Monday, December 01, 2008

121 - விவேக சிந்தாமணி

121.வேலியானது பயிர்தனை மேய்ந்திட விதித்தாற்
காலனானவ னுயிர்தனைக் கவர்ந்திட நினைத்தால்
ஆலமன்னையர் பாலகர்க் கருத்துவாரானால்
மேலிதோர்ந்துடன் யார்கொலோ விலக்குவர் வேந்தே.

ஆலம் = விடம்
அருத்துவர் = ஊட்டுவர்
ஓர்ந்து = அறிந்து
விலக்குவர் = தடுப்பவர்

வேந்தே!
காவல் காக்கும் வேலியே விலங்குகளை அழைத்துத் தன் காவலுக்குட்பட்டுள்ள பயிரை மேய்ந்துகொள்ளுங்கள் என்றால் பயிர் யாரிடம் முறையிடும்? உயிர் கவருவதையே தொழிலாக உடைய மறலியாம் எமன் எவ்வுயிரைக் கவர்ந்தாலும் அவன் செயலைத் தடுத்து நிறுத்த இயலாது. பாசமும் நம்பிக்கையும் உடைய தாயே தன் குழவிக்கு நஞ்சூட்ட நினைத்தால், அக் கொடிய செயலை அறிந்து குழவியால் தடுக்க இயலாது. இவைபோல் குடிமக்களைக் காக்கவேண்டிய மன்னனே அவர்களை அழிக்க நினைத்தால், அக்குடிமக்களால் அதைத் தடுக்க இயலாது.
ஆகவே, அரசன் தன் குடிகளைக் காக்கவேண்டுமேயன்றி அழிக்க நினையாதிருத்தல் வேண்டும்.

0 Comments: