Sunday, December 30, 2007

ஞானக் குறள் - 4. நாடி தாரணை (31-40)

ஞானக் குறள்
***************
1. வீட்டுனெறிப்பால்
***********************
4. நாடி தாரணை (31-40)
***************************
31. எழுபத் தீராயிர நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல்.

உடலிலுள்ள எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்குள் உள்ள பூரணமான பத்து நாடிகளுக்குள் முதலானதும் ஆதியானதுமான உயிர் நாடியே தலையானது.

பூரணமான பத்து நாடிகள் :

இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு. இவற்ரை முறையே, இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு என்பர்.

வளி (காற்று) பத்து :

உயிர்வளி, மலக் காற்று, தொழிற் காற்று, ஒலிக் காற்று, நிரவு காற்று, தும்மற் காற்று, விழிக் காற்று, கொட்டாவி (கெட்ட ஆவி), இமைக் காற்று, வீங்கற் காற்று. இவைகளை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனக் கூறுவரும் உண்டு.

இவற்றை திருமூலர்,

"நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்" என்று அவத்தை பேதத்தில் கூறியுள்ளார்.
நாடிகள் உடலின் உந்திச் சுழியிலிருந்து கீழிருந்து மேல்புறமாய் பேய்ச் சுரைக்காயின் கூடுபோல் உடலைப் பின்னி நிற்பன. இவை மொத்தம்72,000 என நூல்கள் கூறுகின்றன. இவற்றின் சிலவற்றிற்க்கு முழு விவரம் மருத்துவ நூல்களில்தான் கிட்டுகின்றன.


தலயில் ........................ 7,000
வலது காதில் ............. 1,500
இடது காதில் .............. 1,500
வலது கண்ணில் ...... 2,000
இடது கண்ணில் ....... 2,000
மூக்கில் ........................ 3,330
பிடரியில் ..................... 1,000
கண்டத்தில் ................. 1,000
வலது கையில் .......... 1,500
இடது கையில் ........... 1,500
தொண்டைக்கும்
நாபிக்கும் மத்தியில் 8,990
பிடரியின் கீழ் ............. 8,000
விலாவில் ................... 3,000
கால்களின் சந்தில் ... 8,000
பீசத்தின் மேல் ........... 2,000
பீசத்தின் கீழ் ................ 2,000
பாதத்தில் ..................... 1,000
பிடரிக்குப் பின்னால் 3,680
கோசம் ........................ 13,000
***************************
ஆக நரம்புகள் ........... 72,000
***************************

பெருவாரியான ஞான நூல்கள் பத்து நாடிகளுக்குத்தான் முக்கியத்துவம்

தருகின்றன. இதிலும் இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிவைகளே மிக அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.

இடகலை - வாத நாடி

பிங்கலை - பித்த நாடி

சுழிமுனை - சிலேத்தும நாடி

இம்மூன்றையும் வைத்துத்தான் நம் முன்னோர், அதிலும் வைத்தியர்கள் உடலின் நோய்களைக் கண்டறிந்தனர்.

இ(டை)ட கலை - இடது நாசியினுள்ளே செல்லும் கற்று. இதுவே சந்திர நாடி.

சக்தி நாடிஎன்போருமுண்டு.

பிங்கலை - வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு. இதைச் சூரியநாடி, சிவநாடிஎன்பர்.

சுழிமுனை - அக்கினி நாடி. இடத்திற்கு இடம் மறுபடும்.

அதாவது அண்டம், பிண்டம், சூக்குமம், அதி சூக்குமம்.

அறிவாலுணர்வது அண்டம்.

உணர்வாலுணர்வது பிண்டம்.

நினைவால் உணர்வது சூக்குமம்.

கருத்தில் நிற்பது அதிசூக்குமம்.

சிகுவை - உள்நாக்கு நரம்பு

புருடன் - வலக்கண் நரம்பு

காந்தாரி - இடக்கண் நரம்பு

அத்தி - வலது காது நரம்பு

அலம்புடை - இடக் காது நரம்பு

சங்கினி - ஆண்(பெண்) குறி நரம்பு

குகு - குத நரம்பு

ரக்தவியானன் - இனப்பெருக்கத்திற்குறிய சுக்கிலம், முட்டை ஆகியவைகளை

வெளித் தள்ளும் நரம்பு

32. நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா
முரம்பெறு நாடியொன் றுண்டு.

நரம்பென்று அழைக்கப்படும் இந்த நாடிகளுக்கு எல்லாம் சக்தியைக் கொடுக்கும் நாடி ஒன்றுண்டு.

33. உந்திமுதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து.

(உந்தி = நாபியென்பர் சிலர். ஆயினும் உந்தியென்பது உன்+தீ என் விரிவடையும். உன்னுடைய (ஆன்ம)தீயே உந்தி. உறு = பொருந்திய;
பரிந்து = தாயன்புடன் பரிந்து; பந்தித்து= உறுதியாக நிலைத்து நின்று; )

உந்தி, நாபி, உந்திக்கமலம் எனும் பதங்கள் குறிப்பவை ஓங்காரத்தின் மத்திய பகுதியாகிய மணிபூரகமே. உந்தி முதல் உச்சிவரை உறுதியாக நிலைத்து நிற்பது ஆதி நாடியே. இதைக் குண்டலினி என்பர்.

34. காலொடு கையி னடுவிடத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து.

இவ்வோங்கார ஆதி நாடியானது, கைமுதல் கால்வரை தாமரை நாளத்தின் நூல்போல் உள்நுழைந்து பரவியிருக்கின்றது.

வசிட்டக்காரர் :

“அறவிந்தவளைய நூலொன்றைக் கூறோ ராயிரமிட்டதிலொரு கூறாப்பென்றாலுந் தறமொவ்வாதறச் சிதறியுண்டாய் நின்றுந்தாக்கி யறிவரிதவற்றின் கதியின் றன்மை."

இவ்விடத்து கதி என்பதை மூச்சோட்டம் எனக்கொள்வர் ஆன்றோர்.

35. ஆதித்தன்றன் கதிர்போல வந்நாடிகள்
பேதித்துத் தாம்பரந்த வாறு.

சூரியன் தன்னுடைய கதிர்களைப்போல் தன் கலைகளைப் பரப்புவதுபோல, ஆதி ஓங்காரநாடி அசைந்தாடி (சலனமடைந்து) உடலில் தன் கலைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.

வாயு எனபது நம்முடலில் ஓடும் சீவக்காற்று. இதுவே, வாசி, காலெனப் பல மருமப் பெயர்களில் கூறப்பட்டுள்ளன. இதே காற்றுதான் பல்வேறு பெயரெடுக்கின்றன. அருவிநீர் ஓடிவருமிடங்களிலுள்ள நிலத்தின் வண்ணம் பெருமாப்போல். வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்). புறத்தே சில உடலுறுப்புக்கள் வலுவிழப்பதற்கும் அதுவே காரணம்.

ஆயினும், இவ் வாயு எங்கிருந்து மனுவுக்கு வந்தது? எங்குள்ளது? என்னும் வினாக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. கருப்பத்தில் குழந்தை உருவாகும் பொழுது, வளரும்பொழுதும் குழந்தைக்கு உயிர் இல்லை. அது மாமிச பிண்டம். ஆனால், கருப்பப் பையினுள்ளேதான் அவ்வாயு உள்ளது. ஆனால் தனியாக உள்ளது. மற்ற நீர்வாழ் செந்துக்களுக்கு வைக்கப்பட்டதுபோல் வைக்கப்பட்டுள்ளது. தாயின் கருவரையைவிட்டு வெளியே வந்தவுடனே, சடாரென ஒரு எல்லையிலிருந்து (மருமம்) பிச்சு அடிக்கும் ஆவி தான் சுவாசம். இதுவே மூல வாயு.

பிரபஞ்சத்திலிருந்து மூலப் பிரகிருதி முந்நிறத்தில் (வெண்மை, சிவப்பு, கறுப்பு)தோன்றியது. அவைகளே, முச்சக்திகள்.

மாயா(வெண்மை) சக்தி; அவித்யா(சிவப்பு) சக்தி; ஆபரண விஷேப(கறுப்பு) சக்தி. இவைகள் முறையே, மாயை, அஞ்ஞானம், அகங்காரம் எனக் கூறினர். மாயா, சத்துவ குணத்தை முதன்மையாகக் கொண்டு விளங்கும். அதில் பரப் பிரும்மம் பிரதிபலிப்பதினால் தோன்றிய பிரதி பிம்பமே, ஈசுவரன். இதுவே முதல் சலனம்.

இச்சலனத்தினாலுண்டாகிய சலனச் சங்கிலியால் பிரபஞ்சம் உண்டாகி இயங்கி வருகிறது.

முதல் சலனத்தால், பிரபஞ்சம் இரண்டாகியது.
முதற் பாகம் சமஷ்டி (ஒன்றாயிருத்தல்) ஆகாயம்;
இரண்டாம் பகுதி வியஷ்டி(வெவ்வேறாயிருத்தல்) ஆகாயம்.

