Friday, December 19, 2008

கந்தர் கலிவெண்பா - 15

கந்தர் கலிவெண்பா - 15
**********************

புன்முருவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்குந் திருமொழியும் - வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்ஞுரனைத் தடிந்து
தெவ்வருயிர் சிந்துந் திருமுகமும் - எவ்வுயிர்க்கும்

ஊழ்வினையை மாற்றி யுலவாத பேரின்ப
வாழ்வுதருஞ் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்


விடாய் = தாகம்
மலி = பொருந்திய
வில்மலி = ஒளி நிறைந்த
தடிந்து = கொன்று
தெவ்வர் = பகைவர்
ஊழ்வினை = முன்னர் செய்த வினை
மாற்றி = ஒழித்து
உலவாத = அழியாத
வடிக்கும் = கற்றுத் தெளியும்
முடிக்கும் = ஐயம் தவிர்த்து முற்றுப் பெறுவிக்கும்
விடுத்தகலா = விட்டு நீங்காத

பற்களில் புன்சிரிப்பு விளங்கப்பெற்ற அழகிய செவ்வல்லி மலர் போன்ற சிவந்த இதழுடைய வாயும், பிறவித் தாகத்தைத் நீக்கும் குளிர்ந்த திருவாக்கும், கொடிய வில் பொருந்திய தோளை உடைய அசுரர்கள் வணங்கிப் புகழுகின்ற கொடிய சூரபதுமனைக் கொன்று பகைவரின் உயிரைப் போக்கும் வீரமிக்க திருமுகமும், எல்லா உயிர்களுக்கும் முன் செய்த வினையை ஒழித்து அழியாத பேரின்ப வாழ்வைத் தருகின்ற சிவந்த தாமரை போன்ற திருமுகமும், ஆராய்ச்சி செய்து பழைய வேதம், ஆகமம் ஆகிய அருள் நூல்களைப் படிக்கின்றவர்கள் அவைகளில் தேர்ச்சி பெற்று ஆராய்ச்சி முற்றுப்பெறச் செய்யும் தாமரை போன்ற திருமுகமும், உயிர்களை விட்டு நீங்காத.....

0 Comments: