Thursday, January 14, 2010

திருவெம்பாவை - 20

நாள் இருபது - பாடல் இருபது

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவையின் இறுதிப் பாடலாக அமைந்த இருபதாம் பாடலில் எங்களைப் பாதுகாப்பாயாக என்பது பிரார்த்தனையாக அமைகிறது.

எல்லா உயிர்க்கும் ஆதியும் அந்தமும், தோன்றும் இடமும், போகங்கள் விளையும் களமும், முடிவான இடமுமாய் இருப்பவை இறைவன் திருவடிகள். பிரமனும் இந்திரனும் காண முடியாத பெருமை பெற்றவை. அந்தத் திருவடிகளே தம்மை ஆட்கொள்ளும் பொன்னடிகள். அதைப் போற்றி மார்கழி நீர் ஆடுவாய்.

இப்பாடல் இறைவனின் ஐந்தொழில்களையும் குறிக்கிறது; திருவெம்பாவையின் நிறைவுப் பாடலாக மங்கலப் போற்றியாக அமைகிறது. ஐந்தொழிலும் அறுவகைக் காவலும் எட்டுப் போற்றிகளும் தனக்குள்ளே கொண்டது இப்பாடல்.

இந்தப் பாடல் இறைவனுக்குத் தம்மை ஒப்புக் கொடுத்துவிட்டுச் சரணடைந்து விடுவதைப் பற்றிப் பேசுகிறது. தோன்றியது இறைவனிடமிருந்து. வாழ்வது அவனால். உடலெடுத்த வாழ்விலிருந்து நீக்கப்படுவதற்கு எதிர்நோக்கிக் கிடப்பது அவன் அருளையே. என்னதான் முயன்றாலும் இன்னார்தான் என்று தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வடிவிலும் செயலிலும் அருமை கொண்டவன். அவனையல்லால் வேறு யாரிடம் சரணடைவது? எனவே இப்பாடல் அவன்தாள் சரணடைவதைப் போற்றி முடிகிறது.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



திருவெம்பாவை - 19

நாள் பத்தொன்பது - பாடல் பத்தொன்பது

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.


இப்பாடல் பக்தி வைராக்கியத்தை விளக்குகிறது. பக்தர்களாகிய நாங்கள் பக்தர்களன்றி வேறு எவரோடும் தொடர்புடையவர்கள் ஆக மாட்டோம் என்ற வைராக்கியமே இப்பாடலின் கரு.

உனது கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம் எனும் பழமொழியைப் புதுப்பிக்க நாங்கள் அஞ்சுகிறோம். ஏனெனில் அது தேவையற்ற ஒன்று. எங்களின் பெருமானே! உனக்கு ஒன்று சொல்லுகிறோம். கேடபாயாக. நாங்கள் உன் மெய் அடியார்களையே மணந்துகொள்வோம். உனக்கே நாங்கல் பணிவிடை செய்வோம். இரவும் பகலும் உன்னையே நாங்கள் எப்பொழுதும் காணவேண்டும். இறைவா! இவ்வாய்ப்பினை நீ எங்களுக்குத் தந்தருள்வாயாகில், பிறகு கதிரவனே செல்லும் தடம் மாறினும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. பாவையே! இப்பெரு நிலையை ஓர்ந்து உணர்ந்து ஏற்றுக்கொள்.

பாவை நோன்பிருக்கும் கன்னியர் இப் பாடலில் தங்களின் வேண்டுதல்களை வெளியிடுகிறார்கள். முதலில் எடுத்த பிறவிதோறும் இறைவனுக்குத் தாம் தொண்டர்களாக இருந்ததை அறுதி செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களாகிய நாங்கள் உன்னிடம் கூறிக் கொள்ள ஒன்று உண்டு என்று சொல்லும் போது சொல்ல வருவது வைராக்கியத்தை அறிவித்துக் கொள்வதே.

அவன் அடியார்களுக்கே தாம் அடியார்களாவோம். வாழும் எவரும் வாழும் வரையிலும் உலகியலைத் தவிர்க்க முடிவதில்லை. எனவே இல்லறம் கூட அறத்தாற்றில் நடத்த வேண்டுமானால் அதற்கு இலக்கால் ஒன்றிய வாழ்க்கைத் துணை தேவை. அத்தகைய தேவை அமையப் பெற்றபின் எங்கு என்ன நடந்தால் என்ன என்ற விட்டேற்றி மனப்பான்மையை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.

பாவையர் இறைப் பணிக்கான வாழ்வை வரமாகக் கேட்பது தெளிவாகிறது.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



திருவெம்பாவை - 18

நாள் பதினெட்டு - பாடல் பதினெட்டு

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

பெண்ணே! திருவண்ணாமலை யானுடைய தாமரைத் திருவடியில் சென்று வணங்கும் அமரர்கள் முடியில் அணிந்துள்ள இரத்தினங்கள் கதிரவன் எழுந்ததும் விண்மீன்கள் ஒளியிழப்பதைப்போல் சிவனின் திருவடிப் பேரொளியின்முன் ஒளியிழந்து விடுகின்றன.

எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி மூன்றுமானவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



திருவெம்பாவை - 17

நாள் பதினேழு - பாடல் பதினேழு

செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


இப் பாடல் பொழுது புலரும் நேரத்தில் பொய்கையில் நீராடப் போகும் கன்னியருள் ஒருத்தி தன்னுடன் வரும் மற்றவளைப் பார்த்துப் பேசுவதாக அமைந்திருக்கிறது.

இயல்பாகவே மணமுடைய கரிய கூந்தலையுடையவளே! திருமால், பிரம்மா ஆகிய அமரர்களும் அனுபவித்திராத இன்பத்தை நம்மையும் ஒரு பொருட்டாகக் கொண்டு அருளியவன் இறைவன். நம் குற்றங்கள் களையப்படும்போது அது அநுபூதி ஆகிறது. அதற்காக இறைவன் நம் நெஞ்சமாகிய இல்லங்கள்தோறும் தேடி வந்து குடி புகுந்தவன். செந்தாமரை போன்ற திருவடியை நமக்குத் தந்தருளும் வள்ளல் அவன். கருணை மிகுந்த கண்களையுடைய அரசன் அவன். அடியவர்களாகிய நம் போன்றவர்க்கு அமுதென வாய்த்தவனைப் பாடுவோம். சிவஞானமெனும் நலம் அவனிடமிருந்து நமக்கு வருகிறது. தாமரைத் தடாகத்தில் மூழ்கி நீராடி அவன் பெருமை பாடுவோம். தோழி! நீ ஓர்ந்து பார்த்து ஏற்றுக்கொள்.

குழந்தை கையில் கிடைத்த பொற்கிண்ணத்தின் அருமை அக்குழந்தைக்குத் தெரியாது. அதுபோல் நமக்கு வாய்த்துள்ள இறைவனின் கருணைத் திறத்தை அறியாதவர்கள் நாம். வலிய வந்து வழங்கப் பெற்ற இறையருளின் அருமை உணரும் போது அது நமது செல்வமாகிறது.

எந்தக் கேள்வியும் இல்லாமல் இறைவன் மனிதன் மேல் பொழிவது அருள்.

இப்பாடலில் பாவை சொல்வது அடிப்படைப் பாவபீடிப்பே அன்றி அவள் அறிந்து செய்த அல்லது செய்யத் தவறிய காரியங்களின் பாற்பட்ட பாவம் அன்று.

இறைவன் ஆன்மாக்களை ஈடேற்றியே தீர்வது என்ற தீர்மானத்தில் இருப்பவன் இறைவன் என்பதால் இறைவனை சேவகன் என்கிறார்.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



திருவெம்பாவை - 16

நாள் பதினாறு - பாடல் பதினாறு

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

மேகமே! கடலைக் குடித்து அதன் நீரைக் குறைத்து, மேலே கிளம்பி, உமையாளின் கார் நிறத்தை ஏற்றாய். நீ மின்னலாக மின்னியது சக்தியின் சிற்றிடையை ஒத்திருந்தது. நீ இடி இடித்தது அன்னையின் பொன்சிலம்பின் ஒலி போன்று இருந்தது. நீ வானவில்லை வீசியது அம்மையின் புருவத்தை ஒத்திருந்தது. எம்மை ஆளுடையாளாகிய அன்னையின் நாயகன் சிவனின் அன்பருக்கு முதலில் அருள் சுரந்துவிட்டுப் பி எங்களுக்கும் அருள் மழை பொழிவாயாக. பாவாய்! இதை எண்ணிப்பாரேன்!

அருளை நினைந்தால் அருட்பேற்றை நாடினால் அம்மையை நினைப்பது சைவ மரபு. உலகும் உயிரும் வாழ வாழ்க்கை வளமுற மழை வேண்டுகின்ற கன்னியரும் அவ்வாறே உமையம்மையை வேண்டுகின்றனர்.

பிராட்டி நம்மை ஆளுடையவள். எனவே ஆட்கொள்ளல் அவள் கடமை ஆகிறது. முன்னி முன் சுரக்கும் என்றது நமக்கு எது வேண்டும் எப்போது வேண்டும் என்பதை அவளே எண்ணிப் பார்த்து நம் தேவையை நாம் உணருமுன்பே அருளுவது அவள் இயல்பு. அருளினை மழை என்றது கைம்மாறு கருதாமல் பொழிவது. இறைவனின் கருணைப் பெருந்திறத்தை மழையை முன்னிறுத்தி விளக்குகிறது இப்பாடல்.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



திருவெம்பாவை - 15

நாள் பதினைந்து - பாடல் பதினைந்து

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


தெய்வக் காதல் ஏற்றிய பித்தால் பெரும்பிச்சியாகக் காட்சியளிக்கும் ஒரு பெண்ணைப் பாவை நோன்புக் கன்னியர் காண்கின்றனர். எம்பெருமான் என்றே ஒரு வேளையில் சொல்லிக்கொண்டிருப்பாள். மற்றொரு வேளையில் நம்பெருமானின் பெருமையை வாயால் ஓயாது செபித்துக்கொண்டிருப்பாள். மனதில் களிப்பு மிக்கமையால் கண்ணீர் விட்டவண்ணமாய் இருப்பாள். இன்னுமொரு வேளையில் தரையி வீழ்ந்து கிடப்பாள். எவ்வளவு பெரியவராயினும் சித்தத்தைச் சிவன் பாலே வைத்தவளாதலால் வேறு யாரையும் மதிக்க மாட்டாள். இறைவனின் பித்துப் பிடித்தவள். ஓர் உயிரை இப்படி முற்றிலும் தன்வயமாக்கிக் கொள்ளும் ஞான வடிவே சிவன். கச்சும் பூணும் அணிந்த மார்பகத்தை உடைய பாவையரே! நம் இறையவனை வாயாரப் போற்றிப் புகழ்ந்து அழகிய மலர்கள் நிறைந்த பொய்கையில் குதித்து நீராடுவோம். அப்படிப் பாடினால் நம்மையும் ஆட்கொண்டருளி இறைவன் இந்த அனுபவத்தைத் தராமலா போவான்? பாவையே! இவற்றையெல்லாம் எண்ணிப்பார்.

அடியவர்களை வலிய ஆட்கொள்ளுவதில் அளவிறந்த கருணை உடைமையால் கடவுளையே பெரும் பித்தன் என்று குறிப்பிடுவது இயல்பு. தான் பித்தனாவதோடு ஆன்மாக்களையும் ஆட்கொண்டு பித்தமாக்குவது பெருமான் இயல்பு.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



திருவெம்பாவை - 14

நாள் பதினான்கு - பாடல் பதினான்கு

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பசும் பொன்னால் ஆதிய மற்ற ஆபரணங்களும் ஆட, பூமாலை அணிந்த குழல் ஆட, மலர்களை நாடிவந்த வண்டினம் ஆட, நாம் குளிர்ந்த நீரில் மூழ்கி நீராடுவோம். பின்னர் சிற்றம்பலத்தானைப் போற்றித் துதிப்போம். வேதம் அவனை விளக்க முயலுகிறது. நாம் அவனை அடையவேண்டும். அவன் ஞானச்சுடர். செஞ்சடையில் கொன்றை மலர் அணிந்துள்ளான். ஊழிக்காலத்தின் முன்னும் பின்னும் இருப்பவன் அவனே. இறைவனின் கருணையும் அருளும்தான் அன்னை உமையவள். அவனே ஆதியும் அந்தமுமாதலும் ஆணவ, கன்ம மலங்களை நீக்கி மானுடரைப் பேணும் வளையணிந்த உமா தேவியின் திருவடிகளும் அமைகின்றன. இப்படிப் பாடி ஆடி நீராடுவோம்.

இறைவன் ஆடிக் கொண்டிருக்கும் சிதம்பரத்தைப் பாடிக் குளிர்ந்த நீரில் இறங்கக் குளிர் தெரியாது. சம்சாரத்தின் நடுக்கங்களும் போய்விடும் என்பதைக் கூறாமல் கூறுகிறாள்.

பாடலின் இறுதி மூன்று வரிகள்ஆதியும் அந்தமுமாகிப் பிரம்மாண்டமாக நிற்கும் இறைவனின் கருணையும் அருளும் அன்னையின் அருளாக மாந்தருக்குக் கிடைப்பதைக் கொண்டாடுகின்றன.

சிற்றம்பலம் ஞான வெளி. அங்கிருந்து வேதம் தோன்றுகிறது. அதிலிருந்து வேதப் பொருளாகிய மெய்யுணர்வு வெளிப்படுகிறது. அந்த மெய்யுணர்வின் சோதியாக இறைவன் தோன்றுகிறான்.

இந்தப் பாடலில் பொய்கையாவது அம்மையப்பனின் அருள் பெருக்கின் குறியீடேயாம்.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



திருவெம்பாவை - 13

நாள் பதின்மூன்று - பாடல் பதின்மூன்று

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.

மடுவில் புதிய குவளை மலரும் புதிய செந்தாமரை மலரும் நிறைந்துள்ளன. அழகிய நீர்ப்பறவைகள் அங்கு ஆர்ப்பரிக்கின்றன. பாம்பு பின்னல் போடுகிறது. உடலின் அழுக்கைப் போக்குபவர்கள் அங்கு குழுமுகின்றனர். ஆதலால் சிவசக்தி சொரூபமாக அத்தடாகம் தென்படுகிறது. அதில் நாம் குதித்துக் குதித்து நீராடுவோம். நமது சங்கு வளைகளும் கால் சிலம்புகளும் சேர்ந்து ஒலிக்கட்டும். மார்பகங்கள் பூரிப்படையட்டும். நாம் முழுகுவதால் நீர் பொங்கட்டும். பாவாய்! இக்கருத்துக்களை ஓர்ந்து உணர்.

இப்பாடலில் சிலேடை நயம் அருமை. சிவன் சூடிக் கொள்வது குவளை மலரும் செந்தாமரையும். இறைவனைச் சுற்றியிருப்பது பறவைக் கூட்டம். கழுத்தில் சுற்றிக் கிடப்பது அரவம். அவனைத் தேடி வருகிறவர்கள் தம் மன அழுக்கைக் கழுவிக்கொள்ள விழைகிறவர்கள். குவளை மலரின் நீலநிறம் இறைவியையும் தாமரையின் செந்நிறம் இறைவனையும் குறிப்பதையும் காணலாம்.

இதை இப்படியும் காணலாம். குளத்தில் குவளை மலர்களும் தாமரையும் உண்டு. குளத்தில் பறவைக் கூட்டம் கூடும். பின்னிக் கிடக்கும் பாம்புகளும் உண்டு. குளத்தில் நீராடி அழுக்கைக் கழுவிக் கொள்ள வருகிறவர்களும் உண்டு.

இப்படியும் பாருங்கள். குவளை செந்தாமரை மலர் போன்ற கண்களோடும் அங்கமாகிய கைகளில் வளைகள் பல பூண்டும் பின்னித் தொடர்ந்து எழுகின்ற சத்தத்தோடும் பாவையர் குளம் சேர்கிறார்கள். பின்னும் அரவம் என்பதை எல்லா அரவங்களுக்கும் மூலமாகிய பிரணவம் என்றும் கொள்ளலாம்.

எனவே ஓம் என்று பாவையர் முழங்குகிறார்கள்.

பாடலின் நான்காம் அடியில் அம்மையப்பனாக இருக்கும் இறைவன் அல்லது அம்மையும் அப்பனும் ஒத்து இசைந்திருப்பதைப் போன்ற குளம் என்று பொருள்படும் வகையில் அமைந்திருக்கிறது.

நீரில் உடலைக் கழுவிக் கொள்வதைப் போல அருட்புனலில் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களைக் கழுவிக் கொள்ளலாம் என்கிறாகிறது.

இறைவியோடு இணைந்த இறைவனே வேண்டுவோர்க்கு வேண்டுவன தருகிறவன். பற்றிலார்க்குக் கூட வீடு பேறு அருளும் பரமயோகி பரமசிவன்.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



திருவெம்பாவை - 12

நாள் பன்னிரெண்டு - பாடல் பன்னிரெண்டு

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பிருக்கும் கன்னியர் இறைவனைப் புகழ்ந்து திருவடி ஏத்திச் சுனைநீர் ஆடுகிறார்கள். அப்போது நீராடுகின்ற ஒருத்தி மற்றொருத்தியைப் பார்த்துக் கூறுவதைப் போல அமைந்திருக்கிறது இப் பாடல்.

நம்மைப் பிணித்துள்ள பிறவித்துன்பம் ஒழியட்டும். நாம் மகிழ்ந்தாடுவது பரிபூரணனான தில்லைச் சிற்றம்பலத்தில் ஞானாக்கினி எடுத்து ஆடும் கூத்தனைக் குறித்தே. விண்ணுலகு, மண்ணுலகு ஆகிய அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் (ஐந்தொழில்) செயலைத் திருவிளயாடலாகச் செய்யும் சீலன். அவன் புகழையே சொல்லி வளைகள் ஒலிக்கவும், பெரிய ஒட்டியாணங்கள் ஆரவாரித்து ஒலிக்கவும், அழகிய கூந்தலின்மேல் வண்டுகள் முழங்கவும், மலர்கள் நிறைந்துள்ள பொய்கையில் நீராடி பொன்னம்பலத்தானின் பொன்னடியைத் துதித்துப் பெரிய சுனைநீரில் மூழ்குவோம். பெண்ணே! இக்கருத்துக்களை ஓர்ந்து உணர்.

பற்றை விட்டொழித்து இறைவன் திருவடியைச் சிக்கெனப் பற்றிவிட்டால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கலாம் என்பதாம்.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



திருவெம்பாவை - 11

நாள் பதினொன்று - பாடல் பதினொன்று

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளர்
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

நீரடக் குழுமியுள்ள நாங்கள் அகன்ற நீர் நிறைந்த பொய்கையில் இறங்கி, மூழ்கி எழுந்து மூழ்கும்பொழுது 'முகேர்" என்னும் ஒலி எழுப்பி நீராடி உன் திருவடியினைப் புகழ்ந்து பாடுகிறோம். அப்பனே! பரம்பரை பரம்பரையாக உன் அடியார்களாகிய நாங்கள் உறுதியாக உன் அருளில் ஊறி வாழ்ந்து வருகிறோம். சுடர்விடும் தீப்போன்ற செம்மேனியனே, வெண்ணீறணிந்தவனே! மகிமை அனைத்துக்கும் இருப்பிடமே! ஒடுங்கிய இடையும், மை பூசிய அகன்ற கண்களையும் உடைய உமையம்மையின் தலைவா! அழகா! உயிர்களை ஆட்கொள்ளுதல் உன் திருவிளையாடலாம். அதன்படி நாங்கள் எல்லோரும் உறுதியாக உய்வு அடைந்துள்ளோம். உனது வழிபாட்டில் நாங்கள் தளர்வடையாவண்ணம் காத்தருள்வாயாக. பெண்ணே! இக்கருத்துக்களை ஓர்ந்து பார்த்து உணர்வாயாக.

பாவையர் பொய்கைக்கு வந்து சேர்கின்றனர். பொய்கையில் புகுந்து குடைந்து குடைந்து நீராடுகிறார்கள். கையால் நீரைக் குடைந்து குடைந்து உடல் குளிர, உள்ளம் குளிரக் குளிக்கிறார்கள்.

நீரால் அமையும் புறத்தூய்மையைப் பெற்றபின், அகத்தூய்மை, ஆன்மத் தூய்மை பெற நீரடும்போதே நிமலன் திருவடிகள் பற்றிப் பாடுகிறார்கள். அப்படிப் பாடும்போதே தமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.

“நாங்கள் உன் வழி அடியோம்.” இறைவன் ஆட்கொண்டு அருளுவோர் நிலையும் அவர்கள் செய்யும் கடமைகளும் அடைந்தாயிற்று. இனி நடக்க வேண்டியதைப் பார்த்துக் கொள்வது அவனே என்கிறார்கள்.

தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாயிற்று எனும் போது அதற்கான பயனை இறைவனிடம் உரிமையோடு கேட்பதாக இப் பாடல் அமைகிறது.

நெருப்புப் போன்ற திருமேனியில் தூய வெண்ணீறு பூசியிருப்பது நீறு பூத்த நெருப்பை நினைவூட்டுகிறது. நீற்றுக்குள் நெருப்பு இருப்பதை அறியாதவர்கள் கடவுளுண்மையை அறியார்.

செல்வா எனும்போது அடியார்க்குச் செல்வம் இறைவனே என்கிறார்கள். மார்கழி நீராடி சிவனடியாரைக் கணவராகப் பெறுவது இறைவனின் திருவிளையாடல் கருணை என்கிறார்கள். முன்பு எப்போதும் போலவே இனியும் பாக்கியம் பெற இறைவன் காப்பாற்ற வேண்டும் என்பது வேண்டுதல்.

இத்தனையும் அவன் அருளால் செய்த பின் வேண்டுவது சிவகதியே.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



Wednesday, January 13, 2010

திருவெம்பாவை - 10

நாள் பத்து - பாடல் பத்து

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தரன்றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

அனைத்துமாயிருப்பவன் பரமன்; அவனுக்குப் புறம்பாக ஒன்றுமில்லை. அவனை முழுவதும் விளக்கவியலாது. சிவனின் திருவடி பாதாள உலகங்கள் ஏழுக்கும் கீழே, சொல்லுக்கு எட்டாத இடத்துக்கும் கீழே உள்ளது. கொன்றை மலரால் அலங்கரிக்கப்பட்டுள்ள செஞ்சடையுடைய திருமுடியோ எல்லாப் பொருட்களுக்கும் முடிவானதே. உமையவளைத் பங்கில் ஒருபாகமாகத் தாங்கியுள்ளதால் அவனுக்கு மேனி ஒன்றன்று. அவனை முற்றும் விளக்க வேதங்கள், அமரர், மக்கள் ஆகியோர் யாராலும் இயலாது. அவன் சொல்லில் அடங்கா உயிர்த்தோழன். தொண்டரின் உள்ளத்தே தெளிவுற விளங்குகிறான். குற்றமற்ற ஏற்றத்தையுடைய அரன் அவன். அவனுக்கு ஊர், பேர், உறவினர், அயலார் இல்லை. அம்மா! அவனுடைய சிறப்புக்களை ஓர்ந்து நோக்கி ஏற்றுக்கொள்.

பரம்பொருளாக எங்கும் உள்ள இறைவன், அடியார்களுக்கு மட்டுமே உறவினனாக இருக்கிறான். அவர்தம் உள்ளத்தில் மட்டும் நிறைந்திருக்கிறான்.

இது அருவுருவ நிலைக் குறிப்பது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உரு ஒன்றாதலால் அருவுருவ (சதாசிவ) நிலையாம்.

திருவெம்பாவை - 9

நாள் ஒன்பது - பாடல் - ஒன்பது

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய்.

பழயவைகளிலெல்லாம் பழமையானவனே! புதியவைகளிலெல்லாம் புதுய இயல்போடு இருப்பவனே! உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள் உனது சிறப்பு வாய்ந்த திருவடிக்கே உரியவர் ஆகிறோம். உனக்கு ஆட்பட்டவர்களின் திருவடிகளை வணங்குவோம். அவ்விடத்து அவர்களை அனுசரித்து ஒழுகுவோம். அத்தகையோரே எங்களுக்குக் கணவன்மார் ஆகுக. அவர்கள் விரும்பிச் சொன்னவண்ணமே தொண்டராய்ப் பணிபுரிவோம். இவ்வாறு, எங்கள் இறைவா! எங்களுக்கு அருள் புரிவாயேல் எங்களுக்குக் குறை ஒன்றுமிராது. பெண்ணே! வாழ்விற்குரிய இப்பாங்கை நீ ஏற்றுக்கொள். நாங்கள் கூறியவற்றை எண்ணிப்பார்.

அடியார்க்கும் அடியார்களைப் பணிவது ஆண்டவனைப் பணிவதாகும். அந்தப் பணியே அனைத்திலும் சிறந்த இனிய பணியாகும்! இதில் நவசக்திகள் சிவன் பெருமை பேசுகிறார்கள். ஒரு மூன்றாம் பிழம்பாகிய அருவம், அரு உருவம், உருவம் என்னும் மூன்றனுள் அருவ நிலை குறிப்பது இது.

திருவெம்பாவை - 8

நாள் எட்டு -பாடல் எட்டு

கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

கோழிகள் கூவுகின்றன; பறவைகள் ஏழு வகை சுரங்களில் இசைபாடுகின்றன; வெண்சங்குகள் முழங்குகின்றன; உவமையில்லாத பரஞ்சோதியாம், உவமையில்லாத கருணையாம், உவமையில்லாத மேலாம் பொருளாம் சிவனை நாங்கள் பாடிக்கொண்டுள்ளோம். இவை யாவும் உன் செவியில் விழவில்லையோ? நீ வாழ்ந்திருப்பாயாக. இதுவும் ஓர் உறக்கமோ? சொல்; கேட்போம். கருணைக்கடலாம் சிவனிடம் அன்பு வைப்பது இம்முறையில்தானோ? ஊழிக் காலத்தில் அனைத்தும் ஒடுங்குகையில் எஞ்சியிருப்பவன் அவன் ஒருவனே! அருட்சக்தியாகிய உமை அம்மையை இடப்பங்கில் எப்போதும் கொண்டவன் அவன். அத்தகையவனின் சிறப்பைப் பாடுகிறோம். தோழி! நீ ஓர்ந்து பார்த்து ஏற்றுக்கொள்.

