Sunday, December 30, 2007

ஞானக் குறள் - 15.உருவொன்றி நிற்றல் (141-150)

ஞானக் குறள்
*****************
2. திருவருட்பால்
********************
15.உருவொன்றி நிற்றல் (141-150)

**************************************

141.எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி.

எள்ளுக்குள் எண்ணை நிறைந்திருப்பதைப் போல் உடலுக்குள் இருக்கும் பிரணவத்துள் இறைவனின் ஒளியும் இருக்கிறது.

மஸ்தான் கீர்த்தனைகள்:

"நாடாத பேர்கள் பயம்பயம் பயமென்ன
நம்பிய பேர்கள் ஜெயம்ஜெயம் ஜெயமென்ன
தேடிய பேர்கள் நயம்நயம் நயமென்ன
திக்குத் திசைகளெங்கு மிக்கவொளி பரப்பி
ஒக்க உலகமொரு கைக்குள் ளடங்கும்
நம் பரமுததன் குணங்குடி."

142.பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து.

பாலில் நெய் உறைந்துள்ளது போல, சிவாகம சாற்றிறங்களில் (பொதுவாக எல்லா சாற்றிறங்களிலும்) உள்நுழைந்து எங்கும் பரவி நிற்கும் சிவமாகிய இறை.

திருமூலர்:

"அண்ண லருளா லருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே."

அண்ணலாம் சிவன் தக்கவரின் வாயிலாக அருளிச்செய்த இருபத்தெட்டு ஆகமங்களில் உள்ள பாட்டுகள் (சூத்திரங்கள்) இருபத்தெட்டு கோடி நூறாயிரமாகும். விண்ணவர் ஈசனாம் சிவனின் விழுமிய மாண்பினை அவ்வாகமங்களின் வழியே உரைத்து அருளினார். அடியேனும் அச்சிவன் திருவடியினை எண்ணி ஏத்துவன்.

"அண்ண லருளா லருளுஞ் சிவாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
அண்ண லறைந்த வறிவறி யாவிடி
லெண்ணிலி கோடியும் நீர்மே லெழுத்தே."

அண்ணலாம் சிவன் அருளிச்செய்த சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளவைகளின் மெய்ப்பொருள் விண்ணில் வாழும் அமரர்களுக்கும் விளங்கல் அரிதாம். அம் மெய்ப்பொருள் உண்மை கைவரச் செய்யும் சிவ உணர்வுச் சிறப்பினை அறியாவிடில் அவையெலாம் நீர்மேல் எழுத்துப்போல் பயன்தரா.

"பண்டித ராவர் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வாரென்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையு
மண்ட முதலான் அரன்(றஞ்) சொன்ன வாறே."

பதினெட்டு மொழிகளிலும் கூறப்படும் பொருட் கருத்தை உள்ளவாறு உணருபவர் பண்டிதர் ஆவார். அப்பதினெட்டு மொழிகளையும் தக்கார் வாயிலாக உலகினுக்கு அருளியவன் அரனாம் சிவனே.

143.கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு.

உலக வழக்கம் என்னவெனில்:

கரும்பினில் கற்கண்டு போலவும், காயவைத்த பாலில் நெய் ஆடையாக வெளிப்பட்டு நிற்பது போலவும், அங்கியில் (நெருப்பில்) பழுக்கக் காயவைத்த இரும்பு உட்கொண்ட நீரைப் போன்றதேயாம்.
சாற்றிறங்களில் விரவியிருக்கும் இறையை அறியும் மனு மூன்று வகை:

உத்தமர்:
ஆகமங்களை நோங்கிக் கற்று, சத்தாகிய உட்பொருளைப் பிரித்து எடுத்து, சாற்றை எடுத்துப் பக்குவப்படுத்தி ஆத்ம இன்பத்திற்கு உபயோகித்துக் கொண்டு, சக்கையை எறிந்துவிடுவர். இவர்களைக் குறித்து, "கரும்பினிற் கட்டியும்" என்றார்.

மத்திமர்:
ஆகமங்களைக் கற்று, சத்தாகிய உட்பொருளைப் புரிந்தவரை பிரித்து எடுத்து, சாற்றை எடுத்து விளங்கியபடி இயன்றவரை ஆன்ம இன்பத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு நூலையும் பாதுகாத்து வைப்பர். சாற்றைப் பிரித்துவிட்ட பின், மிகுதி உள்ளவரையில் நீக்க வேண்டியதையும் உள்ளிழுத்துக் கொள்வர். சக்கையாகிய தயிரையும் உட்கொள்வர். அதனால், "காய் பாலில் நெய்" என்றார்.

அதமர் :
ஆகமங்களையே அறியார். அறிந்தாலும் சாற்றை உட்கொள்ள இயலவில்லை. இது குறித்தே, "இரும்புண்ட நீர்" என்றார். அதாவது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டு எப்படி நீரை உட்கொண்டு ஒளிபொருந்திய வண்ணத்தையும் இழக்கும் நிலையாம்.

144.பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கு
மழுத்தினா லீச னிலை.

பழுத்த பழத்தைப் பிழியின் இனிக்கும் சாறு வெளிப்படல் போல், ஞானமடைய விரும்பும் வினைஞன் இறையிருக்குமிடத்தை யறிந்து ஞானவினையில் சரத்துடன் நிற்கச் சிவமாகிய இறை வெளிப்படும்.

145.தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது.

சிவமாகிய இறை ஒவ்வொரு உடலிலும் உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து சூரியனிலும், சந்திரனிலும் அணு உருவாய் நிற்கும்.

வாசிட்டம்: தேவ பூசை கதை:

"என்னதுடலிற்சிற்கதிரா யிலங்குதெய்வ நானென்னை
யுன்னுமனங் கண்வாக்குக்களுடைய சத்தித்திரளெல்லாம்
பின்னமின்றி நாயகனைப் பிரியாமகளிர் போனாளுந்
துன்னுமென்றேய நவரதந்தொடர் பாவனை செய்திடல்வேண்டும்."

திருமந்திரம்:

"படர்கொண்ட வாலதின் வித்தது போலச்
சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
விடர்கொண்ட பாச விருளற வோட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே."

விழுது ஊன்றி விரிவாய்ப் படர்ந்துள்ள ஆலமரத்தின் தன்மை முற்றும் அதன் வித்தில் அடங்கியிருக்கிறது. அதுபோல, திருவருள் ஒளியினைக் கொண்டு அணுவாகிய உயிர் வாழச் செந்நெறியினைத் தம் உள்ளத்தே அமைத்தனன். அந்த நன்னெறியில் சென்று எந்நாளும் துன்பத்தை மிகுவிக்கும் பாச இருளை முற்றிலும் ஓட்டிப் பின்னர் அகத்தும் புறத்தும் ஐந்தொழில் செய்யும் எம்பிரானின் திருவடியில் ஒன்றித் திருநெறியை நாடுவது நன்மை தரும்.

"அணுவு ளவனு மவனு ளணுவுங்
கணுவற நின்ற கலப்ப துணரா
ரிணையிலி யீசனவ னெங்குமாகித்
தனிவற நின்றான் சராசரந் தானே."

அவன் = சிவன். கணு = பேதம். தணிவு = எல்லை.

மிகவும் நுண்ணியதாகிய அணுவாம் உயிருள் சிவனும், அச்சிவனில் உயிரும் வேறறக் கலந்து நிற்பதை உணரார். ஒப்பிலாத சிவன் எங்கும் எல்லையின்றிக் கலந்து நிற்கிறான். அதனால் அவனே இயங்கு திணையாகவும், நிலைத் திணையாகவும் ஆகிய எல்லாப் பொருள்களும் ஆகிறான். அதைத் திருவடிக்கண்ணால் உணர்தல் வேண்டும்.

"அணுவி லணுவினை யாதிப் பிரானை
யணுவி லணுவினை யாயிரங் கூறிட்
டணுவி லணுவை யணுக வல்லார்க்
கணுவி லணுவை யணுகலு மாமே."

அணுவாகிய உயிருக்கு உயிராய் நுண்ணியனாய் விளங்குபவன், ஆதியாம் அம்மையை உடையவன் சிவபெருமானாம். அவன் அணுவுக்கு அணுவாய்த் திகழ்பவன். அவனைத் திருவருள் உணர்வால் அளவில்லாது நுணுகி ஆராய வல்லார்க்கு, அவனை அணுகுதல் கைகூடும்.

146.வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே
ஒத்துளே நிற்கு முணர்வு.

சூரிய, சந்திர கலைகளுடன் கூடிய உணர்வாகிய அறிவு (பிரணவம்) உடலுக்குள் வித்திலிருந்துண்டாகும் முளையைப்போல் உண்டாகி, வெளிவந்து எங்கும் விரிந்து நிற்கும்.

147.அச்ச மாங்கார மகத்தடக்கி னாற்பின்னை
நிச்சயமா மீச னிலை.

அச்சம் எனும் கீழ்நோக்குஞ் சத்தியையும், ஆங்காரம் எனும் மேல்நோக்குஞ் சத்தியையும் உடலகத்தேயுள்ள பிரணவ மத்தியில் அடக்கினால் அவைகள் அங்குள்ள அக்கினிக்குள் அடங்கிவிடும். அதன்பின் ஈசன் ஒளிர்விடுவது நிச்சயம்.

148.மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே
வீட்டுளே நிற்கு மியல்பு.

உடலுக்குள் இருக்கும் சிவத்தின் தன்மை, உயர்ந்த மேட்டிலுள்ள நீர், மணம் (வாசனை), முளை, கோழிமுட்டை இவைகளயொத்து இருக்கும். உயர்ந்த இடத்திலிருக்கும் நீர், கீழ்நோக்கி மிக விரைவாகவும், முழுதுமாய் இறங்குதல்போல், பக்குவம் கிட்டின் விரைவாயும், ஆநந்தத்துடனும் சிவம் வெளிவரும்.

மணமானது, மலர்களிலிருந்து கிளம்பி காற்றினால் பரவிநிற்றல் போல், சிவம் பிராணாபான வாயுக்களின் கூட்டுறவாலாகிய வேகத்தினாலேயே, பிராணன், பார்வை, மனம் இவைகள் அசைவற்ற நிலையில் இருக்கும் சமயம், தன் கலையைப் பரப்பிவிடும்.

முளை: நிலத்தில் நீர் கலந்து, வித்தானது இரு பங்காகப் பிளந்து, அதன் மத்தியிலிருந்து சத்தாகிய முளையை வெளிப்படுத்துதல்போல், சிவமானது சேர்ந்திருக்கும் சூரிய சந்திர கலைகளை நில (மண்) சத்தியின் சம்பந்தத்தால், கலைகள் பிளவுற்று மத்தியில் ஒளியோடு வெளிப்படும்.

முட்டை: முட்டையானது, நாத பிந்துக்களைப் பாதுகாத்துக் கொண்டு, தன்னை வெளிப்படுத்திய பெட்டைக்கோழியினாலேயே, காக்கப்பெற்று அதன் வெப்பத்தால் உருவாகி வெளிப்படுதல்போல், சூக்கும நாதபிந்து கலைகள், மேலுங்கீழுமாய் இருப்பதைச் சிவனருளாலேயே கூட்டப்பட்டு, அவனே வெளிப்படுவதாலும், இந்த நான்கினாலும் சிவம் இருந்து வெளிப்படும் வழியைக் காட்டி இருக்கிறதாம்.

149.நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்
அனைத்துயிர்க்குந் தானா மவன்.

எல்லா சீவன்களுக்குமுள்ளே இருக்கும் சிவம், ஞானவினஞர்களின் உணர்வுக்குள்ளே மலமற்று ஒளி வீசிக்கொண்டிருப்பான்.

150.ஓசையி நுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து.

மலரிலிருந்து நறுமணம் வெளிப்படுதல்போல், ஒலியிலிருந்து சதாசிவம் வெளிப்படும்.

திருமந்திரம்:

"சத்தமுஞ் சத்த மனனுந் தகுமனம்
உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ்
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே."

மிக்க வேகமாக எங்கும் நிறைந்துள்ள ஒலி முதலாகிய நாதமெய்யும், பரந்த தன்மையுடைய மனமும், அம்மனத்திலெழும் ஐயங்களுக்குரிய தெளிவுகளை உறுதி செய்யும் இறுப்பு என்னும் புத்தியும், அப்புத்தியை எழுப்பும் இறுமாப்பு எனும் அகங்காரமும், தூக்கி எண்ணுவதாகிய சித்தமும் ஆகிய ஐந்தனுள், சித்தம் மனத்தின் கண் அடங்குவதாலும், நாதம் இவைகளை தொழிற்படுத்துவதாலும், ஏனைய மனம், அகங்காரம், புத்தி ஆகிய மூன்றும் சிறந்தன. அவை முறையே நிகழ்த்தும் நினைப்பு, எழுச்சி, இறுப்பு ஆகிய அந்தக் கரணச் செய்கைகளும் நாத கலையும் கடந்தவனே ஞானி. அவர்கள் கூறும் நெறியே செந்நெறி; மெய்நெறி.

"சத்தமுஞ் சத்த மனமும் மனக்கருத்
தொத்தறி கின்ற விடமும் அறிகிலர்
மெய்த்தறி கின்ற விடமறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடமும் அவ்விடந் தானே."

கண், நாக்கு, மூக்கு, செவி, மெய் என்னும் அறிதற் கருவிகளைந்தும் இங்கே சத்தமெனப்பட்டது. அந்த ஓசையினை வெளிப்படுத்தத் துணை புரியும் மனமும், அம் மனக்கருத்து ஒத்து அறிகின்ற புலன்களும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்ந்து சிவனருளால் இயங்குகின்றன எனும் உண்மையினை அறிய வல்லார்க்கு அவ்வறிவாகவே சிவனிருப்பான்.

8 Comments:

Anonymous said...

//நாடாத பேர்கள் பயம்பயம் பயமென்ன
நம்பிய பேர்கள் ஜெயம்ஜெயம் ஜெயமென்ன
தேடிய பேர்கள் நயம்நயம் நயமென்ன//

அருமையா இருக்கு ஐயா!
அருணகிரியின் "கலீர் கலீர் என" என்ற புகழ் நினைவுக்கு வருகிறது!

மஸ்தான் கீர்த்தனைகள் என்று போட்டுள்ளீர்கள்; யார் என்ன என்று மேல் விவரங்களை அறியாத பிள்ளைகளோம் எங்களுக்குச் சொன்னால், இன்னும் தெரிந்து கொள்வோம்!

Anonymous said...

அன்பு இரவி,

//மஸ்தான் கீர்த்தனைகள் என்று போட்டுள்ளீர்கள்; யார் என்ன என்று மேல் விவரங்களை அறியாத பிள்ளைகளோம் எங்களுக்குச் சொன்னால், இன்னும் தெரிந்து கொள்வோம்!//

குணங்குடி மஸ்தான் கீர்த்தனைகளில் உள்ள ஞானக் கருவூலத்தைப் பற்றி எழுதவே அச்சமாக உள்ளது. அதை எழுதினால் எங்கே நம் இசுலாமிய நண்பர்கள் எதிர்ப்பார்களோவெனத் தான் தொடாமல் உள்ளேன். (இதுபோல் முன்னால் நடந்துள்ளது)

Anonymous said...

மூவகை மனிதர்களையும் அவர்தம் இயல்புகளையும் ஈரடியில் அழகாக உள்ளது அதற்க்கு தாங்கள் சொன்ன விளக்கமும் அருமை. நன்றி.

Anonymous said...

அன்பு சிவமுருகன்,
மிக்க நன்றி

Anonymous said...

தங்களுடைய வலைத்தளம் கண்டேன். நல்ல இறைப்பணி செய்து வருகின்றீர்கள். இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. இடையிடையே தொடர்பு கொள்கிறேன். இந்த 'ஞானக் குறள்' திருவள்ளுவர் எழுதியதா? அறிவித்தால் நலம்.

-ஹரன்.

Anonymous said...

அன்பு ஹரன்,
இது ஒளவைப் பிராட்டி அருளிய ஞானக் கருவூலம்.

Anonymous said...

இந்த பக்கமெல்லாம் தலை வைப்பதற்குள் வேலை & குடும்பம் என்று இழுத்துவிட்டதால்,புதிதாக இருக்கிறது.
நல்ல விஷயங்கள் கொடுப்பதற்கு நன்றி.

Anonymous said...

அன்பின் குமார்,
ஏதோ மாலையில் தேநீர் குடிப்பதைப்போல் கொஞ்ச நேரம் ஒதுக்கிப் பாருங்களேன்.
நன்றி