அயிலெயிற் றரவுதிங்க ளாதவனாழி கொக்கோ
டுயரும்விண் கமலப்பன்மூன் றுருகுணமுடையோர் தம்மை
இயலுரு புவியோர்போற்று மீசனென் றெண்ணலாமே.

மயிலைப்போல் முறைமை, குயிலைப்போல் மதிநுட்பமும் இனந்தழுவிக்கொள்ளும் குணமும், அன்னத்தைப்போல் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ளும் குணமும், வண்டைப்போல் உயர்ந்தவற்றை மட்டுமே நாடும் குணமும், கண்ணாடிபோல் எதையும் ஒளிக்காது மெய்யே பேசும் குணமும், என்ன தடை வந்தாலும் அதைக் கடந்து சேருமிடத்தை எப்படியும் அடையும் பன்றியின் குணமும், சத்தியத்துக்குக் கட்டுப்படும் பாம்பின் குணமும், சந்திரனைப்போல் தமக்குரியாருக்கு குளுமையும் இனிமையும் தரும் குணமும், சூரியனைப்போல் தமக்குரியாரை அஞ்ஞானமாம் துயிலில் இருந்து எழுப்பும் குணமும், கடலைப்போல் சுற்றந்தழுவுதலையும் ஆணை கடவாத் தன்மையும், கொக்கைப்போல் பொறுமை காத்துத் தன் காரியத்தில் குறியாயிருந்து முடிக்கும் குணமும், ஆகாயத்தைப்போல் களங்கமற்று அளந்தறிய முடியாத அறிவு உடைமையும், தாமரை மலர்போல் தமக்குரியாருக்கே முகமலரும் கற்புடைமையும் பொருந்தியவரை உலகத்தவர் போற்றும் இறைவன் எனக் கூறலாம்.

53.கொண்டநற் கலைகளோடுங் குணமில்லா

விவேக சிந்தாமணி

**********************

53.கொண்டநற் கலைகளோடுங் குணமில்லாக் கோதைமாரை
கண்டுவிண்டி ருப்பதல்லாற் கனவிலும் புல்லவொண்ணா
துண்டென மதுவையுண்ண வோவியப் பூவில்வீழ்ந்த
வண்டினம் பட்டபாடு மனிதரும் படுவர்தாமே.

நல்ல சாற்றிறப் பயிற்ச்சியும், நற்குண நலன்களும் இல்லாத பெண்களைக்(பரத்தையர்) கண்ணால் நிதானித்துப் பார்த்து, அவர்களை விலக்க வேண்டும்; கனவிலும் புணர்தல் ஆகாது. அப்படி சேர்ந்தால், அது, எழுதப்பட்ட மலரின் சித்திரத்தில் மதுவுள்ளது என்றெண்ணி வீழ்ந்து வருந்திய வண்டுக் கூட்டங்களின் கதைபோலாகிவிடும்.

52.யானையைச் சலந்தனி லிழுத்த

விவேக சிந்தாமணி
*********************

52.யானையைச் சலந்தனி லிழுத்த வக்கரா
பூனையைக் கரைதனிற் பிடிக்கப் போகுமோ
தானையுந் தலைவரும் தலம்விட் டேகினால்
சேனையுஞ் செல்வமுந் தியங்கு வார்களே.

நீரிலிருக்கும் முதலை அங்கு வந்த யானையைக் கெளவ்விப் பிடித்திழுக்கும். அதுவே நிலத்தில் வந்து பூனையைப் பிடிக்கக் கரைக்கு வராது. அதுபோல், தலைவன்(அரசன்) தன் சேனைகளுடன் தன் பாதுகாப்பான இருப்பிடம் விட்டுச் சென்றால், படைகளும் செல்வமும் நிலைகுலைந்து வலிமையின்றிப் பகைவரிடம் அகப்பட்டு மயங்குவர்.

51.செல்வம்வந் துற்றபோது தெய்வமுஞ்

விவேக சிந்தாமணி

*********************

51.செல்வம்வந் துற்றபோது தெய்வமுஞ் சிறிதும்பேணார்
சொல்வதை யறிந்துசொல்லார் சுற்றமுந் துணையும்பேணார்
வெல்வதே கருமமல்லால் வெம்பகை வலிவென்றெண்ணார்
வல்வினை விளைவும்பாரார் மண்ணின்மேல் வாழுமாந்தர்.

இப்பாடலை இப்படியும் எழுதியுள்ளனர்.

செல்வம்வந் துற்றகாலைத் தெய்வமுஞ் சிறிதும்பேணார்
சொல்வன வறிந்துசொல்லார் சுற்றமுந் துணையும்நோக்கார்
வெல்வதே கருமமல்லால் வெம்பகை வலிதென்றெண்ணார்
வல்வினை விளைவுமோரார் மண்ணின்மேல் வாழுமாந்தர்.

உலகில் வாழும் (அறிவற்ற) மனிடர்க்குச் செல்வம் மிகுதியாக வந்து சேர்ந்தபொழுது கொஞ்சமேனும் தெய்வத்தை நினத்துத் தொழார். தாம் சொல்லும் சொற்களை இன்னதென ஆராய்ந்து அறிந்து சொல்ல மாட்டார்கள். சொல்வதைக்கேட்டுப் பதிலும் கூறார். தம் உறவினையும் நண்பர்களையும் தம்முடையவர் எனக் கருதிப் பேணமாட்டார். எப்பொழுதும் வெற்றியைப் பற்றி எண்ணுவார்களே தவிற, பகவரின் வலிமையைச் சிறிதேனும் ஆராய்ந்து அறியமாட்டார்கள். மேலும் வலிய பாவத்தின் விளைவையும் எண்ணிப் பார்க்கமாட்டார்கள்.

50.ஆசாரஞ் செய்வாராகி லறிவொடு

விவேக சிந்தாமணி
**********************

50.ஆசாரஞ் செய்வாராகி லறிவொடு புகழுமுண்டாம்
ஆசாரம் நன்மையானா லவனியிற் றேவராவார்
ஆசாரமஞ் செய்யாராகி லறிவொடு புகழுமற்றுப்
பேசாமற் பேச்சுமாகிப் பிணியொடு நரகில்வீழ்வார்.

ஒழுக்கத்துடன் வாழ்வாராகில் அவருக்கு அறிவும் புகழும் கிட்டும். ஒழுக்கத்துடன் வாழ்ந்து நன்மை செய்தால் உலகில் தேவராவார்.
ஒழுக்கத்துடன் வாழாதோர் அறிவு, புகழ் எல்லாம் அற்றுப் பேசமுடியாத நிலைக்காட்பட்டு (ஊமை) இம்மையில் பிணியுற்று நரகில் வீழ்வர்.

49.கழுதை காவெனக் கண்டு

விவேக சிந்தாமணி
*********************

49.கழுதை காவெனக் கண்டுநின் றாடியவலகை
தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட வதுதான்
பழுதிலா நமக்கார் நிகராமெனப் பகர்தல்
முழுது மூடரை மூடர்கொண்டாடிய முறைபோல்.

அறிவற்ற மூடர்களை அவரினுந் தாழ்ந்த முழுமூடர்கள் கொண்டாடிப் புகழ்வது எவ்வாறாயின், ஒரு கழுதை காவென்று கத்தியதைப் பார்த்து அதற்கேற்ப நின்றாடிய பிசாசு திரும்பவும் அக்கழுதையைத் துதித்து வணங்கி மீண்டும் பாடச் சொல்ல, அதற்கு அக்கழுதையோ குற்றமில்லாக் குரலை உடைய நமக்கு ஒப்பானவர் யாருமில்லை எனச் சொல்வது போலாம்.

48.மானமுள் ளோர்கடன்னோர்

விவேக சிந்தாமணி
**********************

48.மானமுள் ளோர்கடன்னோர் மயிரறி னுயிர்வாழாத
கானுறு கவரிமான்போர் கனம்பெறு பிகழேபூண்பார்
மானமொன் றில்லார்தாமு மழுங்கலாய்ச் சவங்களாகி
ஈனமாங் கழுதைக்கொப்பா யிருப்பரென் றுரைக்கலாமே.

தன்னிடமுள்ள ஒருமுடி உதிர உயிரை விடும் கவரி மானைப் போல மானமுள்ளவர்கள் எப்பொழுதும் புகழை விரும்புவார்கள். மானமற்றவர்கள் புத்தி மழுங்கிச் சவங்களாகி ஈனக்கழுதைகள்போல் இருப்பார்கள்.

47.புத்திமான் பலவானாவான் பலமுளான்

விவேக சிந்தாமணி
**********************

47.புத்திமான் பலவானாவான் பலமுளான் புத்தியற்றால்
எத்தனை விதத்தினாலு மிடறது வந்தேதீரும்
மற்றொரு சிங்கந்தன்னை வருமுயல் கூட்டிச்சென்றே
உற்ரதோர் கிணற்றிற்சாயல் காட்டியவுவமைபோலாம்.

ஒரு சிங்கத்தை ஒரு முயல் கூட்டிக்கொண்டுபோய் கிணற்று நீரில் நிழலைக் காட்டிக் கொன்ற உவமைக் கதைபோல எவ்வளவு பலமிருப்பினும் புத்தியில்லையெனில் எவ்விதத்தும் அவனுக்குத் துன்பம் வந்து சேரும். ஆக புத்தியுள்ளவனே பலவான்.

46.கதலிவீரர் களத்திடை வையினும்

விவேக சிந்தாமணி
**********************

46.கதலிவீரர் களத்திடை வையினும்
குதலைவாயிற் குழவிகள் வையினும்
மதனலீலையின் மங்கையர் வையினும்
இதமுறச்செவிக் கின்பம் விளையுமே.

விருதுகளைப்பெற்ற சுத்த வீரர் போர்க்களத்தில் திட்டினாலும், மழலைபேசும் குழந்தைகள் திட்டினாலும், கலவியின்போது மணாட்டி திட்டினும், இனிமையுறச் செவிக்கின்பமே விளையும்.

45.சொல்லுவார் வார்த்தைகேட்டு

விவேக சிந்தாமணி
**********************

45.சொல்லுவார் வார்த்தைகேட்டுத் தோழமை யிகழ்வோர் புல்லர்
நல்லவர் விசாரியாமற் செய்வரோ நரிசொல்கேட்டு
வல்லியம்பசுவுங்கூடி மாண்டதோர் கதையைப்போல
புல்லியரொருவராலே போகுமே யாவுநாசம்.

அற்பர்கள் பிறர் சொல்கேட்டு நட்பை இகழ்வார்கள்.
அப்படிச் செய்தால், நரிசொல் கேட்டுப் புலியும் பசுவும்கூடி இறந்துபோன பஞ்ச தந்திரக் கதையைப் போல அறிவில்லாதவர்களால் எல்லாம் நாசமாகும்.
மேலானவர்கள் தீர விசாரிக்காமல் ஒன்றையும் செய்யமாட்டார்கள்.

44.அத்தியின் மலரும் வெள்ளை

விவேக சிந்தாமணி

**********************

44.அத்தியின் மலரும் வெள்ளை யாக்கைகொள் காக்கைதானும்
பித்தரின் மனமுநீரிற் பிறந்தமீன் பாதத்தாலும்
அத்தன்மால் பிர்மதேவ னாலாள விடம்பட்டாலுஞ்
சித்திரவிழியார் நெஞ்சந் தெரிந்தவ ரில்லைகண்டீர்.

அத்திப்பூவையும், வெண்ணிறக் காகத்தையும், பித்தனின் மனத்தையும், மீனின் பாதத்தையும், மும்மூர்த்திகளால் அளவிடப்பட்டு ஒரு வேளை கண்டறியப்பட்டாலும், சித்திரத்தை ஒத்த கண்களையுடய பெண்களின் நெஞ்சக் கருத்தைக் கண்டு தெளிந்தவர் இல்லை.

43.பெருத்திடு செல்வமாம் பிணி

விவேக சிந்தாமணி
**********************

43.பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடில்
உருத்தெரி யாமலே யொளி மழுங்கிடும்
மருத்துள தோவெனில் வாகடத்திலை
தரித்திர மென்னுமோர் மருந்திற் றீருமே.


ஒருவனுக்குப் பெருத்த செல்வம் சேர்ந்து அதனால் செருக்கேற்படின் உருவம் தெரியாமல் கண்ணொளி மங்கிவிடும். செருக்கெனும் நோய்க்கு மருந்துள்ளதா என்று ஆராய்ந்தால், வைத்திய சாற்றிறத்தில் இல்லை. தரித்திரம் எனும் மருந்தினால் மட்டுமே தீரும்.

42.பருப்ப தங்கள்போ னிறைந்திடு

விவேக சிந்தாமணி
**********************

42.பருப்ப தங்கள்போ னிறைந்திடு நவமணிப்
.....................பலன்களைக் கொடுத்தாலும்
விருப்ப நீங்கிய கணவரைத் தழுவுதல்
....................வீணதாம் விரையார்ந்த
குருக்கொள் சந்தனக் குழம்பினை யன்பொடு
....................குளிர்தர வணிந்தாலும்
செருக்கு மிஞ்சியவற்பர்தம் தோழமை
....................செப்பவு மாகாதே.

மலைகளைப்போல் குவியல் குவியலாக நவரத்தினங்களைக் கொடுத்தாலும் விருப்பமில்லக் கணவணைத்தழுவுதல் வீணே. மிகுந்த செருக்குடைய அற்பர்கள் நறுமணமுடைய சந்தணக் குழம்பினை ஆசையோடு உடல் குளிரப் பூசினாலும் அவருடைய நட்பு சொல்லவும் தகாது.

41.வாழ்வது வந்தபோது மனந்தனின்

விவேக சிந்தாமணி
**********************

41.வாழ்வது வந்தபோது மனந்தனின் மகிழவேண்டாம்
தாழ்வது வந்ததானாற் றளர்வரோ தக்கோர் மிக்க
ஊழ்வினை வந்ததானால் ஒருவராற் விலக்கப்போமோ
ஏழையா யிருந்தோர் பல்லக் கேறுதல் கண்டிலீரோ?

வாழ்வு வந்தபோது மகிழ்வதும், தாழ்வு வந்தபோது தளர்ந்து வருந்துவதும் கூடாது. இது மேலானோர் செய்கை. ஊழ்வினையைத் தடுக்க யாரால் இயலும்? ஏழையாய் இருந்தவர் செல்வம் பெருகி பல்லக்கில் பயணித்தல் கண்டதில்லையோ?

40.அரவினை யாட்டுவாரு மருங்களி

விவேக சிந்தாமணி
**********************

40.அரவினை யாட்டுவாரு மருங்களி றூட்டுவாரும்
இரவினிற் றனிப்போவாரு மேரிநீர் நீந்துவாரும்
விரைசெறி குழலியான வேசையை விரும்புவாரும்
அரசனைப் பகைத்திட்டாரு மாருயிர் இழப்பர்தாமே.

பாம்பைப் பிடித்து ஆட்டும் பிடாரன்களும், யானைக்கு உணவு ஊட்டுபவர்களும், இரவினில் தனியே செல்வாரும், ஏரிநீரில் நீந்துபவர்களும், நறுமணம் கமழும் கூந்தலையுடைய விலைமாதரை விரும்புவாரும்,அரசனைப் பகைத்துக் கொண்டவரும் தன் இனிய உயிரை இழப்பார்கள்.

39.சங்குமுழங்குந் தமிழ்நாடன்றன்னை

விவேக சிந்தாமணி
**********************

39.சங்குமுழங்குந் தமிழ்நாடன்றன்னை நினைந்த போதெல்லாம்
பொங்குகடலு முறங்காது பொழுதோர் நாளும் விடியாது
திங்களுறங்கும் புள்ளுறங்குந் தென்றலுறங்கும் சிலகாலம்
எங்குமுறங்கு மிராக்கால மென் கண்ணிரண்டு முறங்காதே.

சங்கு முழங்கும் எனது தமிழ் நாட்டரசனை நினைக்கும் போதெல்லாம் அலைவீசும் கடல் உறங்குவதில்லை, பொழுது விடிவதில்லை; சந்திரன், பறவைகள், தென்றல் ஆகியவை கொஞ்சம் உறங்கும். எல்லோரும் உறங்கும் இராக்காலத்தில் என்கண்கள் இரண்டும் உறங்காதது ஏனோ?

38.கானலை நீரென்றெண்ணிக் கடு

விவேக சிந்தாமணி
**********************

38.கானலை நீரென்றெண்ணிக் கடுவெளி திரியுமான்போல்
மானுறு மிலவுகாத்த மதியிலாக் கிள்ளையே போல்
தேனினை யுண்டுதும்பி தியங்கிய தகைமையேபோல்
நானுனை யரசனென்றெண்ணி நாளையும் போக்கினேனே.

கனலை நீரென நினைத்து வெட்டவெளியில் ஓடித் திரியும் மான்போலவும், இலவு காத்த புத்தியிலாக் கிளிபோலும், கள்ளையுண்ட வண்டுபோலவும், நான் உன்னை அரசனெனக் கருதி நாளை வீணாக்கினேனே.

37.பொன்னின்மணி கிண்கிணி

விவேக சிந்தாமணி
**********************

37.பொன்னின்மணி கிண்கிணி சிலம்பொலி புலம்ப
மின்னுமணி மேகலைகள் மெல்லென ஒலிப்பச்
சின்னமலர் கொண்டுசில சேடியர்கள் சூழ
அன்னமென வல்லவென வாமென வுரைத்தார்.

பொன்மணிகளும், சதங்கைமணிகளும், சிலம்புகளும் ஒலியெழுப்ப சிறிய மலர்தூவிச் சேடியர் பக்கம் வர அன்னமோ? அல்லவோ? எனக் கண்டோர்கள் கூறினர்.

36.மூப்பிலாக் குமரிவாழ்க்கை முனையிலா

விவேக சிந்தாமணி
**********************

36.மூப்பிலாக் குமரிவாழ்க்கை முனையிலா வரசன் வீரங்
காப்பிலா விளைந்தபூமி கரையிலா திருந்தவேரி
கோப்பிலான் கொண்டகோலங் குருவிலான் கொண்டஞானம்
ஆப்பிலா கசடுபோலே யழியுமென் றுரைக்கலாமே.

மூத்தவர் துணையில்லாக் குமரியின் வாழ்க்கையும், கோபமற்ற அரசனின் வீரமும், பாதுகாப்பற்ற விளைந்த நிலமும், கரையில்லாத ஏரியும், செல்வம் இல்லாதவனின் ஆடம்பரமும், குரு இல்லாத மாணாக்கனின் ஞானமும், அச்சாணியில்லா வண்டி போல் அழிந்துபோகும்.

35.சம்புவே யென்னபுத்தி சலந்தனில்

விவேக சிந்தாமணி
**********************

35.சம்புவே யென்னபுத்தி சலந்தனில் மீனைநம்பி
வம்புறு வடத்தைப்போட்டு வானத்தைப் பார்ப்பதேனோ
அம்புவி மாதேகேளா யரசனை யகலவிட்டு
வம்பனைக் கைப்பிடித்த வாறுபோ லாயிற்றன்றே.

புத்தியில்லா நரியே! நீரில் துள்ளிய மீனை நம்பி கையிலுள்ள மாமிசத் துண்டை இழந்து வானத்தைப் பார்ப்பதேனோ? என்ன காரணம்?" எனக் கேட்ட பெண்ணை நோக்கி நரி, "அரசனை விட்டுவிட்டு வம்பனைக் கைப்பிடித்தது போலாயிற்று! என்று அறிவாய் பெண்ணே!" என்றது.

34.ஓரியேமீனுவந் தூணிழைந்தையோ

விவேக சிந்தாமணி
**********************

34.ஓரியேமீனுவந் தூணிழைந்தையோ
நாரியேகண்பிழை நாட்டிலில்லையோ
பாரியகணவனைப் பழுதுசெய்துநீ
நீரிலேயிருப்பது நிலைமயல்லவே.

கணவனை இழந்து நீங்கிவந்த ஒருபெண், "நரியே! ஒரு மீனுக்கு ஆசைப்பட்டு வாயிலிருந்த உணவை இழந்தனையே! என்ன காரணம்?" என வினவ, அதற்கு நரி, "பெண்ணே! ஏதேனும் தவறுதல் உலகில் இல்லையோ? நீயோ, பெருமைதங்கிய கணவனையிழந்து இந்த நிலையில் இருப்பது உன்தன்மைக்கு அழகல்லவே?" என்றது.

33.வீணர் பூண்டாலுந்தங்கம்

விவேக சிந்தாமணி
**********************

33.வீணர் பூண்டாலுந்தங்கம் வெறும்பொய்யர்மேற் பூச்சென்பார்
பூணுவார் தராப்பூண்டாலும் பொருந்திய தங்கமென்பார்
காணவே பனைக்கூழாகப் பாற்குடிப்பினு கள்ளேயென்பார்
மாணுலகத்தோர் புல்லர் வழங்குரை மெய்யென்பாரே.

அற்பர்கள் தங்கத்தை அணிந்திருந்தாலும் கண்டவர்கள் தங்கமல்ல; மேற்பூச்சுதான் என்பார்கள். தங்கம் பூணும் தகுதியுடைய செல்வர்கள் பித்தளை நகை அணிந்திருப்பினும் உயர்ந்த தங்கமென்பார்கள். பலரும் காணப் பனைமரத்தடியில் பால் குடித்தாலும் கள்ளைத்தான் குடித்தார் என்பார்கள். பெரும்மிகு உலகத்தோர் அறிவீனர் உரைக்கும் மொழிகளையே மெய் என்பார்கள்.

32.கற்புடை மாதர்கொங்கை கவரிமான்

விவேக சிந்தாமணி
**********************

32.கற்புடை மாதர்கொங்கை கவரிமான் மயிரின்கற்றை
வெற்புறுவேங்கையின்தோல் வீரன்கை வெய்யகூர்வேல்
அற்பர்தம்பொருள்கடாமு மவரவ ரிறந்தபின்னே
பற்பலர் கொள்வார் ரிந்தப்பாரினி லுண்மைதானே.