வியஷ்டி ஆகாயத்தை நான்கு பகுதிகளாக்கி,அவற்றுள் முதல் பாக வியஷ்டி ஆகாசத்தைக் வாயுவொடு சேர்த்தபோது மனத்தத்துவம் பிறந்தது; அக்கினியொடு சேர்த்தபோது அறிவுத் தத்துவம் பிறந்தது;
நீரொடு சேர்த்தபோது சித்தம் பிறந்தது;
நிலத்தொடு சேர்த்தபோது அகங்காரம் பிறந்தது.
இதுதான் ஐம்பூதங்களின் சலனக் கலவை.

இச்சலனத்தாலேதான், மற்ற சலனங்கள் உண்டாயின.
ஆக "வாயு"வும் சலனத்துள் ஒரு பாகம்.
வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்).

வாயுவின் வீடு கழுத்துக் கண்டம். அதுவே நடு மூலம். வாயு இல்லையேல் மூச்சில்லை; உயிரில்லை; சலனமில்லை.
ஆகாசம் வாயுவொடு சேர்ந்தபோது மனம் பிறந்தது;
மனமே நாட்டங்களுக்குக் காரணம்.
அக்கினியொடு வாயு சேர்ந்தபோது அறிவு பிறக்கின்றது. ஆக வாயு அறிவில் செயல்பட்டு வருபவைகளை நாட்டம் எனக் கூறவியலாது.
பிங்கலை இடகலை சுழிமுனை குகுநாடி என்பவை எல்லாம் கற்பனையே. இம்மாதிரி நாடிகள் இருப்பதாக மருத்துவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. வெளிமூச்சுக் காற்று உள்ளே நுழையவும், ஈரலுக்குள் சென்று திரும்பி வரவுமே மூச்சுக்குழல் இருக்கிறது. மற்றபடி வாயுவின் பெரும்பகுதி கபாலக் குகையின் உள்ளே போய் அங்கிருந்து உடலின் பலபகுதிகளுக்கும் பரவி விடுகிறது. அதனால்தான் இறந்ததும் சவத்திற்கு உடல் ஊதிவிடுகிறது. ஆகவே, நாடிகள் உடலினுள்ளே இருக்கும் நரம்பு மண்டலங்களின் துடிப்பேயாம்.

அதையே, கிராமங்களில், இழவு வீட்டிற்குச் சென்றால், "நாடி எப்போ அடங்குச்சு?" எனக் கேட்பது வழக்க. நாடி என்றால் நோக்கி என்ற பொருள் உண்டு. ஆக, உடலில் சலனமில்லையேல், நாடி அடங்கிவிடுகிறது.
அண்டத்தில் சலனம் வாயுவால்தான். இது புறச் சலனம். பிண்டத்திலும் வாயுவால்தான் சலனம். இது அகச் சலனம். இது இருவகை.
அகம் எனில் மனம். மனச் சலனமும் அகச் சலனம்தான்.
உடல் சலனமும் அகச் சலனம்தான்.

36. மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு.

ஆதியாகிய ஓங்கார நாடியானது நரம்பு எலும்போடு சேர்ந்து, உடலோடு கலந்து, உடல் முழுவதும் பரவியுள்ளது. இது பொய்யில்லை; உண்மையே.

37. உந்திமுதலாகி யோங்காரத்துட் பொருளாய்
நின்றது நாடி நிலை.

ஓங்காரத்தின் உட்பொருளாக உள்ள குண்டலி உந்திக் கமலமாம் மணிபூரகத்தைத் தன் முதன்நிலையாகக் கொண்டு விளங்குகிறது.
உந்தி = உன் + தீ

38. நாடிகளூடு போய்ப் புக்க நலஞ்சுடர்தான்
வீடு தருமாம் விரைந்து.

மேற்கூறிய நாடிகளுக்குள் ஊடுருவி உள்ளேபோக ஆன்ம ஒளி விரைந்து வீடுபேற்றைத் தரும்.

39. நாடி வழக்கமறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்ப தறிவு.

ஆன்ம நேய ஞானிகளுடன் நெருங்கிப் பழகி, மனம் அடங்கி ஒடுங்கி அவர்கள் காட்டும் அகத்தவப் பயிற்சி வழியில் சென்றுதான் நீண்ட ஆன்ம ஒளியை அறிவின் மூலமாக உணரமுடியும்.

40. அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ்
செறிந்தடங்கி நிற்குஞ் சிவம்.

நோக்கும், மனமும் ஒடுங்கி இருக்கின்ற நாடிகளின் ஆதியாகிய ஓங்கார நாடியில் நிறைந்து நிலைத்து நிற்குமாம் சிவம்(சீவன்).

2 Comments:

Anonymous said...

இப்படி அற்புதமான் விஷயங்களி எழுதிட்டே இருக்கீங்களே!!எப்போ அய்யா தூங்குவீங்க??

Anonymous said...

அன்பு நடேசன்,
இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 3.45 வரை உறக்கம்.