கந்தர் கலிவெண்பா - 13
*************************
மூன்றவத்தையுங் கழற்றி முத்தருடனே யிருத்தி
ஆன்றபர முத்தி யடைவித்துத் - தோன்றவரும்
யானெனதென் றற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக - ஞானம்
திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை யலரா - இருநிலமே
சந்நிதியா நிற்குந் தனிச்சுடரே யெவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம்
மூன்றவத்தை = மூன்று அவத்தை (கேவலாவத்தை, சகலாவத்தை, சுந்தாவத்தை) இவைகளை ஆணவ மாத்திரங் கலந்த உடல் இல்லா நிலை, உடலோடு கூடிய நிலை, உடலில் தூய அறிவுநிலை என்பர்.
முத்தர் = வீடுபேறு அடைந்தவர்
ஆன்ற = உயர்ந்த
யான் எனது = செருக்கு
உருவா = உருவாக
கண்ணா = முக்கண்ணாக
சந்நிதியா = சந்நிதியாக
பின்னமற = வேறு வேறாகப் பிரிக்கப் படாமல் கலந்து, வேற்றுமை நீங்க
பிறவிக்குக் காரணமாகிய யான் என்ற செருக்கும், என்னுடையதென்ற ஆசையும் ஒழிந்த இடமே திருவடியாகவும், மவுனமாய் அநுபவிக்கக் கூடிய மேலான இன்பமே திருமுடியாகவும், இறை ஞானமே திருமேனியாகவும், விருப்பம், செயல், அறிவு என்ற மூன்றுமே முக்கண்ணாகவும், கருணையே செந்தாமரை போன்ற திருக் கரங்களாகவும், உலகே தனது சந்நிதானமாகவுங் கொண்டு நிலைபெற்ற, ஒப்பற்ற ஒளியானவனே! எல்லா உயிர்களிலும் கலந்து வேற்றுமை அறியாதபடி நிற்கும் பெரியோனே! மின்னுகின்ற வடிவத்தை உடையதாய்...
Sunday, July 27, 2008
கந்தர் கலிவெண்பா - 13
Posted by ஞானவெட்டியான் at 12:42 PM
Labels: கந்தர் கலிவெண்பா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment