Monday, September 07, 2009

பிரபுலிங்க லீலை - 2.41

வடுகன் வருகை
****************

2.41 காதி யாயிர மால்களைப் பிழிந்துமாங் கனிபோற்
கோது வீசினுங் கடல்கவிழ்த் தனையசெங் குருதி
பாதி யாயினு நிரம்புறாக் கபாலபா ணியனாய்
மாது பாதியன் அவையிடைப் புகுந்தனன் வடுகன்.

காதி – கொன்று.
கோது – சக்கை.
செங்குருதி – செந்நிறமுடைய உதிரம்.

கபாலபாணியன் – நான் முகன்(பிரமன்) தலையோட்டைக் கையிலே உடையவன்.

வடுகன் – வைரவன்

ஆயிரம் திருமால்களைக் கொன்று, மாங்கனியைப் பிழிந்தாற்போல் பிழிந்து சக்கையை வீசிவிட்டுக் குருதியை மட்டும் பிடித்தால், பிரமனைக் கொன்றதால் தோடம் பிடித்து உள்ளங்கையுடன் ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் பாதியும் நிறையாது. வைரவன் கையிலுள்ள மண்டையோடு அவ்வளவு பெரியதாம். அத்தோற்றத்துடன் வைரவன், மங்கை ஒரு பாகனாம் சிவனின் அவையில் புகுந்தனன்.

0 Comments: