நண்பர்"மாசிலா"வின் பின்னூட்டம்
*****************************************
தங்களின் பெயர் "மாசிலா" என வைத்துள்ளீர்கள்; ஆயினும் தங்களின் மின்னஞ்சலில் அது உள்ளதே!
//வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய பைத்தியக்கார சிவன் எனும் மாயத்தில் புத்தியிழந்து எவனோ வேறு ஒரு பரதேசி சுத்தமான தமிழில் இந்த மண்ணுக்கே சொந்தமான பூர்வீக குடிகளில் ஒர்வர்களான பறையர்களை சாடி கீழ்த்தனமாக எழுதி இருந்தால் நீங்கள் எந்த உரிமையில் அதை தமிழ்மணத்தில் பதித்தீர்கள்?//
"வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய பைத்தியக்கார சிவன் எனும் மாயத்தில்" என்பதை எப்படி ஒத்துக்கொள்வது. கண்ணால் காண்பதெல்லாம் மாயையே! சிவனைக் கண்ணால் பார்க்கவியலுமா? நான் எந்த இடத்திலும் "வந்தேறி......."
எனக் குறிக்கவில்லையே!
"எவனோ வேறு ஒரு பரதேசி சுத்தமான தமிழில் இந்த மண்ணுக்கே சொந்தமான பூர்வீக குடிகளில் ஒர்வர்களான பறையர்களை சாடி கீழ்த்தனமாக எழுதி இருந்தால்"
எவனோ ஒருவன் அல்ல. அவன் உண்மையான சித்தன். அவன் பறையர்களைச் சாடவில்லை. உயர்த்தித்தான் எழுதியுள்ளான். அவன் சாதிவேறுபாடு காட்டி எழுதவில்லை. முழுவதையும் படிக்காமல், புரிந்துகொள்ளாது குற்றம் சுமத்தவேண்டாம். நம் உடலில் உள்ள வாயைப் "பறைச்சி" எனக் குறிப்பிடுள்ளான். வாயும் சொல்லும் இல்லையெனில் உடலும் உள்ளமும் படும்பாடு பட்டால்தான் தெரியும்.
"நட்டகல்லைத் தெய்வ மென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா?
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"
இதுவும் சிவவாக்கியரின் பாடல்தான்.
இப்பாடலில் முதல் இரண்டுவரிகளை மட்டும் இறைமறுப்பாளர்கள் எடுத்துகொண்டு வசதியாக மற்றுமிரு வரிகளைப் புறக்கணித்து விடுவர்.
அதுபோலன்றி முழுவதையும் படித்துப்பின் தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்.
"நீங்கள் எந்த உரிமையில் அதை தமிழ்மணத்தில் பதித்தீர்கள்?"
ஆம் ஐயா. நான் பதிக்கவில்லை. நான் பதிந்ததோ என் பதிவில். என் பதிவில் பதிப்பிக்க என்னைத்தவிற யாருக்கும் உரிமை இல்லை என்பதை யாரும் மறுக்கவியலாது. தமிழ்மணம் ஒரு திரட்டி என்பதை நினைவுகூருங்கள். அது தன்னாலே திரட்டித் தந்துவிட்டது. இதில் என் தவறொன்றுமில்லை.
மதச் சண்டைகளும், தனிமனிதச் சாடல்களும் மலிந்துவிட்ட தமிழ்மணத்தில் எனக்கு உரிமை இல்லை; வேண்டவும் வேண்டாம். நீங்களே வைத்துக்கொள்ளலாம்.
//நீங்கள் துதிபாடும் சைவர்களைப்பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் சுவனப்பிரியனின் (http://suvanappiriyan.blogspot.com/2006/11/blog-post_22.html)"சமண பௌத்த மதங்களை அழித்த சைவம்" பதிப்பை படித்துவிட்டு வாருங்கள்.//
ஆமாம். அது ஒன்றுதான் பாக்கி. உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்தால் அது தங்களின் அகராதியில் "துதிபாடுதல்" எனப்பொருள் என்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மதமும் அடுத்த மதத்தைப் போட்டு மிதித்துத்தான் மேலே வந்துள்ளதென நானும் அறிவேன். இதற்கு அடுத்தவரின் பதிவைப் படிக்கவேண்டுமெனும் கட்டாயம் இல்லை. யார் என்ன எழுதினாலும் திருத்த நான் யார்? அவரவர் கொள்கையை அவரவர் சொல்கிறார்கள். நான் யார் அவர்களை மாற்ற? இல்லை அவர்கள் மாறித்தான் எனக்கு ஆகவேண்டியது என்ன?
ஞானம் எட்டியின் முதல் பகுதியிலேயே என் வேண்டுகோளை இட்டுவிட்டேன். அதையும் கொஞ்சம் படியுங்கள்.
"அன்புடையீர்.
"ஞானமெட்டி" நூல் முழுவதுமே சாதிப் பாகுபாடு உள்ளதைப் போல்தான் திருவள்ளுவர் எழுதியுள்ளார்.
கீழ்சாதிக்காரன் தன் ஆண்டையை நோக்கி, "ஞான விளக்கம்" கொடுப்பதாக உள்ளது.
"மதமென்னும் பேய் பிடியாதிருத்தல் வேண்டும்"
"எம்மதமும் சம்மதமே"
"நாமத்தை நீக்கித் தத்துவங்கண்டு உணருவதுவே மனுவின் நோக்கம்"
"எப்பொருள் யார்.............மெய்ப்பொருள் காண்பதறிவு."
"மனுவை மனுவாக மதி."
இதுவே எமது கோட்பாடு.
நண்பர்கள் இதனால் மனம் நொந்து புறக்கணித்தால் பல அரிய ஞானக் கருத்துக்களைப் புறக்கணித்து விடுவர்.
ஆகவே, சுட்டும் விரல் நோக்காது, சுட்டும் பொருளை அறிந்து உணர்ந்து பலன் பெற வாருங்கள் என அழைக்கும்,
ஞானவெட்டியான்"
தங்களின் வினாக்களுக்கு விடையிறுக்கவேண்டியிருந்ததால்தான் இவ்விடுகை.
இன்னும் வலைப்பதிவர்களுக்கு ஆட்சேபம் இருப்பின் தெரியப்படுத்துங்கள். "சிவவாக்கியர் பாடல்களையும், ஞானம் எட்டி" ஆகிய இரு பதிவுகளையும் நீக்கிவிடுகிறேன்.
அதன் இழப்பு வரும் இளைய தலைமுறைக்கே! எனக்கல்ல.
எனக்கே காலம் போதவில்லை. என் நேரத்தையும், திறனையும் வீணடிக்க விரும்பாத்தால் முடித்துக்கொள்கிறேன்.
Saturday, November 25, 2006
நண்பர் மாசிலாவுக்கு
Posted by ஞானவெட்டியான் at 8:37 PM 20 comments
Labels: ஞானவெட்டியான், பின்னூட்டங்கள்
Friday, November 24, 2006
கந்தர் கலிவெண்பா - 8
கந்தர் கலிவெண்பா - 8
****************************
ஈரிரண்டு தோற்றத் தெழுபிறப்புள் யோனியெண்பான்
ஆரவந்த நான்கு நூறாயிரத்துள் - தீர்வரிய
கன்மத்துக் கீடாய்க் கறங்குஞ் சகடமும்போற்
சென்மித் துழலத் திரோதித்து - வெந்நிரய
ஈரிரண்டு தோற்றம் = நான்கு வகைத் தோற்றம்
(அவையாவன: முட்டை, கருப்பை, வேர்வை, வித்து)
எழுபிறப்பு: மரம்,ஊர்வன, நீர்வாழ்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர்.
ஆயினும் வள்ளலார் எழுபிறப்பைக் கீழ்க்கண்டவாறு உரைப்பார்:
ஐந்து மாதம் வரை – குழவிப் பருவம்.
அவயவங்கள் உற்பத்திக் காலம்.
பிண்டம் வெளிப்பட்ட காலம்.
குழந்தைப் பருவம்.
பாலப் பருவம்.
குமரப் பருவம்.
முதுமைப் பருவம்.
இதில் சூட்சமப் பிறப்பு 7 :
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, சாக்கிரத்தில் சொப்பனம்,
சாக்கிரத்தில்சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி.
காரணப் பிறப்பு - மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம்
எண்பான் = எண்பது
ஆரவந்த = பொருந்தச் சேர்ந்த
யோனி = கரு வேறுபாடுகள்
என்பத்து நான்கு நூறாயிரம் = 84 இலட்சம்
அவையாவன:
தாவரம் = 20 இலட்சம்
ஊர்வன == 11 இலட்சம்
நீர்வாழ்வன = 10 இலட்சம்
பறவை = 10 இலட்சம்
விலங்கு = 10 இலட்சம்
மனிதன் = 9 இலட்சம்
தேவன் = 14 இலட்சம்
தீர்வரிய = அனுபவியாது தீர்க்க முடியாத
கறங்கு = காற்றாடி
சகடம் = வண்டிச் சக்கரம்
சென்மித்து = பிறந்து
உழல = திரியும்படி
திரோதித்து = (இறைவனை அறியாதபடி) மறைத்து
வெந்நிரயம் = கொடிய நரகம்
முட்டையில் தோன்றுவது, கருப்பையில் தோன்றுவது, வேர்வையில் தோன்றுவது, வித்து, கிழங்கு ஆகியவைகளில் தோன்றுவது, ஆகிய நான்கு வகைத் தோற்றத்தையும், மேற்கூறிய எழுவகைப் பிறப்புக்களையும், எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களையும் அமைத்து, அவற்றுள், உயிர்கள் அவ்வவற்றின் வினைகளுக்குத் தக்கபடி பிறந்து, காற்றாடியும் வண்டிச் சக்கரமும்போல் சுழன்று அலைந்து திரிந்து - கொடிய நரகம்.......
Posted by ஞானவெட்டியான் at 12:14 PM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
Tuesday, November 14, 2006
கந்தர் கலிவெண்பா - 7
7.தந்த வருவுருவஞ் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து - மந்திரமுதல்
ஆறத்து வாவுமண்டத் தார்ந்தஅத்து வாக்களுமுற்
கூறத்தகுஞ் சிமிழ்ப்பிற் கூட்டுவித்து - மாறிவரும்
விந்து = சுத்த மாயை
மோகினி = அசுத்த மாயை
மான் = பிரபஞ்ச மாயையாம் பிரகிருதி
பெந்தம் = பந்தம், கட்டு
மந்திரமுதல் = மந்திரம் முதலியன
ஆறத்துவா = ஆறு வழிகள் = மந்திரம், பதம், வர்ணம், புவனம், ததுவம், கலை
சிமிழ்ப்பு = பிணைப்பு
மாறிவரும் = மாறிமாறி வருகின்ற
உயிர்கள் உடலெடுக்க உருவமும், உருவற்றதுமான சுத்த மாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை ஆகியற்றவற்றை உயிர்களோடு சேர்ப்பித்து, அவற்றோடு சேர்ந்த உயிர்கள் செல்லுதற்குரிய மந்திரம், பதம், வர்ணம், புவனம், ததுவம், கலை என்னும் ஆறு வழிகளையும், பதிநான்கு உலகிலுள்ள மற்ற வழிகளையும் இணைத்து மாறிமாறி வருகின்ற.......
Posted by ஞானவெட்டியான் at 12:25 PM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
Thursday, November 09, 2006
கந்தர் கலிவெண்பா - 6
கந்தர் கலிவெண்பா
***********************
6.துருவு மருவு முருவருவு மாகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முக்தியளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்
துருவு மருவு முருவருவு = உருவம், அருவம், அருவுருவம்
பருவ வடிவம் = அடியார் மனப்பக்குவத்திற்கேற்ற திருமேனி
இருள்மலம் = ஆணவ மலம்
மோகம் = மயக்கம்
மலபாகம் = மலங்கள் நீங்கும் நிலை(பக்குவம்)
தேகமுற = உருவெடுக்கும்படி
ஆதிமுதலாகிய ஒரு வடிவத்திலே நின்று,உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வடிவங்களாகி(அடியாருக்கு அவர்தம் மனப்பாங்குக்கு ஏற்றவாறு வெளிப்படும்) பெரிய வடிவங்கள் பலவற்றை உடையவனே! அறியாமைக்குக் காரணமான பாசத்துள் உழன்று மயக்கத்தில் முழுகியுள்ள எல்லா உயிர்களுக்கும் வீடுபேற்றைத் கொடுப்பதற்கேற்றபடி, அந்தப் பாசங்கள் நீங்கத் திருவருள் வைப்பவனே!
Posted by ஞானவெட்டியான் at 9:19 PM 3 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
குறவஞ்சி.com
அன்புடையீர்,
என் படைப்புக்கள் அனைத்தையும் ஒருங்கே காண வாருங்கள்:
குறவஞ்சி.com
Posted by ஞானவெட்டியான் at 6:24 PM 0 comments
Labels: குறவஞ்சி, ஞானம், ஞானவெட்டியான்






