Thursday, December 27, 2007

சிதம்பர இரகசியம்

சிதம்பர இரகசியம்
************************

"ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே."

ஓதும் எழுத்தோடு(ஓம்) மூவைந்தும் - ஆக 16 உயிர்
ஆதிமெய் - 35. இரண்டும் சேர்த்து 51 அக்கரம் (செந்தமிழ் காலத்திற்கு முந்தி இருந்தவை)
பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் 51. பின் உயிர்ப்புச் செட்டு நோக்கி முப்பதாக அமைத்தனர். ஏனைய ஒலிகளை ஒலிப்பிக்கும் வாய்ப்பாக ஆய்தம் எனுமெழுத்து உருவாக்கப்பட்டது.
தற்பொழுது ஒழிந்துபட்டவை போக எஞ்சி வழக்கில் உள்ளவை 13 உயிர்(· சேர்த்து)

"வட்டமிட்ட சட்கோணபாரின் மேலும்வளர்ந்த விதழீராறாமங்குலத்தில்
திட்டமிட்டவனாகதத்தில் வீற்றிருந்த சிறந்தருளும் ருத்திரனுத்திரியைப்போற்றி
வெட்டவெளிவேதமறை நான்குமோதும் வேதமெலாந் திருநீறாயானவாறும்
அட்டதிசையறிந்துணர்ந்த பெரியோர்பாத மைம்பத்தோரட்சரமுங் காப்புத்தானே."
(ஞானம் எட்டி)


"முத்திதரு மூலத்தி லட்சரமே நாலு
முதலான சுவாதிட்டான மெழுத்தா றாகும்
பத்திதரும் பூரகத்தி லெழுத்தோ பத்து
பாங்கான அநாகதத்தி லெழுத்தீ ராறாஞ்
சித்திரமாம் விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாம்
சிறந்தவாக் கினையிலெழுத் திரண்டு மாகும்
சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன் றாச்சு
சார்வாமைம் பத்தோரட் சரங்கா ணாண்டே."(ஞானம் எட்டி)

மூலாதாரம் ........ - 4
சுவாதிட்டானம்... - 6
மணிபூரகம் ........ -10
அநாகதம்........... - 12
விசுத்தி.............. - 16
ஆக்கினை........... - 2
அம்பரம்.............. - 1
*****************************
ஆக மொத்தம் ..-51
*****************************
இவையே சிதம்பர இரகசியம்.

ஐம்பத்தியொன்று ஐந்தானது:
***************************************
'ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே'

இங்கு மறையை வேதமெனவும், முறையை ஆகமமெனவும் கூறுவர்.
மறையும் ஆகமமும் 5 எழுத்தில் அடங்கும். அவை ந, ம, சி, வ, ய.

"அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்"
எனத் திருமூலர் கூறுவதிலிருந்து ஐந்தெழுத்தில் ஐம்பூதங்களாலாகிய இவ்வுடல் அடக்கம்.
திருவைந்தெழுத்து தமிழ் மொழியின் உயிர்க்குறிலாகிய அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தெழுத்தாம். இவைகளைக்கொண்டே சித்தர்கள் பூடகமாகப் மருமங்களைப் பாடிவைத்துள்ளனர்.

கால்கள் - நகரம் - நடப்பு - நிலம் - உ - சிவப்பு -
வயிறு - மகரம் - மறைப்பு - நீர் - எ - பச்சை -
தோள் - சிகரம் - சிறப்பு - அங்கி - அ - பொன்னிறம் -
வாய் - வகரம் - வனப்பு - விண் - ஒ - கறுப்பு -
கண்கள் - யகரம் - யாப்பு - வாயு - இ - வெள்ளிநிறம் -

"ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே."
இதுவே பிண்ட இரகசியம்.


வழிபாடு:
"மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநீற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலார்
நந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே."(திருமந்திரம்)

"நமசிவய"வே வழிபாட்டு முதன்மை மந்திரம். அதனை நெஞ்சில் நிறுத்தி உயிர்ப்புடன் கணிக்க - மலர் வழிபாடு எனும் அருட்சுனையாம்(அருச்சனை)
உந்தியினுள்ளே உயிர்ப்புடன் கணிக்க ஓம வேள்வியாம்.

நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல்(சாந்தி), அப்பாலாக்கல் ஆகிய ஐந்து திருவருள் ஆற்றல்களால் செலுத்தப்படுபவன அகர முதலிய எழுத்துக்கள்.
இவைகளை ஐந்து கலைகளென்பர்: அவையாவன:
நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம்.

8 Comments:

Anonymous said...

அருட்சுனை எப்படி அருச்சனை ஆகும், ஐயா?

Anonymous said...

"மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநீற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலார்
நந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே."(திருமந்திரம்)

மலர் தூவி வழிபடுதல் அருச்சனை. இது அண்டத்தில்.

"நமசிவய"வே வழிபாட்டு முதன்மை மந்திரம். அதனை நெஞ்சில் நிறுத்தி உயிர்ப்புடன் சபிக்க மலர்ப்பாதம் என்னும் கண்களில்(அருட்சுனையில்) எழும் அக்கினி உயிர்ப்புடன் கணிக்க ஓம வேள்வியாம். இது பிண்டத்தில்.

Anonymous said...

சிதம்பர ரகசியம் பற்றி சொல்ல வேண்டும் மென்றால் சிதம்பரம் கோயில் பூலோகத்தின் இதயமாக உள்ளது. இதன் கர்ப்பகிரஹமும் மனித உடலின் அமைப்பைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது.

மனிதனின் இதயம் உடலின் நடுவே இல்லாமல், இடது பக்கம் ஒதுங்கியுள்ளது. இங்கே 9 சக்தி பீடங்களைக் குறிக்கும் ,ஒன்பது தங்கக் கலசங்கள் உள்ளன. மனிதன் ஒரு நாளில் 21600 முறை சுவாசிக்கிறான். இதைக் குறிக்க 21600 தங்க ஓடுகள் வேயப்பட்டுள்ளன. 64 கலைகளைக் குறிப்பிடும் 64 கைப்படிகள் உள்ளன. ஒருவர் நாட்டியத்தில் வல்லமை பெற வேண்டுமானால் யோகாசனம் செய்து 72000 முறை இதயத் துடிப்பைக் கொண்டு வரவேண்டும். இதைக் குறிக்கும் வகையில் இந்த கர்ப்பகிரஹத்தில் 72000 ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.

மூலவர் கர்ப்பக்கிரஹத்தின் வலப்புறத்தில் திரையால் மறைக்கப்பட்ட ஒரு பகுதி இருக்கிறது. இதைச் சிறிதளவு பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அது வேறு ஒன்றுமில்லை, வெறும் வெற்றிடம்தான். அங்கே தங்கத்தால் செய்யப்பட்ட வில்வமாலையொன்று இருக்கும் இதுவே சிதம்பர ரகசியமாகும்.

இறைவன் உலகெங்கும் பரவியிருக்கிறான் என்பதைக் குறிப்பதே இந்தச் சிதம்பர ரகசியமாகும். மனிதனின் மூச்சு, கலைகள், இதயத் துடிப்பு ஆகியவை சிவபெருமானின் முன் எடுபடாது என்பதைக் குறிப்பதுடன், இவை யெல்லாம் அவருடன் ஐக்கியம் என்பதைத் தெரிவிப்பதே ‘ சிதம்பர ரகசியம் ‘ ஆகும்.
இதுவல்லவா? சிதம்பர ரகசியம் விளக்குங்களேன்

Anonymous said...

ஆமாம் என்னார். நீங்கள் சொல்லியவை எல்லாமே புறத்தோற்றம். அவைகள் அண்டத்தில் இருப்பவைகள்.
வில்வமாலை கூறினீர்களே. அதுதான் பிண்ட இரகசியம். அதில் 51 வில்வ இலைகள் உள்ளன. அதைத்தான் நான் விளக்கினேன்.
அண்டத்தில் கண்ணால் காண்பதெல்லாம் மாயையே! பிண்டத்தில் உணர்வால் உணர்வதே மெய். அதனால்தான் உயிருள்ள பிண்டத்திற்கு மெய் எனப் பெயர் வந்தது.

அண்டத்தில் இருப்பதோடு நின்றுவிடுவபர் பக்தி மார்க்கத்தில் நின்றுவிடுகிறார். அதற்குமேல் என்ன என வினவி உணர ஆரம்பிக்கத்தான் ஞான மார்க்கம்.

Anonymous said...

ஞானம் அய்யாவின் விளக்கமும் என்னார் அய்யாவின் விளக்கமும் மிக அருமை.

ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருக்கும் என்போன்றோருக்கு இது நற்பயன் அளிக்கிறது.

Anonymous said...

சிதம்பர ரகசியம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இப்பொழுதுதான் அதன் அறிமுகம் கண்டேன். சரி. 51 வில்வ இலைகளைக் கொண்ட தங்கமாலையைத் தரிசிப்பதனால் உணரும் ரகசியம் எனக்கு விளங்கவில்லை. அதைச் சொல்லுங்களேன்.

Anonymous said...

அன்பு இராகவன்,

கண்ணால் காண்பதெல்லாம் மாயையே!
மெய்யிலுணர்வதே மெய்!!

என்னார் சொல்வதை எல்லாம் கோவிலில் வைத்து கட்டியிருப்பது, "இதுதான் நம் உடலில் மறைந்திருக்கும் இரகசியம்" என நமக்கு விளக்கவே. இவையெல்லாவற்றையும் உன் உடலில் தேடு. தேடி ஞான வினையாற்றினால் இறைவனை உன்னால் உணரமுடியும் என்பதே தத்துவம்(உண்மை = உள்+மெய்).

Anonymous said...

அருமையான விளக்கம் அய்யா.

தொடர்ந்து படித்து வருகிறேன்.