Sunday, December 30, 2007

திருவாசகம் - 5.ஏக னநேக னிறைவ னடி

திருவாசகம்
**************
5.ஏக னநேக னிறைவ னடிவாழ்க.


ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க.

இறைவன் மூலப் பொருளாயிருக்கும்போது ஒன்று. அதுவே பரிபூரணம்.
பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம். பரிபூரணம் அளவிட முடியாதது; நிறையிட முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு. அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை. கால எல்லை இல்லாதது. முடிவில்லாதது. இறைவனாகவேயிருந்து, இறைவனிலிருந்து வெளியானவை சிருஷ்டிகள்.

இறை சிருட்டிக்குப்பின்னும், முன்னிருந்தது போன்றே இப்போதுமிருக்கும்.
அகண்டகாரமாய்ப் பரிபூரணமாய் விரிந்து நிறைந்து தனக்குத் தானே காட்சியாய் மற்றவை என இல்லாததாய் மறைந்தும் மறையாததாய் அசையாததாய் துணை இல்லாததாய் தனித்துவமாய் ஒன்றாய் இடைவெளி இல்லாமல் எங்குமாய்ப் பேதமின்றிப் பிரிவின்றிக் கலந்து உறைந்த ஒன்று.. இதற்கு முன்னும் இதுவேதான் இருந்தது. வேறொன்றும் இருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லையே. இதுவே நித்தியம். இதுவே சத்தியம்.

நித்திய சத்தியமென்பது, என்றும் நிலைத்து நிற்பது. அதற்கு அன்றும், இன்றும், என்றுமே அழிவும் இல்லை. மாற்றமும் இல்லை, குறைவதும் இல்லை, கூடுவதும் இல்லை. எல்லாம் பரி பூரணம்.

ஒன்று என்பது, அதற்குப் பதிலாக அல்லது அதுபோன்ற அல்லது அதுபோன்ற எத்தனையோ இல்லாத, பிறக்காத, பிறப்பிக்காத, அனைத்துமே ஒன்றிலான, அனைத்துமே ஒன்றான அந்த ஒன்றே.

ஆனால் பிரபஞ்சமாக விரியும்பொழுது, எண்ணரிய பல்கோடிப் பொருட்களாகவும் உயிர்களாகவும் காட்சி அளிக்கிறார். தங்கம் மூலப் பொருள். அதிலிருந்து கொல்லர் எப்படிப் பலவகையான ஆபரணங்களை உருவாக்குகிறாரோ, அது போல்தான்.

"ஒன்றாயிருப்பவனும், எண்ணரிய பொருட்களாய் விரிந்திருப்பவனுமாகிய இறைவனது திருவடி வாழ்க."

2 Comments:

Anonymous said...

மிக நல்ல முயற்சி. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

அன்பு சதீஷ்,
மிக்க நன்றி.