Thursday, December 27, 2007

ஞான வழி சிறந்தது ஏன்?

ஞான வழி சிறந்தது ஏன்?
**************************

"நீ", "நான்" என்னும் இருமையற்ற ஒருமையில், ஒன்றுகலந்து பக்தி செய்தல் (சன்மார்க்கம்). அதுவே, மனமடங்கி, எண்ணம் அறுத்துப் பேரானந்தம் கிட்டும் நிலை ஞானம். அந்த நிலையின் பெயர், சாயுச்சியம். அதாவது, இறைவனுடன் ஒன்று கலந்து வாழுதல்.

நாம் முதன்முதலில் அரிச்சுவடி (LKG) படிக்கிறோம். பின்னர் முதல் வகுப்புக்கு வருகிறோம். நம் கல்வியின் திறம் மேம்படுகிறது. ஆயினும், அரிச்சுவடியில் இருப்பவனைப் பார்த்து அவனுக்கு ஒன்றும் தெரியவில்லையென இகழக்கூடாது. முதல் வகுப்பில் படிக்கும்பொழுது, மணலில் வீடு கட்டி விளையாடுகிறோம். ஆனால், ஆறாம் வகுப்பில் படிக்கும்பொழுது சீட்டுக்கட்டு அட்டையில் வீடுகட்டி மகிழ்கிறோம். அப்போது மணல் வீட்டை வீடு என ஒத்துக் கொள்வதில்லை. நிலை மேம்பட்டபொழுது, மெய்யாகவே(உடலாகவே) செங்கல் வைத்துக் கட்டியதைத்தான் வீடு என ஒத்துக்கொள்கிறோம். நிலை வேறுபடப்பட உண்மை புரிய ஆரம்பிக்கிறது.

அதுபோலத்தான் ஆண்டவனையடையும் வழிமுறைகளும். முதலில் இறைவன் இருக்கிறான் எனக்காட்டவே தாய்தந்தை கோவிலுக்கு அழைத்துச் சென்று இதுதான் இறைவன் என சுட்டுகிறார்கள். அங்குதான் சரியை ஆரம்பம். சரியையில் கிரியை ஆக்கிரமிக்கிறது. புறச் சடங்குகளால் மட்டும் இறைவனை அடையமுடியும் என நம்புகிறோம். நம்பிக்கை தவறெனக் கூறவில்லை. கிரியையில் மனமொடுங்கினால் அங்கே இறையுண்டு. எங்குதானில்லை?

கிரியைக்கு அடுத்த நிலை யோகம். யோகம் என்பது பயிற்சி முறையே. அதிலும், இராசயோகம், வாசியோகம், இன்னும் பல பிரிவுகள் உண்டு. அதிலும், என் வழிதான் சிறந்தது எனக் கூறுதலாகாது. ஒரு வழியில் செல்வோரை மற்றவர் இகழக்கூடாது. பயிற்சி முற்ற விளைவு ஆரம்பம். ஞானம் முளைக்கும்.

ஈங்கு முதலில் இறைவன் யார்? எனத் தெளிதல் மிக இன்றியமயாத ஒன்று. அண்டமாகிய அகிலத்தில் உள்ளது இப்பிண்டமாகிய உடலிலும் உண்டு என ஆன்றோர் கூறியுள்ளனர். அண்டத்தையும் பிண்டத்தையும் படைத்தவன் இறைவன். இவ்வண்டத்தில் இறைவனைத் தேடுதல் எளிதோ? அல்ல, பிண்டத்தில் தேடுதல் எளிதோ?

அண்டத்தில் இறைவனைத் தேடுதல் சரியை, கிரியை.

பிண்டத்தில் தேடுதல் யோகம், ஞானம்.

இறைவன்தான் எல்லாவற்றையும் படைத்தான்; எங்குமுளான். அப்போது பிண்டத்திலும் இருக்கவேண்டுமல்லவா? எங்கே?

