எனக்குக் கிட்டியது போலக் கிறிஸ்துமஸ் பரிசு யாருக்கும் கிட்டியிருக்காது. காலையில் கணினியைத் திறந்ததும் ஒரே அதிர்ச்சி. 163 பரிசுகள் Antivermisஉடன் சேர்ந்து யாரோ ஒரு புண்ணியவான் அனுப்பியிருந்தார். அவருக்கு என்மேல்தான் எத்தனை ஆசை பாருங்களேன். ஒன்றா? இரண்டா? என்ன செய்வது?
தலையெழுத்தே! என Reformat செய்து கணினியை இயங்கச் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அந்த நல்லிதயத்துக்கு நன்றி பல.
பி.கு: ஐயா, தொழில்நுட்பம் தெரியாத என் போன்ற அறிவிலிகளுக்கு அனுப்பாதீர்களேன்.
Tuesday, December 26, 2006
கிறிஸ்துமஸ் பரிசு
Posted by ஞானவெட்டியான் at 7:09 PM 6 comments
Labels: ஞானவெட்டியான்
Sunday, December 24, 2006
தியாகத் திருநாள் வாழ்த்து
அன்புடையீர்,
தியாகத் திருநாள் கொண்டாடும் அனைத்து சகோதரர்களுக்கும் எங்களின் இனிய வாழ்த்துகள்.
Posted by ஞானவெட்டியான் at 8:12 AM 0 comments
Labels: ஞானவெட்டியான்
Thursday, December 14, 2006
கோவையில் ஒரு நாள்
"உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."
"To realise the value of 1 year, ask a student who failed in his exam
To realise the value of 1 month, ask a mother who has given to a premature baby
To realise the value of 1 week, ask an editor of a weekly
To realise the value of 1 day, ask a daily wage labourer
To realise the value of 1 minute, ask a person who has missed the train
To realise the value of 1 second, ask a person who has survived an accident
To realise the value of 1 milli second, ask the person who has won a silver medal in Olympics.
மருத்துவர்களுக்கு எப்படி காலம் விலையில்லாததோ, அப்படியே நோயாளிகளுக்கும் என்பதை மறந்துவிடுகின்றனர். நேற்று முழுவதும் கோவை PSG மருத்துவ மனையில் காத்துக் கிடந்து அலுத்து விட்டது.
அத்தருணத்தேதான் உதவி கிட்டியது. வலையுலகால் கிட்டிய நண்பர் திரு.செல்லா, தானே முன்வந்து, தன் பணிகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, கோவையிலேயே பெரிய மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர்தான் Dr.MOHAN RAM. அங்கும் சனத் திரள். இருப்பினும், செல்லா வந்திருக்கிறார் என்றவுடன், மருத்துவர் உள்ளே அழைத்து, எங்களின்மேல் தனி கவனம் செலுத்தினார். மருத்துவம் பார்த்து, இரவு 8மணியளவில் திண்டுக்கல் அனுப்பி வைத்தார்.
அங்கே அவருடன், எனக்காகக் காத்திருந்த, ஆன்மிகத் தேடலில் இரு முத்துக்கள். அவர்கள்தான், திரு.கதிரும், இரவியும். எங்களைப் பசியாற்றிவிட்டு, 30 மணித்தியாலங்கள் உரையாடியபொழுதுதான் கண்டேன், அவர்களின் வீரியத்தை. இளம் வயது. எப்படியாகிலும் மெய்யைக்(உடலுக்குள்) காணவேண்டும் என்னும் உறுதியான மனப்பக்குவம்.
இது வலையுலகால் ஏற்பட்ட நட்பாகிலும், காலத்தே செய்த உதவி. அது ஞாலத்தினும் பெரிதல்லவா?
அவர்களுக்கு என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் நன்றி ஒன்றே.
Posted by ஞானவெட்டியான் at 7:56 AM 18 comments
Labels: ஞானவெட்டியான்
Friday, December 08, 2006
கந்தர் கலிவெண்பா-12
வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துலவா வின்ப - மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப்
பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்துண்ணின்
றொருமலத்தார்க் கின்ப முதவிப் - பெருகியெழு
வரவு = பிறப்பு
கடந்து = கடந்த, அப்பாற்பட்ட
உலவா = நீங்காத, வற்றாத
மருவுவித்து = சேர்ப்பித்து
கன்மமலத்தார் = ஆணவத்தோடு வினைப்பாசம் மாத்திரம் உடையவர்கள்
மின்னிடத்துப் பூத்த = மின் போன்ற உமை
இடத்து = இடப்புறத்தே
பூத்த = தோன்றிய
பொருப்பு = வெற்பு = மலை
மூத்த = பழமையாக உள்ள
மூத்த மலம் = ஆணவம்
கரும மலம் = வினை
கண் = ஞானம்
உண்ணின்று = புறத்தே தோன்றாமல் உயிரின் அறிவிலே விளங்கி
ஒரு மலத்தார் = ஆணவ மலத்தை மட்டும் உடையோர்
இன்பம் = பேரின்பம்
இறத்தல், பிறத்தல், நினைத்தல், மறத்தல், பகல், இரவு என்ற வேறுபாடுகளைக் கடந்ததாயுள்ள அழியாத பேரின்பத்தைப் பொருந்தச் செய்பவனே!
அறியாமைக்கும், வினைக்கும் காரணமான பாசம் உடையவர்களுக்குத் தாமரை போன்ற மூன்று கண்களும்(சூரிய, சந்திர, அக்கினி கலகளும்), நீண்ட சடையும் திருக்கையில் தரித்த வலிமை மிக்க தண்டும் மானும் உடையவனாய் இடப்புறத்தே உள்ள மின்னலோடு வெள்ளிமலைமேல் பவளமலை தங்கினாற்போல, பெரிய வெள்ளைக் காளைமேல், இடப்புறத்தே அம்மை உமையோடு சிவந்த தெய்வத் திருமேனியோடு எழுந்தருளி, கரும பாசக் கட்டை ஒழித்து ஞானத்தைக் கொடுத்து அருள்பவனே!
அறியாமைப் பாசம் உடையவர்களுக்கு அவர்கள் உள்ளத்திலே தோன்றி நின்று இன்பத்தைக் கொடுத்து, உடல் எடாத நிலை, உடல்நிலை, உடல் நீங்கிய நிலை ஆகிய மூன்று நிலைகளையும் கடக்கச் செய்து முத்தி பெற்றவர்களோடு சேர்த்து உயர்ந்த மேலான முத்தியை அடையச் செய்பவனே!
Posted by ஞானவெட்டியான் at 11:13 AM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
Thursday, December 07, 2006
கந்தர் கலிவெண்பா-11
கந்தர் கலிவெண்பா
**********************
ஊழ்வி னையைப்போக்கி யுடலறுபத் தெட்டுநிலம்
ஏழும்அத்து வாக்கள் இருமூன்றும் - பாழாக
ஆணவ மான படலங் கிழித்தறிவிற்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்
அடிஞானத் தாற்பொருளு மான்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்
ஊழ்வினை = முன்வினை
உடல் 68 = வெளியுடம்பில் உள்ள கருவிகள் 60, நுண்ணுடம்பிஉல் உள்ள கருவிகள் 8 ஆக 68.
நிலம் ஏழு = ஆறாதரமும், ஆகாயமும் ( சூக்கும ஆதரம் சேர்த்து ஏழாதாரம் என்போரும் உளர்)
ஆணவம் = அறியாமை விளவிக்கும் மலம்
படலம் = மறைக்கும் திரை, மறைப்பு நோய்
காணரிய = காணமுடியாத
மெய்ஞானக்கண் = பதி ஞான ஒளி
அடிஞானம் = இறையின் திருவடிகளை அறியும் அறிவால்
பொருள் = கடவுள்
ஆன்மா = உயிர்
கடியார் = காவல் பொருந்திய
முடியாது = அழியாது
தேக்கு = நிறைந்த
போக்கு = இறப்பு
உயிர்களின் வெளியுடம்பில் உள்ள கருவிகள் அறுபதையும், உள்ளுடம்பில் உள்ள கருவிகள் எட்டையும், மூலம் - மூலாதாரம், கொப்பூழ் -சுவாதிட்டானம், மேல்வயிறு - மணிபூரகம், நெஞ்சம் - அநாகதம், மிடறு - விசுத்தம்(விசுத்தி), புருவநடு - ஆக்ஞேயம், ஆகிய ஆறு ஆதாரங்களையும், அதற்குமேல் உள்ள சூனிய ஆகாயம் ஒன்றையும், மந்திர முதலிய ஆறு வழிகளையும் ஒழியும்படி செய்பவனே!
அறியாமைப் பாசமாகிய திரையை நீக்கி, உயிரின் அறிவால் காணமுடியாத கடவுளை அறியக்கூடிய ஞானக் கண்ணைக் கொடுத்து, இறைவனின் திருவடியையே (கண்களை) பற்றிக் கிடப்பதால் அறியக்கூடிய மெய்ப் பொருளையும், உயிர்த் தன்மையையும் அறிவித்து, தனது காவல் அமைந்த உலகு முழுவதும் காண்பித்து, எல்லை இல்லாது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேரின்பமான சுத்தமான அமிர்தமாய் உள்ள தமது தன்மையையுங் காட்டி, இறத்தல்.....
Posted by ஞானவெட்டியான் at 11:58 AM 4 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
Wednesday, December 06, 2006
கந்தர் கலிவெண்பா-10
சத்தி நிபாதம் தருதற் கிருவினையும்
ஒத்துவருங் கால முளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - யுலவா
தறிவுக் கறிவாகி யவ்வறிவுக் கெட்டா
நெறியிற் செறிந்தநிலை நீங்கிப்-பிறியாக்
கருணைத் திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென் றோர்திருப் பேர்கொண்டு - திருநோக்கால்
சத்தி = அருள்
நிபாதம் = வீழ்ச்சி
இருவினை ஒத்தல் = பிறவிக்கு ஏதுவான நல்வினை, தீவினையில் ஒத்த வெறுப்பு
மலபரிபாகம் = மலம் நீங்கும் தருணம்
அலமருதல் = கவலையோடு அலைதல்
உலவாது = ஓயாது
அறிவுக்கு = உயிரின் அறிவுக்கு
அவ்வறிவு = உயிரறிவு
பிறியா = நீங்கா
காசினிக்கே = உலகில்
குருபரன் = மேலான குரு
திருநோக்கு = அருள் பார்வை
திருவருள் விரைவாகப் பதிவதற்குரிய மிக மெது, மெது, தீவிரம், தீவிரமிகுதி எனும் 4 வகைப் பக்குவங்கள் ஏற்படுவதற்கு, நல்வினைப் பயன், தீவினைப் பயன் என்ற இரண்டிலும் ஒத்த வெறுப்பு வருகின்ற காலம் தோன்றி, பாசம் நழுவும் பருவத்தில், தவம் செய்த உயிர்கள் பல நாள் திருவருளைப் பெறுதற்கு வருந்துதலைப் பார்த்து, எப்போதும் அவ்வுயிர்களின் அறிவை விளக்கும் பேரறிவானனே! உயிர்களின் அறிவுக்கெட்டாது, முறையாக எவ்விடத்தும் பரந்து நிறைந்து இருப்பவனே! அந்த மேலான நிலை நின்று, பிரிந்து அருட்திரு மேனி கொண்டு இவ்வுலகில் தோன்றிக் குருபரன் என்னும் பெயரைத் தரித்துக் கொண்டு, திருவருட் பார்வையால், முன் செய்த வினைகளைத் தொலைப்பவனே!
Posted by ஞானவெட்டியான் at 10:59 AM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
Friday, December 01, 2006
கந்தர் கலிவெண்பா - 9
சொர்க்காதி போகமெலாந் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணஞ் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னூற் பரசமயந் தோறுமது வதுவே
நன்னூலெனத் தெரிந்து நாட்டுவித்து - முன்னூல்
விரதமுத லாயபல மெய்த்தவத்தி னுண்மைச்
சரியைகிரி யாயோகஞ் சார்வித் - தருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்
தாலோகந் தன்னை யகற்றுவித்து - நால்வகையாம்
சொர்க்காதி = சொர்க்கம் முதலிய
துய்ப்பித்து = அனுபவிக்கச் செய்து
காரணம் = புண்ணியம்
முன்னூல் = முன்னே சொல்லப்பட்ட பழமையான அருள் நூல்
மெய்த்தவம் = உடலுக்குள் (உண்மையாகச்) செய்யும் தவம்
உண்மைச் சரியை = மந்திர நூலில் சொல்லப்பட்ட முறை
பிவிப் பிணி நீங்கி முக்தியெனும் விடுதலையடைய நான்கு வழிகள்:
1.இறைனிடம், ஆண்டானும் அடிமை போலும் பழகி பக்தி செய்தல்(தாத மார்க்கம்).
2.அப்பனும் பிளையும் போலிருந்து பக்தி செய்தல்(சற்புத்ர மார்க்கம்)
3.நண்பன் நண்பனிடம் பக்தி செய்யுதல்(சக மார்க்கம்)
4."நீ", "நான்" என்னும் இருமையற்ற ஒருமையில், ஒன்றுகலந்து பக்தி செய்தல் (சன்மார்க்கம்)
இவற்றை முறையே, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பார்.
1.முப்பத்தாறு தத்துவங்களையும் நியதி களைவது சரியை.
2.அதன்பின், அருள் வேறென்றும், தான் வேறென்றும் பகுத்து நோக்காது புறச்செயல் புரிவது கிரியை.
3.இறைவனை அடைய, நல்ல ஒரு குரு காட்டிய நல்வழியில் மனதையடக்கச் செய்யும் பயிர்ச்சி யோகம்.
4.மனமடங்கி, எண்ணம் அறுத்துப் பேரானந்தம் கிட்டும் நிலை ஞானம்.
இவற்றால் அடையும் முக்திகள்:
1.இறையுலகமாம் அறிவு உடலில்(சிதாகாயத்தில்) வாழுதல் சாலோகம்.
2.இறைவனின் அருகில் வாழுதல் சாமீபம்.
3.இறை உருப்பெற்று வாழுதல் சாரூபம்.
4.இறைவனுடன் ஒன்று கலந்து வாழுதல் சாயுச்சியம்.
இவற்றுள், முத்தி முடிவென ஞானத்தையும், ஏனைய மூன்றையும் பத முத்தி எனவும் சான்றோர் கூறுவர்.
ஆலோகம் = தெளிந்த அறிவு
அகற்றுவித்து = விரிவித்து
நால்வகையாம் = அருள் பதியும் முறைகள் நான்கு; அதாவது, மிக மந்தம், மந்தம், தீவிரம், மிகத்தீவிரம்
கொடிய நரகம், தேவ உலகம் ஆகிய இடங்களில் அனுபவிக்கவேண்டிய வேண்டியவைகளை எல்லாம் அனுபவிக்கச் செய்துவிட்டு, பிறவா வழிக்குக் காரணமாகிய நல்லறிவை உயிர்கள் பெற்றவுடன், அவைகள் மதங்களில் கூறப்பட்ட வழிகளில் படிப்படியாகச் செல்லும்பொழுது ஒன்றோடொன்று விவாதம் செய்கின்ற பழைய நூல்களில் கூறிய அந்நிய சமயங்களில் நிற்கும்போது அச்சமயங்களின் சாற்றிறங்களே நல்ல சாற்றிறங்கள் எனத் தோன்றச் செய்து, அம்மத ஒழுக்கங்களில் நிலைபெறச் செய்து, ஆதி நூற்களில் கூறப்பட்டுள்ள விரதமிருத்தல் முதலான பல தவ நெறிகளை உண்மையாகக் கடைப்பிடித்தபின், மெய்ச் சமயமாகிய சைவ சமயத்தில் உள்ள, பணிவிடை நெறி, பூசை நெறி, யோக நெறி ஆகியவைகளில் நிற்கும்படி செய்பவனே! அவற்றின் பயனாகத் திருவருள் பெருகுவதற்கு ஏதுவாகிய பதவிகளாம் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகியவைகளை அடையும்படி செய்து நல்லறிவை விசாலப் படுத்துவோனே!
Posted by ஞானவெட்டியான் at 6:40 PM 6 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்