பரஞ்சோதி நாயகனின் ஒப்பற்ற பெருங்கருணைத் திறன்தான் இப்பாடலின் பொருள்.

இப்பாடல் தாமச குணத்தைச் சுட்டிக்காடுகிறது. என்னதான் கண்ணுக்கும் கருத்துக்கும் எளிதாக எட்டும்படி உயர் மதிப்புடையவை வலியக் கிடைத்தாலும் தாமத குணமுடையவர்கள் அதைத் தெரிந்து கொள்வதில்லை. அடியார்கள் சத்துவ குணத்தினர்க்கே வழி காட்ட வல்லவர்கள். அவர்கள் கூட்டத்திலே தாமச குணம் இருக்கலாமா?

பாவை நோன்பிருக்க முன் நிற்கும் கன்னியரில் ஒருத்தி அப்படி ஆகிவிட்டாளே என்ற ஐயத்தின் வெளிப்பாடே இப்பாடல்.

இப்படியாகப் பாவையர் எழுப்பும் பாவை வேறு யாருமில்லை. இறை நாட்டமின்றி ஆணவம் கன்மம் மாயை என்ற மல இருள் உற்ற உறங்கும் நம்மைத்தான் மணிவாசகர் இப்பாடலில் உருவகிக்கிறார்.

பொழுது புலர்வது போல அறியாமை இருள் நீங்கி ஞான ஒளி உதயமாக வேண்டும் என்பதும் இந்த உதயத்துக்கு உறக்கம் நீங்கிய அன்பு இன்றியமையாதது என்பதும் அவன் அருளால் அவன் தாள் வணங்கி இந்த அன்பை அடையவேண்டும் என்பதும் இப்பாடலின் உட்பொருளாகும்.

இப்பாடலின் சிறப்பு நல்லன நாடும் ஆன்மாவின் விழிப்பிற்கு காலம், களம், இனம் என்ற முவ்வகையிலும் சரியான வாய்ப்பு வாய்த்துளது என்று உணர்த்துகிறது.

ஞானச் சேவலின் குரல், குருவின் மணிவாசகம், வெண்சங்கின் ஒலி - இது காலத்தைக் குறித்தது.
மார்கழி மாதத்து நோன்பு இடத்தைக் குறித்தது.
அறனறிந்து மூத்த அறிவுடையார் தோழியர். அவர்கள் இனத்தைக் குறித்தனர்.

Friday, January 08, 2010

திருவெம்பாவை - 3

நாள் மூன்று – பாடல் மூன்று


முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

மூன்றாவது பாடலில் மனோன்மணி, சர்வ பூத தமணி, பலப்பிரதமணி ஆகிய சக்திகளும் பிறரும் பலவிகரணி என்ற சக்தியை துயிலெழுப்புவதாகக் கருதுவர்.

பாவை நோன்பிருக்க வந்திருக்கும் கன்னியர் யாவரும் உள்ளம் ஒத்த அன்புடையவர்கள்; அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது கிண்டல் செய்கிறார்கள். ஆனால் குத்திப் பேசுதல் இல்லை. பாசம் இழையோடுகிறது. வேடிக்கைக்கிடையே பக்தி உணர்வின் மேம்பாட்டை இப் பாடல் உணர்த்துகிறது.

ஏற்கெனவே எழுந்து நீராடப் புறப்பட்டுவிட்ட கன்னியர் இன்னமும் தம்மோடு வந்து சேராத தோழியை அழைத்துப் பேசுகிறார்கள். “உன் வழக்கம்தான் எங்களுக்குத் தெரியுமே. எல்லோருக்கும் முன் எழுந்து வந்துவிடுவாய். தோய்ந்து நிற்கும் பெருமானின் பெருமையை நினைவில் கொள்ளுமாறு பிறரைத் தூண்டுவாய். அத்தன் என்பாய். ஆனந்தன் என்பாய். அமுதன் என்பாய். யாரும் காணமுடியாத பெருமானின் பெருமையை எடுத்து வாய் ஓயாது பேசி இனிக்க இனிக்கப் பேசுவாய். ஒளி விளங்கும் முத்துப் பல் வரிசை கொண்டவள் நீ. அந்தப் பல்வரிசை தித்திக்கத் தித்திக்கச் சிவன் புகழ் பாடுவாய். இது என்ன இன்று கதவை அடைத்துக் கொண்டு கிடக்கிறாய்? வா, வந்து கதவைத் திற.” என்கிறார்கள்.

தோழியர் பேச்சை உள்ளிருந்து கேட்கிறாள். அட ஏதோ ஒரு நாள் தாமதித்துவிட்டேன். அதற்கு இத்தனை ஆரவாரமா என்று நினைத்துக் கொள்கிறாள். சற்றே குத்தலாகவே பதில் சொல்கிறாள். “அடாடா பக்தியில் நீங்கள் என்னிலும் சிறந்தவர்கள்தான். ஈசன் மேல் பல காலமாகப் பக்தி வைத்திருப்பவர்களே. நானோ புதிதாகப் பக்தி கொண்டவள்தான். என் பக்தி நடிப்புத்தானோ? ஏதோ என்னையும் மன்னித்து ஈசனுக்குப் பழவடியார்களாகிய நீங்கள் என்னையும் ஆட்கொள்ளலாகாதோ?” என்கிறாள்.

அவர்களோ விடுவதாக இல்லை. “இப்படியா பேசுவது? உன்னுடைய பக்தியின் பெருமை எங்களுக்குத் தெரியாதா என்ன?” என்கிறார்கள்.

அவளோ, “வெறும் பேச்சுப் பேசுகிறீர்களே. உங்கள் மனத்தில் பெருமான் நினைப்பு நிறைந்திருக்கிறதா என்று ஐயமே படுகிறேன். உங்கள் சித்தம் பெருமான் நினைவால் அழகு பெறவில்லை போலும். சிவன் புகழைத் தாங்குதலே சிந்தைக்கு அழகு. அழகிய சித்தம் கொண்டோர் சிவனையல்லவா பாட வேண்டும்? அதை விட்டு விட்டு வெற்றுரைகள் பேசி நிற்கிறீர்களே,” என்கிறாள்.

அவர்கள் இன்னமும் விடுவதாயில்லை. “உன்னை எழுப்ப வந்த எமக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.”என்கிறார்கள்.





Wednesday, December 30, 2009

திருவெம்பாவை - 2

நாள் இரண்டு - பாடல் இரண்டு

பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

எழுப்புபவள்: சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! அல்லும் பகலும் நாம் பேசும் போது "யாவும் கடந்து நிற்கின்ற ஒளி வடிவினனான இறைவனுக்கே என் அன்பு" என்று சொல்லுவாயே! அந்த அன்பை இப்போது இந்த மலர்ப் படுக்கையினுள் வைத்துப் புதைத்துவிட்டனையோ?

உறங்குபவள்: சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணியவில்லை, நீங்களும் தான் அணிந்துள்ளீர்கள்! சீ! சீ! சிறிது நேரம் தூங்கியதற்கு நீங்கள் பேசியவை கொஞ்சமா? நஞ்சமா? ஏசிக்கொள்ளவும், விளையாடுவதற்கும் ஏற்ற இடம் இதுவா?

எழுப்புபவள்: தேவர்களும் வணங்குவதற்கு அரியதாகி அவர்கள் தங்கள் நிலைக்கு இரங்கி கூச்சப்படும் படி உள்ளவை அந்த பெருமானுடைய திருவடிகள். ஒளிமயமான அந்த திருவடிகள் மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருளுவான் அந்த சிவலோகன். நாம் அனைவரும் உய்ய தில்லை சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயிலும் ஆனந்தக் கூத்தன். நாம் அனைவரும் அவனது அடிமைகளே! அவனது புகழைப் பாட விரைந்து எழுந்து வா பெண்ணே!

இப்படி இரு பக்கத்தவர் பேசுவது போல அமைந்த கலிப்பாவை உறழ் கலிப்பா என்று தொல்காப்பியம் குறிக்கிறது.

கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்து
போக்கின் றாகல் உறழ்கலிக்கு இயல்பே.

இரண்டாவது பாடலில் சர்வ பூதமணி என்னும் சக்தி பலப்பிரதமணி என்ற சக்தியைப் பரிகசித்து எழுப்ப முயல, பலப்பிரதமணி தானும் பரிகசித்து விட்டு எழுந்து வருவதாகக் கொள்ளப்படுகிறது.

தோழியர் கேள்வியோடு பாடல் ஆரம்பமாகிறது. "உன்னை முழுவதுமாக இறைவன் பால் வைத்த பக்திக்கே அர்ப்பணித்து விட்டாய் என்று சொல்லுவாயே. நெறி மறந்துவிட்டாயோ? மலர்ப் படுக்கையில் சுகத்தில்
மயங்கிவிட்டாயோ? மேனிச் சுகத்திலே ஆசை பிறந்து விட்டதோ? எப்போதிருந்தம்மா இந்த மயக்கம்?" என்று கேட்கிறார்கள்.

உள்ளே இருப்பவளும் அப்படிப் உலகாயத இன்பத்தில் மயங்கி இறைநெறியை மறந்தவள் அல்ல. அதை அவள் வாயிலிருந்தே வெளிப்படுத்த இக் கேள்வி பதில் உதவுகிறது.

உலகியல் பொறிபுலன் நாட்ட வெறியும் ஆன்மிக நாட்ட நெறியும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட இயல்புடையவை. வெறியும் நெறியும் ஒருவரிடத்திலேயே இருப்பவை அல்ல. இருக்க முடியாது.

ஏளனத்துக்காகக் கேட்ட கேள்வி உள்ளே இருக்கும் கன்னியை உறுத்துகிறது. ஆயினும் நெறி கைக்கொள்ள எளிது இல்லை என்பதை உணர்த்தப் பதில் சொல்கிறாள். சிவனின் மலர்ப்பாதங்களைப் புகழ்ந்து பாடத் தமக்குத் தகுதியுள்ளதோ என்று விண்ணோர்களே நாணுவார்கள். அப்படிப்பட்ட தில்லைச் சிற்றலம்பலவாணன் மீது அசைவுறாத பக்தி வைப்பது எளிதோ என்கிறாள். உலகியல் பொறிபுலன் வெறியில் சிக்காதிருப்பதே பெரு நிலை. அத்தகைய பெரு நிலை எனக்கு இருக்கிறதோ என்கிறாள். எனவேதான் ஏசிப் பேசி விளையாடும் அளவுக்குச் சாதாரணமான பொருளைப் பற்றிப் பேசுவதைப் போல இந்நிலை பற்றிப் பேசி விளையாட இது தருணம் அல்ல என்கிறாள்.

விண்ணோருக்கும் அறிந்து ஏத்த அரிய தன் மலர்ப் பாதங்களை அடியார்க்குக் காட்டி அன்பு செய்விக்க, நெறிப்படுத்தும் இறைவன் கருணையை இப்படிக் கூறுகிறார் மாணிக்க வாசகர்.





Tuesday, December 29, 2009

திருவெம்பாவை - 1

நாள் ஒன்று பாடல் ஒன்று

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

இப்பதிகம் திருவண்ணாமலையில் மாணிக்கவாசக சுவாமிகளால் பாடப்பெற்றது. சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு, மாணிக்கவாசக சுவாமிகள் தன்னையும் பாவையாக பாவித்து பாடியது. ஒரு சீவாத்மா, இந்த உலக மாயையில் சிக்குண்டு, இறைவனை மறந்து தூங்கும் மற்றொரு சீவாத்மாவை எழுப்பி இறைவனின் புகழ் பாட அழைக்கும் படி அமைந்த பாடல்கள்.

திருவெம்பாவைப் பாடல்களுக்கு, முதல் ஐந்து பாடல்களில் ஒவ்வொருவராக ஐந்து தோழியரைத் துயிலெழுப்புவதாக விளக்கம் தரப்படும்.

நவதேவதைகள் அசுத்த மாயையை உசுப்பி மண் ஈறான பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன என்ற அடிப்படை சைவக்கருத்து சிவபூசையின் தொடக்கத்தில் நவசக்திகளை எழுப்பும் விதத்தில் அமைகிறது.

திருவெம்பாவை என்ற சிவ கைங்கரியத்திலும் அப்படியே நவசக்திகளை எழுப்புவதாக ஐந்து பாடல்கள் அமைகின்றன. முதல் பாடலில் ஒன்பது சக்திகளில் மனோன்மணி என்னும் சக்தி சர்வபூதமணி என்ற சக்தியை எழுப்புவதாகக் கருதப்படுகிறது.

வீட்டுக்குள் தன் நிலை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள் ஒரு கன்னி. அவளுடைய தோழியர் வெளியே இருந்து அவளைப் பார்த்துப் பாடுவதாக அமைந்தது திருவெம்பாவையின் முதல் பாடல்.

திருவெம்பாவையின் முதல் பாடல் துயில்வதுபோல் காட்டிலில் கிடக்கும் பாவையை அவளுடை பாங்கிப் பாவையர் நயந்து பேசுவதாக அமைந்துளது.

புராணக் கதை: பிரம்மனுக்கும், திருமாலுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்று விவாதம் எழுந்தது. நெடுநேரம் விவாதித்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த சர்ச்சை பெரிய யுத்தமாக மாறியது. இருவருக்கும் இடையே ஒளி பொருந்திய பெரிய நெருப்புத் தூணாக சிவபெருமான் நின்றார்.பிரம்மனும் திருமாலும் தங்களது சண்டையை விட்டு விட்டு கோடி சூரிய பிரகாசத்துடன் திகழ்ந்த அந்த நெருப்புத் தூணை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அப்போது ஒளி உருவில் உயர்ந்து நிற்கிறேன். உங்களில் ஒருவர் என் திருவடியையும் மற்றொருவர் என திருமுடியையும் காண்பதற்கு முயற்சியுங்கள். அதன் பிறகு, உங்களது விவாதத்துக்கு முடிவு சொல்கிறேன்! என்றார் சிவபெருமான்.

இதையடுத்து வலிமையான கொம்புகள் கொண்ட வராகமாக உருவெடுத்தார் திருமால். பூமியை அகழ்ந்து பாதாளத்துக்கும் கீழே சென்று, ஈசனின் பாதமலரைக் காண முற்பட்டார். பிரம்மனோ, ஈசனின் திருமுடியைக் காண அன்னப் பறவையாகி சிறகுகளை விரித்துப் பறக்கத் துவங்கினார்.


ஆண்டுகள் பல கடந்தன. இருவரும் களைப்படைந்தனர். திருவடியைக் காண முடியாமல் திரும்பினார் திருமால். ஆனால், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தார் பிரம்மன். அந்த வேளையில், தாழம்பூ ஒன்ற வேகமாக கீழ் நோக்கி வருவதைக் கண்டார். அதனிடம் எங்கிருந்து வருகிறாய்? எனக் கேட்டார்.

ஆனால் சிவபர தத்துவத்தை உறுதியாக நம்புபவர்கள். தாழம்பூ கதையை ஏற்கமாட்டார்கள். உச்சியிலிருந்து தாழம்பூ விழுந்ததாகக் கொண்டால்... அந்தப் பேரொளி ஒரு வரைமுறைக்கு உட்பட்ட வடிவமாகிவிடும். இது தவறு அல்லவா? எனினும் புராணங்கள் சிலவற்றில் தாழம்பூ கதை உள்ளது. ருக்வேதசம்ஹிதை,. சரபோப நிஷத், லிங்க புராணம், கூர்ம புராணம், வாயுபுராணம், சிவ மகாபராணம், உபமன்யு பக்த விலாசம், மகா ஸ்காந்தம், நாரதம் மற்றும் தமிழில் கந்தபுராணம், அருணகிரி புராணம், சிவராத்ரி புராணம், அருணாசல புராணம் ஆகிய நூல்களிலும், ஆகமங்கள் பலவற்றிலும் அடிமுடி தேடிய கதை விவரிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானின் திருமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். அவரின் திருமுடியைக் காண்பது, உங்களால் இயலாத காரியம்! என்றது தாழம்பூ உடனே பிரம்மன், எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். ஒளிப்பிழம்பின் திருமுடியைக் கண்டதாகவும், அங்கிருந்து உன்னை எடுத்து வந்ததாகவும் சொல்வேன். நீ அதை ஆமோதித்தால் போதும்! என்றார். தாழம்பூவும் சம்மதித்தது.

தாழம்பூவுடன் பூமிக்குத் திரும்பிய பிரம்மன், தான் திருமுடியைக் கண்டதாகவும் அதற்கு சாட்சியாக திருமுடியிலிருந்து தாழம்பூவை எடுத்து வந்ததாகவும் சிவபெருமானிடம் தெரிவித்தார். பிரம்மன் கூறுவது பொய் என்பதை அறிந்த சிவனார் கோபம் கொண்டார். பிரம்மனே... பொய்யுரைத்த உனக்கு, கோயில்களும் பூஜைகளும் இல்லாமல் போகட்டும். தாழம்பூ இனி எந்த பூஜைக்கும் பயன்படாது! என்று சபித்தார்.

தவறு உணர்ந்த பிரம்மனும் தாழம்பூவும் தங்களை மன்னிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர். இதன் பலனால்.. சிவ பூஜை தவிர, மற்ற பூஜைகளுக்கு தாழம்பூ பயன்படும் என்று அருளினார் சிவனார். இப்படி பிரம்மன், திருமால் இருவரது அகந்தையையும் போக்கி.. சிவபெருமான், உலகுக்குத் தனது பேரொளியைக் காட்டிய திருவடிவே லிங்கோத்பவ மூர்த்தி!

இந்தப் புராணக் கதையில் உள்ள நுண்ணிய கருத்து சிந்தனைக்குரியது. பிரம்மன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர், அறிவும் செல்வம் அகந்தையை அதிகப்படுத்தும். ஆனால் அறிவு, செல்வம் ஆகியவற்றால் இறைவனைக் காண முடியாது! செல்வச்செருக்கு, இறுதியில் தனது தோல்வியை ஏற்றாலும் கல்விச் செருக்கு தனது தோல்வியை ஏற்கவில்லை. மாறாக தோல்வியை மறைப்பதற்கான சூழ்ச்சியைத் தேடியது. ஆம், அறிவு கூடியதால் அகந்தை கொள்பவர்கள் பொய் சொல்லவும் அஞ்சமாட்டார்கள் என்பதையே இந்தக் கதை விளக்குகிறது.

“ஈசன் பேரொளிப் பிழம்பாயிருப்பவன். அவனுக்கு ஆரம்பம் இது முடிவு இது என்று சொல்லும்படிக்கு இல்லாமல் ஞானப் பிழம்பாயிருப்பவன். அந்தச் சோதிப் பரம் பொருளை நாங்கள் இனிய தமிழ்ப் பாடலில் பாடுகிறோம். எங்கள் பாட்டைக் கேட்டபின்னும் இப்படிக் கண்மூடிக் கிடக்கலாமா? உன் காதும் இறைவன் பெருமைக்குச் செவிடாய்ப் போய்விடும் அளவுக்கு வன்செவியாகிவிட்டதோ? எங்கள் இசை வீதியெல்லாம் நிரம்பக் கேட்கிறது. நீ அதைக் கேட்டவுடனே உணர்வு மிகுந்து உன்னை மறந்தவளாய் எழுந்து வரவேண்டியவள் தூக்கத்துக்கு உன்னை ஒப்படைத்துவிட்டுக் கட்டிலில் கிடக்கிறாயே. இது வியப்பாகவே உள்ளது. எழுந்து வந்துவிடு.”

ஆன்மா விழிப்படைய வேண்டும், ஆன்ம விழிப்பானது சோதி தரிசனம் காண்பது. சோதி தரிசனம் காண்பதாவது முதலும் முடிவும் காணப்படாத இறைவனின் கருணை நோக்கி எழுவது. அப்படியான ஆன்ம விழிப்பு ஊட்டுவதே இந்தப் பாடலின் நோக்கம்.

தாயுமானவருக்கு மிக உகந்த பாடல்களில் இது முதன்மையானது என்பர். பாடலைக் கேட்டவுடன் தாம் அப்பாடல் மயமாகவே ஆகிவிட வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான்

"ஆதியந்தமில்லாத அரியபெருஞ் சோதி என்ற
நீதி மொழி கண்டு அதுவாய் நிற்கும் நாள் எந்நாளோ"

இறை உணர்வில் தன்னை மறத்தலை மாணிக்கவாசகர் சொல்லிப் போயிருக்க, தாயுமானவர் இறை உணர்வில் தன்னை இழந்துவிடுதலைக் குறிக்கிறார் என்பர்.






Sunday, December 30, 2007

திருவாசகம் -- 9. கரங்குவிவா ருண்மகிழுங்

திருவாசகம்
*************

9. கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

கரங்குவிவார் = கைகூப்பித் தொழுபவர்
கோன் = இறைவன், தலைவன்

கைகூப்பித் தொழுபவர் உள்ளத்தே மகிழ்வையும், இன்பத்தையும் விளைவிக்கும் தலைவனின் கழல் பாதங்கள் வெல்க!

திருவாசகம் - 8.புறத்தார்க்குச் சேயோன்றன்

திருவாசகம்
*************

8.புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

சேயோன் = தொலவிலுள்ளவன்
புறத்தார்க்கு = வணங்காது இறைத் தன்மைக்கு புறம்பாய் இருப்போர்க்கு

இறைவனை வணங்காது இறைத் தன்மைக்கு புறம்பாய் இருப்போர் இறைவனிடமிருந்து வெகு தொலைவில் உள்ளனர். தொழுபவர்க்கோ அவர்தம் உள்ளத்தின் (அருகில் அல்ல) உள்ளே வசிக்கிறான். அப்படிப்பட்ட தன்மை உடைய திருவடிக் கழல்கள் வெற்றி உடையதாகுக.

திருவாசகம் - 7.பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன்

திருவாசகம்
**************

7.பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க

பிஞ்ஞகன் = கொல்லுபவன், சிவன்
பெய்கழல் = வீரக் கழல்

பிறப்பு அறுவது எப்பொழுது?
இறவாதிருப்பின் பிறப்பு இல்லை. ஆக நாம் மரணத்தை வென்றாக வேண்டும். அது அவ்வளவு எளிதா?

"ம்ருத்யுஞ்சய மந்திரம்"தான் மரணத்தை வெல்லச் சரியான வழி என்று கூறுவோர் உண்டு. கிளியைப்போல் வெறுமனே மந்திரத்தைப் பலுக்கிக் கொண்டிருப்பதால் பயனேதுமில்லை. அந்நேரத்தே கிளியைப் பிடிக்க ஒரு பூனை முயலுமாயின், கிளி "கீச்,கீச்" எனக் கத்திக்கொண்டோடிவிடும். ஆபத்து வரும்போது அதன் இயல்பு வெளிப்படுவதுபோல், மரணம் வருங்காலை அம்மனிதனின் சீவ இயல்பு வெளிப்படும்.

அம்மந்திரத்தின் உட்கருத்தை அறிந்து, அதற்கேற்ப வாழ்பவரே மரணத்தை வெல்வர்.
சிவன், ஐம்பூதங்களில் மண். அதன் தன்மாத்திரை மணம். அதனால்தான் சிவன் நறுமணம் நிறைந்தவராய் உள்ளார். மண்ணில் உண்டாகும் உணவுப் பொருட்களால் உடலோடு சேர்ந்த உயிராம் ஆன்மாவும் வளர்கிறது. சிவானால் ஆன்மா வளர்க்கப்படுகிறது.

தோற்றமும் மறைவும் படைத்துள்ள மாயா உலகில் இருப்பவனுக்குப் பிறவிப் பிணி உண்டு.

வெள்ளரிக்கொடியானது எப்படி இலகுவாக வெள்ளரிப்பழத்தை விடுவிக்கிறதோ, அங்ஙனமே, பிரபஞ்சமாம் மாயையிலிருந்து வெளிவந்துவிட்டால் மரணத்தை வெல்லலாம்.

பிறப்பு இறப்பு ஆகிய சம்சார சாகரத்தை அழிக்கிறவனும், வீரக்கழல்களை அணிந்திருப்பவனும் ஆகிய சிவனின் திருவடிகள் வெற்றி பெறுக.

இங்கே, பிறப்பு என்பது எண்ணங்களின் பிறப்பு. இறப்பு என்பது எண்ணங்களின் மரணம். மரணத்தை வெல்வது என்பது எண்ணங்களை ஒழித்தலாம். இது மிகவும் கடினம். எண்ணங்கள் உதிக்கும் மனதைக் கட்டுக்குள் கொண்டு வர இயலுமே தவிர ஒழித்தல் மிக மிகக் கடினம்.

திருவாசகம் - 6.வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி

திருவாசகம்
**************

6.வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

சலனமென்பது தோன்றவிருக்கும் நிலை. சலனமே பிரபஞ்ச உற்பத்திக்குக் காரணம்.

சித்தமாகிய மனம் ஒரு தெளிந்த தடாகம். சேற்று நீர் இல்லை. அலை வீசவில்லை. அதனால் அடியில் உள்ள மண் தரை தெரியும்.

மனிதனின் கண் திறந்ததுமே மனம் விழிக்கிறது. கண்போன போக்கில் மனம் செல்கிறது. அதனால் எண்ணங்கள் கொப்பளித்து ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு மேலே எழும்புகிறது. தடாகம் குழம்பி விடுகிறது.

எண்ணங்களே பிறவிக்கு மூல காரணம். அதனால் பிறவிகள் பெருகுகின்றன. எண்ணங்களுக்கு வலிவு கொடுப்பது ஆசை. ஆசையின் இருப்பிடம் மடமையாம் இருள். இறையருள் பார்வை பட்டவிடமெலாம் மடமை நீங்குகிறது. ஆசைகள் அறுபடுகின்றன்றன. அதனால் எண்ணங்களின் நொதிப்பு(fermentation) நீங்கிக் கொஞ்சம் தெளிவு கிட்டுகிறது. பின் எண்ணங்களின் உற்பத்திசாலையாம் மனதின் கொதிப்பு குறைகிறது.

மனமடங்கிய நிலையில் இறையருள் கிட்டுகிறது. இறையருள் கிட்டினால் எதுவும் கிட்டுமன்றோ?

ஆகவே, மனோவேகங் கெடுத்து என்னைத் தடுத்தாட்கொண்ட மூலப்பொருளாம் இறைவனின் பாதகமலங்களுக்கு வெற்றி உண்டாகுக என்றார்.