பரமசிவன் கைலாயவாசி; உயர்ந்த மலைமேல் உள்ளவன். பிண்டமாகிய நம் உடலின் உச்சியே மலையுச்சி. அதுவே தலை. ஆக, இறைவன் நம்முடலில் தலைக்குள் உள்ளான். அண்டத்தில் தேடுவதை விட நம் தலைக்குள் தேடுதல் எளிதல்லவா? நம் ஆயுளில் குறுகிய காலத்தில் காலன் வருமுன் கண்டுகொள்ளலாமல்லவா? அதிவிரைவில் இறைவனையடைய வழி ஞானமே என்பதன் பொருள் இதுதான்.

இறைவன் உருவகிக்கப்பட்டுளான். பிண்டத்தில் அறிவாகி, அறிவில் உணர்வாகி, உணர்வில் நினைவாய், நினைவில் கருத்தாகி நிற்பவனே இறைவன். நினைவைப் பிடிக்கவே யோகம், ஞானம்.

8 Comments:

Anonymous said...

அய்யா,

இறைவன் நமக்குள்ளே இருக்கிறார் என்று முன்னரும் இறைவனை அடையும் வழி ஞானமே எனப் பின்னரும் கூறுகிறீர். நம்மூள்ளே இருப்பவரை நாமே எப்படி அடைய
முடியும். உணரத்தானே இயலும். சற்று விளக்குவீரா?

Anonymous said...

நல்லதொரு வினாவெழுப்பியுள்ளீர்கள்.

போகும் இடம் எங்குள்ளது என்று தெரிந்தாலல்லவா, எப்படிப் போவது? யாருடன் போவது? எதில் போவது? என முடிவெடுக்க முடியும்.

இறைவன் நம்முள்ளேதான் உள்ளார். எங்கே? கால் நகத்திலா? முட்டியிலா? வயிற்றிலா? தோளிலா? கழுத்திலா? தலையிலா?

இறை இருக்குமிடம் கண்டுகொள்ள, கண்டு+கொள்ள, ஞானம் தேவை. அவ்வழியே சென்றுதான் அடையவேண்டும்.

நான்கு நிலைகள்:
அறிவு
உணர்வு
நினைவு
கருத்து

தாங்கள் கூறும் உணர்தல் இரண்டாம் நிலை. யாம் கூறிய நான்காம் நிலை கருத்து. அக்கருத்தில் எப்பொழுதும் இறையிருப்பின் நாம் அவனை அடைந்துவிடுகிறோம்.

Anonymous said...

நன்றி அய்யா.

சித்தர்கள் கடவுளை ஒரு கருப் பொருளாகத்தானே கொள்கிறர்கள். கடவுள் ஒரு பருப்பொருள் அல்லவே?

Anonymous said...

பின்னர் தனி இடுகையில் விளக்குகிறேன்

Anonymous said...

ஞான வெட்டியான் அவர்களே!!!

தன்னை அறிய தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகிறான்
- திருமூலர்

இப்படித் தன்னை அறிய வழிகள் பல..... அதில் சிறந்தது எது?

எங்குமுள்ள இறைவனை கோவிலுக்குச் சென்று குழ்ந்தைக்குப் பெற்றோர் அறிமுகப்படுத்துவது ஏன்?

விடை தாருங்களேன்...

Anonymous said...

அன்புத் தம்பி ஜோ,

குழந்தை பிறந்ததும் தாய் பாலூட்டுகிறாள். பின்னர் அவள்தான் தந்தையும் மற்ற ஏனையோர்களையும் அறிமுகப் படுத்துகிறாள்.

அப்பொழுதுதான் குழந்தை நம்பத் தொடங்குகிறது. குழந்தையிடம் இறைவன் எங்குமுளான் என்றால் ஒண்ணும் தெரியலியே அம்மா எனக் கூறும்.

அதற்காகத்தான் இறைவனை உருவகித்தனர். பின்னர் ஆலயத்திற்குக் குழந்தையை இட்டுச் சென்று உருவத்தை அறிமுகப் படுத்துகின்றனர். அதன்பின் குழந்தை இறைவனை நம்புகிறது.

பேறறிஞன் சாக்ரடீஸும் கூறினான். உன்னையே நீ அறிவாய் என. இங்கு நான் என்பது ஆன்மா எனக் கூறுபவர்கள் அதை விண்டு "விந்து" எனக் கூறுவதில்லை. தன்னை அறியாது விந்துநாசம் செய்பவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். - கெடுகிறான்.

அதையே, திருமூலர்:

"விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த வழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தாற் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே."

நந்திய = மிகுந்த. அழிவு = விரயம் (வெளிச்செல்லல்).

எண்பது துளிச் செந்நீர்(இரத்தம்) வெண்ணீரின் ஒரு துளியாம். எண்பது வெண்ணீர்த் துளியே ஒரு முழுத்துளி விந்துவாம். இங்ஙனம் துளித் துளியாய்க் கூடி விளையும் விளைவும், விளைந்து முற்றி எய்தும் பயனும், உணர்ந்து அடங்கல்
வேண்டும். விந்து விரயம் தடுக்கப்படில் நீண்ட காலம் வாழலாம். அவ்வாறின்றி கலவி இன்பமே பெரிதென நினைந்து வாழ்பவரின் வாழ்நாள் குறைவே. விந்து அடங்கப் பேராக்கம் உண்டாகும். இல்லையேல் பெரும்போக்கு ஏற்படும். நாதத்தால் ஏற்படும் விந்துவின் சிறப்பை உணர்வோருக்கு விந்து அடங்கி வெற்றி உண்டாகும்.

தன்னையறிய முதலில் புலனடக்கம் தேவை. அதிலும் நாவடக்கம் வேண்டும். மவுனம் காக்க வேண்டும். "ஞானமென்பது மோன வரம்பு". காலனாகிய காலத்தை விரயம் செய்யலாகாது.

மேலதிகத் தகவல்களுக்கு ஞானக் குறள் விடையிறுக்கும்.

Anonymous said...

ஞான வெட்டியான் அவர்களே!!

மாதா, பிதா குரு - தெய்வம் என்றனர் நம் முன்னோர்கள்

ஆங்கிலத்தில குருவை இப்படி விவரிப்பார்கள்:

A Teacher is a person
Who Knows the way
Who Shows the way
Who Walks in that way

இந்த மூன்றையும் செய்பவரே குரு!! இதில் ஏதாவது ஒன்றை செய்யத் தவறுபவர் கூட குரு என்ற சொல்லிற்குத் தகுதி அற்றவர்..

Anonymous said...

அன்பின் ஜோ,

இப்படிச் சொல்லலாமா?

A Teacher is a person
Who Knows the way
Who Walks in that way..
Who Shows the way

Practising is difficult from preaching.

சரி நம் கதைக்கு வருவோம்.

குழந்தை பிறந்ததும் தாய் பாலூட்டுகிறாள். பின்னர் அவள்தான் தந்தையையும் மற்ற ஏனையோர்களையும் அறிமுகப் படுத்துகிறாள். அப்பொழுதுதான் குழந்தை நம்பத் தொடங்குகிறது. தந்தை அவனை ஆசானிடம் அழைத்துச் சென்று கல்வி பயிற்றுவிக்கிறான். ஆசான் கல்வி கற்றுக் கொடுத்து அதனுடன் ஞானத்தை அடைய வழியினையும் சொல்லிக் கொடுக்கிறான்.

ஆக, மாதா, பிதா, குரு, பின்னர் சென்றடையுமிடம் தெய்வம்.

தெய்வம் எது? விளக்கம் அடுத்து வரும் ஞான முத்துக்களில்......