கற்புடைய மாதரின் மார்பகம், கவரிமானின் மயிர், மலைவேங்கையின் தோல், சுத்த வீரர்களின் கைவேல், அற்பர்கள் வைத்துள்ள பொருள் திரவியம், இவை யாவும் அவரவர் உயிர் நீங்கியபின் பலரும் கைக்கொள்ளுவார்கள். இவை உலகத்தில் சத்தியமே.

31.வண்டுகளிருந்திடின் மதுவை

விவேக சிந்தாமணி
**********************

31.வண்டுகளிருந்திடின் மதுவையுண்டிடும்
தண்டமிழிருந்திடின் சங்கஞ்சேர்ந்திடும்
குண்டணியிருந்திடிற் கோள்கள்மிஞ்சிடும்
பெண்டுகளிருந்திடிற் பெரிய சண்டையே.

வண்டுகள் இருந்தால் தேனை உண்டிடும். அழகிய குளிர்ந்த தமிழ் இருந்தால் சங்கம் தோன்றிடும். புறங்கூறுவோர் இருந்தாள் கோள்கள் நிறய ஏற்படும். பெண்கள் பலர் கூடினால் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

30.படியினப்பொழுதே வதைத்திடும்

விவேக சிந்தாமணி
**********************

30.படியினப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம்
பழிநமக்கென வழிமறித்திடும் பழையநீலியை நம்பலாம்
கொடுமதக்குவ டெனவளர்ந்திடு குஞ்சரத்தையு நம்பலாம்
குலுங்கப்பேசி நகைத்திடுமஞ்சிறு குமரர்தம்மையு நம்பலாம்
கடையிலக்கமு மெழுதிவிட்ட கணக்கர்தம்மையு நம்பலாம்
காக்கைபோல்விழி பார்த்திடுங்குடி காணியாளரை நம்பலாம்
நடைகுலுக்கியு முகமினுக்கியு நகைநகைத்திடும் மாதரை
நம்பொணாதுமெய் நம்பொணாதுமெய் நம்பொணாதுமெய் காணுமே.

உண்டபோதே கொல்லும் தன்மையுடைய விடத்தையும் நம்பலாம்.பழிவருமே என நினையாது வழிமறித்துக் கொலை செய்யும் பழைய நீலியையும், மலைபோல் வளர்ந்திருக்கும் மதங்கொண்ட யானையையும், குலுங்கிப் பேசி ஏமாற்றும் சிறுவர்களையும், பொய்க் கணக்கெழுதும் கணக்கர்களையும், கூரிய பார்வையை உடைய காகத்தைப் போல் பயிரிடும் குடிகளுக்கு ஒரு பலனும் கிட்டாதபடி கட்டிக் காக்கும் காணியாளரையும் நம்பலாம். ஆனால், அடுத்தவரைக் கவரத்தக்க வகையில் ஆடையணிந்து, குலுக்கி நடந்து, பற்கள் தெரியச் சிரித்து மயக்கும் (விலை)மாதரை நம்பக் கூடாது. உண்மை. உண்மை. உண்மையே.

29.தன்னுட லினுக்கொன்றீந்தால்

விவேக சிந்தாமணி
**********************

29.தன்னுட லினுக்கொன்றீந்தால் தக்கதோர் பலமதாகும்
மின்னியல் வேசிக்கீந்தால் மெய்யிலே வியாதியாகும்
மன்னிய உறவுக்கீந்தால் வருவது மயக்கமாகும்
அன்னிய பரத்துக் கீந்தா லாருயிர்க் குதவியாமே.

தன் உடலுக்கு ஈந்தால் அதற்குத் தக்க வலிமை உண்டாகும்.
விலைமாதருக்கீந்தால் தம் உடலிலே நோய் வரும். சுற்றத்தாருக்கு ஈந்தால், எனக்குக் குறைவு, அவனுக்குக் கூட என்று சண்டை வருவதால் மனக்கலக்கம் வரும். பிறரின் உடலுக்குப் பயன் தருமாறு கொடுக்க, மறுமையில் எடுக்கப் போகும் அரிய உயிருக்கு உதவி புரிவதாகும்.

28.திருப்பதி மிதியாப்பாதஞ் சிவனடி

விவேக சிந்தாமணி
**********************

28.திருப்பதி மிதியாப்பாதஞ் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க் கீயாக்கைக ளினியசொற் கேளாக்காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாதேகம்
இருப்பினும் பயனென்காட்டி லெரிப்பினு மில்லைதானே.

திருப்பதி மிதியாத பாதம், சிவனடி வணங்காத தலை, இரப்பவருக்குக் கொடுக்காத கை, இனிய சொற்களைக் கேட்காத காது, தங்களைப் பாதுகாப்பவர் கண்களில் கண்ணீர் கண்டும் உயிர் கொடுக்காதவனின் உடலும், இருந்தும் பயனில்லை; காட்டில் எரித்தாலும் பயனில்லை.

27.அரிசிவிற்றிடு மந்தணர்க் கோர்

விவேக சிந்தாமணி
**********************

27.அரிசிவிற்றிடு மந்தணர்க் கோர்மழை
வரிசைதப்பிய மன்னருக் கோர்மழை
புருஷனைக்கொன்ற பூவையர்க் கோர்மழை
வருஷமூன்று மழையெனப் பெய்யுமே.

தற்காலத்தில்(கலியில்)அரிசி விற்கும் அந்தணருக்கு ஒன்று, நியாயந்தவறிய அரசுக்கொன்று, கணவனைக் கொல்லும் பெண்களுக்கு ஒன்று என வருடம் மூன்று மழை பெய்யும்.

26.வேதமோதிய வேதியர்

விவேக சிந்தாமணி
**********************

26.வேதமோதிய வேதியர் கோர்மழை
நீதிமன்னர் நெறியினுக் கோர்மழை
மாதர்கற்புடை மங்கையர்க் கோர்மழை
மாதமூன்று மழையெனப் பெய்யுமே.

மாதம் மும்மாரி பெய்கிறதா? என அரசர் சபையில் கேட்பதன் பொருள். வேதமோதும் ஓதுவாருக்கு ஒரு மழை. நீதிநெறி தப்பாத அரசருக்கு ஒரு மழை. கற்பிற் சிறந்த மங்கையற்கு ஒரு மழை. மாதம் மும்மாரி பெய்யும்.

25.பொன்னொடு மணியுண்டானால்

விவேக சிந்தாமணி
**********************

25.பொன்னொடு மணியுண்டானால் புலைஞனும் கிளைஞனென்று
தன்னையும் புகழ்ந்துகொண்டு சாதியின் மணமுஞ்செய்வார்
மன்னரா யிருந்தபேர்கள் வகைகெட்டுப் போவாராகில்
பின்னையு மாரோவென்று பேசுவா ரேசுவாரே.

பொன்னும் பொருளும் புகழும் ஒருவனுக்கு வந்துவிட்டால் அவன் புலையனானாலும் உயர்சாதியில் பெண்பார்த்து மணமுடிப்பான். அரசராயிருந்தவரும் ஒரு வழியுமின்றிக் கெட்டுப் போனால் அவரை யாரோ எவரோ என இழித்துப் பேசுவார்கள்.

24.பொம்மெனப் பனைத்துவிம்மி போர்மதன்

விவேக சிந்தாமணி
**********************

24.பொம்மெனப் பனைத்துவிம்மி போர்மதன் மயங்கிவீழும்
செம்மைசேர் முலையினாளே கூறுவேனொன்று கேண்மோ
செம்மையி லறஞ்செய்யாதார் திரவியஞ் சிதறவேண்டி
நம்மையுங் கள்ளுஞ்சூதும் நான்முகன் படைத்தவாறே.

மன்மதனும் மயங்கிவிழும் பொலித்துத் திரண்டு பருத்து விம்மிய மார்பையுடையவளே, செம்மையாகத் தருமம்செய்யாது சேர்த்து வைத்த பொருட்களயெல்லம் சிதறச் செய்ய நம்மையும், கள்ளையும் சூதாட்டத்தையும் பிரமன் படைத்தான்.

23.அன்னையே யனையதோழி யரந்தனை

விவேக சிந்தாமணி
**********************

23.அன்னையே யனையதோழி யரந்தனை வளர்க்குமாதே
உன்னையோ ருண்மைகேட்பே னுரைதெளிந் துரைத்தல் வேண்டும்
என்னையே புணருவோர்க ளெனக்குமோ ரின்பநல்கிப்
பொன்னையுங் கொடுத்துபாதப் போதினில் வீழ்வதேனோ?

தரும குணமுள்ளவளே! தாய்போல் கருணை காட்டும் தோழியே! உன்னை ஓர் உண்மை கேட்கிறேன். சிந்தித்துத் தெளிவாய் விடை கூறுவாய். என்னிடத்தில் கலவியை விரும்புபவர்கள் இன்பத்தையும் பொருளையும் விரும்பிக் கொடுத்து என் மலர்ப்பாதத்தில் வீழ்வதேன்? என்ன காரணம்?

22.அரும்பு கோணிடி லதுமணங்

விவேக சிந்தாமணி
**********************

22.அரும்பு கோணிடி லதுமணங் குன்றுமோ
கரும்பு கோணிடிற் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடிற் நாமதற் கென்செய்வோம்.

மலர் அரும்பு கோணியிருந்தாலும் மணம் குறையாது. கரும்பு கோணியிருந்தாலும் வெல்லமும் பாகுமாகும். இரும்பு கோணியிருந்தால் அங்குசம் செய்து அதனால் மத யானையையும் அடக்கலாம். உடல் நரம்புகள் கோணினால் மரணம் வரும். நாம் அதற்கு என்ன செய்யலாம்.

21.தாங்கொணா வறுமைவந்தால்

விவேக சிந்தாமணி
**********************

21.தாங்கொணா வறுமைவந்தால் சபைதனில் செல்லநாணும்
வேங்கைபோல் வீரங்குன்றும் விருந்தினர் காணநாணும்
பூங்கொடி மனையாட்கஞ்சும் புல்லருக் கிணங்கச் செய்யும்
ஓங்கிய வறிவுகுன்றி முலகெலாம் பழிக்குந்தானே.

தாங்கமுடியாத வறுமை ஒருவனுக்கு வந்தால், நாலுபேர் கூடியிருக்குமிடம் செல்ல வெட்கம், வேங்கையைப் போலிருந்தவனின் வீரம் குறையும், விருந்தினரைப் பார்க்க வெட்கமுண்டாகும், மலர்க்கொடி போலிருக்கும் மனைவிக்கும் அஞ்சவேண்டியிருக்கும், அற்பர்களின் கூட்டுறவு அதிகரிக்கும், வளரத்தக்க அறிவு குறையும். உலகெலாம் பழிப்பதற்கு இடங்கொடுக்கும்.

20.கருதியநூல் கல்லாதான்

விவேக சிந்தாமணி
**********************

20.கருதியநூல் கல்லாதான் மூடனாகும்
கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்
ஒருதொழிலி மில்லாதான் முகடியாகும்
ஒன்றுக்கு முதவாதான் சோம்பனாகும்
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப்போலும்
பேசாம லிருப்பவனே பேயனாகும்
பரிவுசொலித் தழுவினவன் பசப்பனாகும்
பசிப்பவருக் கிடுண்ணான் பாவியாமே.

ஒரு மனிதன் கட்டாயமாகக் கற்கவேண்டிய நூல்களைக் கல்லாதவன் மூடன். அளவறிந்து பேசாதவன் கசடன்(இழிமகன்). ஒரு தொழிலுமில்லாதவன் மூதேவி. ஒன்றுக்கும் உதவாதவன் சோம்பேறி. அறிவுடையோர் முன் மரம் போல் நின்று வணங்காதவன் பேயன். அன்பில்லாதவன் அன்புள்ளவன்போல் நடித்துப் பரிவு சொல்லித் தழுவுகிறவன் பசப்பன்(ஏமாற்றுக்காரன்). பசியுள்ளவருக்குக் கொடுத்துப் பின் உண்ணாதான் பாவியாம்.

19.தேனுகர் வண்டு மதுதனை

விவேக சிந்தாமணி
**********************

19.தேனுகர் வண்டு மதுதனை யுண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனியென்று
தடங்கையா லெடுத்துமுன் பார்த்தாள்
வானுற்ற்மதியும் வந்ததென் றெண்ணி
மலர்க்கரங் குவியுமென் றஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
புதுமையோ விதுமெனப் புகன்றாள்.

தேனையுண்ணும் வண்டுகள் மதுவை உண்டு மயங்கிக் கிடந்ததைக் கண்ட ஒரு பெண் அதை நாவற்பழமென எண்ணித் தன் கையால் எடுத்துப் பார்த்தாள். அவ்வண்டு அவள் முகத்தின் அழகால் சந்திரன் வந்து விட்டது; மலர் மூடிக்கொள்ளும்; என்று பயந்து பறந்தது. பின்னர் அம்மங்கை பறந்து போனது வண்டோ பழமோ, அல்லது என்ன புதுமையோ என ஐயுற்றுச் சொன்னாள்.