88. இறைவனா லெடுத்தமாடத் தில்லையம் பலத்திலே
அறிவினா லடுத்தகாய மஞ்சினா லமைந்ததே.
கருவிநாத முண்டுபோய்க் கழன்றவாச லொன்பதும்
ஒருவரா யொருவர்கோடி யுள்ளுளே யமர்ந்ததே.
தில்லை அம்பலத்திலே உள்ள இறைவன் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை எடுத்து மனித உடலை அறிவினால் சமைத்தான். கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குத் துளைகள் இரண்டு, வாய், சிறுநீர்த் துளை, மலத் துளை ஆகிய ஒன்பது வாயிலையும் ஒருசேர அடைக்கும் வல்லமை கோடியில் ஒருவரே!
திருமந்திரம்
***********
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு
ஒன்பது காட்சி யிலைபல வாமே
ஒன்பது துளைகளை உடைய இவ்வுடலிலே ஒன்பது நாடிகள் ஊடாடும். இந்த நாடிகளை கபாலக் குகையின் நாற்சந்தியில் ஒடுக்குவதுதான் ஒன்பது வாயில் அடைப்பதாகும். இங்கு காட்சிகள் என்பது உணர்வுகளைக் குறிக்கும்.
ஞானக் குறள்
*************
ஒன்பது வாசலுமொக்க வடைத்தக்கா
லன்பதி லொன்றா மரன்.
குருபிரான் சுட்டிக்காட்டும் (சூக்கும) வாயில்கள் ஒன்பதையும் (நவத்துவாரம்) அடைத்தால் ஐம்பது பீசங்களோடு ஐம்பத்தி ஒன்றாகச் சிவன் இருப்பான்.
இவ்வைம்பத்தொன்றுமே, சிதம்பர இரகசியமாகும்.
"ஈறுசெய் மூலமதில் நாலதாகும் எண்ணரிய லிங்கத்தே ஆறதாகும்
கூறியதோர் ஆலடியில் பத்ததாகும் குறிப்புடைய முக்கோணத்தில் - பனிரெண்டதாகும்
பேரரிய காலதனில் பதினாறதாகும் பேசரிய வாயதனில் ரெண்டதாகும்
மாரிலாக் குருபதத்தே ஒன்றதாகும் மன்னிய சீரட்சரங்க ளன்பத்தொன்றே
குருபதத்தி லொன்றென்பதே பரமசிவமாகும்."
Friday, December 19, 2008
சிவவாக்கியர் பாடல் - 88
Posted by ஞானவெட்டியான் at 4:44 PM
Labels: சிவவாக்கியர் பாடல்கள், ஞானம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment