Friday, December 28, 2007

அன்பும் சிவமும்

அன்பும் சிவமும்
********************

திருமந்திரம்
*************

"அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே."

புறத்தான் = அன்பின் மேலுள்ளவன்.
உடலாயுள்ளான் = அன்பினையே உடலாக உள்ளவன்.
அணுகிய = நெருங்கிய
முன்பினுள்ளான் = உலக உற்பத்திக்கு முன்னும், அதன் அழிவுக்குப் பின்னும்

சிவனாம் சிவம் இன்ப இயல்பை உடையவன். இன்ப இயல்பின் வாயிலாம் அன்பினுள்ளே இருக்கிறான். அந்த அன்புக்குக் காவலாய் புறத்தாகவும் உள்ளான். அன்புக்குப் புகலிடமாய் இருப்பதால் உடலாயும் உள்ளான். "அன்பும் சிவமும் ஒன்றே; அது உடலும் உயிரும் போல" என்னும் கருத்து இருக்கிறது. என்றாலும், உலகத் தோற்றத்துக்கு முன்னும், அதன் மாற்றத்துக்குப் பின்னும், ஒன்றுபோல் என்றும் நின்று நிலவுபவன் சிவன். அவன் முற்றுந் துறந்த முனிவருக்கெல்லாம் முதல்வன். வேறெதற்கும் அகப்படாதவன். அன்பினுள் அமர்ந்து அருளுபவன் அவனே. அடைதற்கு அரிய அரும் பொருள். அவன் இறவாத இன்ப அன்புடையோருக்குத் தன் திருவடியினை அணையாகவும் துணையாகவும் அளிப்பவன்.

"அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே."

ஐந்தில் அமர்ந்து = ஐம்பூதங்கள் என்பார் சிலர். "சிவயநம" என்போருமுண்டு.

எல்லா உயிர்களின்மேல் செலுத்தும் அன்பால் ஒருவருக்கு உண்மையறிவு உண்டாகும். அதனால் அடக்கமுடைமை உண்டாகும். இப்பண்புகளிடமாக நின்று அருளுபவன் சிவன். அதனால் அப்பண்புகளே சிவம் எனக் கூறப்பட்டன. அதுபோல கணவனும் மனைவியும் புணரும்பொழுது சிவசிந்தனையுடன் கூட அதில் கிட்டும் சிற்றின்பமும் சிவமே. ஊழிக்காலத்துக்குப்பின் உலகைத் தோற்றுவிக்கும் பெரும் பொருள் சிவனே. அவ்வாறு தோற்றுவித்து, நிலை நிறுத்திப் பின் பேரொடுக்கம் செய்யும் ஊழிப்பெருமானும் சிவனே.

ஆக, அன்பும் சிவமும் இரண்டறக் கலந்து நிற்பதால் அன்பே சிவமாம்.

7 Comments:

Anonymous said...

// அன்பே சிவமாம் //

அய்யா,

மிக்க நன்றி.

Anonymous said...

// முன்பினுள்ளான் = உலக உற்பத்திக்கு முன்னும், அதன் அழிவுக்குப் பின்னும் //

அய்யா,

அருமையான விளக்கம்.

மிக்க நன்றி

Anonymous said...

அன்பு சிவபாலன்,
மிக்க நன்றி.

Anonymous said...

கணவனும் மனைவியும் சிவசிந்தனையும் கூட முடியுமா! முயன்றால் முடியாயதில்லைதான். சித்திரமும் கைப்பழக்கம்தானே!

Anonymous said...

அன்பு இராகவன்,
அனைத்திலும் சிவத்தைக்காணும் இருவருடைய மன அதிர்வுகள் ஒத்திருப்பதில் வியப்புண்டோ? அவர்களே கணவனும் மனைவியாகவும் வாய்த்துவிட்டால் அக்கணமும் எக்கணமும் ஒன்றே!

ஞானவெட்டியான்
# KURAVANJI
# HOMOEPATHY
# SHRIDI SAI BABA
# PHILOSOPHY
# PSYCHIC SCIENCES

Anonymous said...

ஐயா!!
யாவும் சிவமயம்!! நம் சிற்றின்பம் கூட!! மிக நன்று.
உயிர்ச் சிருஸ்டியின் மையமல்லவா???
யோகன் பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,
ஆமாம்.
சக்தியும் சிவமுமல்லவா?