நாள் முப்பது - பாடல் முப்பது
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்.
இருபத்தொன்பதாம் பாடல் பாவை நோன்பை நிறைவு செய்யும் பாடலாக அமைந்துளது. இப்பாடல் திருப்பாவையை நிறைவு செய்யும் பாடல். இப்பாடல்களைப் பக்தியோடு பாடுவோர் அடையும் நலன்களைச் சொல்கிறது.
இப்பாடல்களைப் பாடும் அனைவருக்கும் திருவருள் கிடைக்கும் என்ற உறுதியோடு பாடல் நிறைவுறுகிறது.
வங்கக் கடல் கடைந்த மாதவன் என்று சொல்லிப் பாடல் ஆரம்பமாகிறது. இறைவனுக்குச் செய்யும் எந்த ஒரு வேண்டுகோளும் பிராட்டியாகிய இலக்குமி வழியாகச் செய்யும் போது நிச்சயம் நிறைவேறுகிறது என்பது வைணவர்கள் நம்பிக்கை. பாற்கடலை அமிர்தத்துக்காகக் கடைந்த போது தோன்றியவள் இலக்குமி. அதனாலேயே வங்கக் கடல் கடைந்த நிகழ்வு இப்பாடலில் சிறப்பிக்கப்படுகிறது.
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் எனும் போது திருந்திய வடிவமும் தீர்மானமான பக்தியும் கொண்டவர்கள் என்பதைக் குறித்தார்.
இருபத்தொன்பதாம் பாடலில் குறித்த எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்குமான பறையாக எங்கும் திருவருள் கிடைக்கும் என்று அறுதியிடுகிறது முப்பதாம் பாடல்.
நாச்சியார் தோன்றிய திருவில்லிபுத்தூர் அணிபுதுவை என்று விளக்கம் பெறுகிறது. பெரியாழ்வாரும் நாச்சியாரும் ஆபரணமாகத் தோன்றிய ஊர் என்பதாம்.
கோதை -
தமிழில் அழகிய பெண் என்று மட்டுமே பொருள்.
வடமொழியில் கோதையெனில் தெய்விகப் பாடல்களைப்
பாடியவள் என்று பொருள்.
இப் பாடலுடன் திருப்பாவை முப்பது பாடல்களுக்குமான விளக்கவுரை நிறைவு பெறுகிறது.
Monday, January 11, 2010
திருப்பாவை - 30
Posted by ஞானவெட்டியான் at 12:44 PM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
திருப்பாவை - 29
நாள் இருபத்தொன்பது - பாடல் இருபத்தொன்பது
சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே வோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
இப்பாடலில் பாவை நோன்பின் குறிக்கோளை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள், பாவையர்.
விடியற்காலை வேளையில் வந்து உன்னை வணங்கி உன் பொற்பாதங்களை போற்றிப் பாடும் காரணத்தைக் கூறுகிறோம் கேட்டருள்வாய்.
பசுக்களை மேய்க்கும் இடையர்கள் குலத்தில் பிறந்த நீ உன்னைச் சரணடைந்த உன் அடியவர்களை அடிமைகளாக ஏற்றுக் கொள்ளாமலிருப்பது உனக்குத் தகுதியோ?
கோவிந்தா! இன்று(இப்பிறவி) மட்டுமல்ல. இன்னும் எத்தனை பிறவி எடுக்கினும் உன்னோடு கூடியிருப்போம், உனக்கே அடிமைகளாகி சேவை செய்வோம். மற்ற எந்த விருப்பங்களும் மனத்தில் எழாமல் ஆட்கொண்டு அருள்வாய்!
கோவிந்தன்:
ஆநிரைகள் ஆயர்களின் செல்வம். மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை "பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ" என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள்.
இதுவரைக்கும் பறை கேட்டனர் ஆயர்பாடிப் பெண்கள். வழக்கமான விளக்கத்தின்படி அப்பறை அல்லது பரிசில் வளம் தரும் மழையாகவும் ஏற்ற கணவன்மார் அமைதலும் ஆகும். பார்க்கப் போனால் பாவை நோன்பின் வேண்டுதல் மழை என்று கருதுவதே காலந்தப்பிப் போன வேண்டுதலாக அமைந்துவிடும். கார்த்திகை முதலிலேயே பருவ மழைக் காலம் முடிந்துவிடுகிறது.
மார்கழி மாதம் குளிர்காலம். தைமாதம் அறுவடைக் காலம். பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள். எனவே பாவை நோன்பை செழிப்பான அறுவடைக்கான பிரார்த்தனையாகக் கொள்வதே சரி.
சமூகம் செழிப்பை வேண்டத் தனிப்பட்ட முறையில் மணவாழ்வு வேண்டுவதாகப் பாவை நோன்பு அமைகிறது என்று கொள்வது
சரியானதாகத் தெரிகிறது. அறுவடையும் திருமணமும் வளத்தைக் குறிப்பிடுகின்றன.
திருப்பாவையின் திரு என்ற அடைமொழியைக் கருத்தில் கொண்டால் அறுவடையும் நல்வாழ்வும் தாண்டிப் புனிதமான ஒன்றைக் வேண்டுவதாக அமைய வேண்டும். மழை என்றவிடத்துக் கடவுளின் கருணை மழை என்று கொள்ளலாம். இறைவனோடு இணைந்துவிடுதல் மணம் என்று கொள்ளலாம்.
Posted by ஞானவெட்டியான் at 12:11 PM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
திருப்பாவை - 28
நாள் இருபத்தெட்டு - பாடல் இருபத்தெட்டு
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவிப் பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
நாங்கள் ஆயர்கள். கன்று பசுக்களுடன் காட்டிற்கு சென்று அவைகளை மேய்த்து, அவைகள் உண்ணும்போது நாங்களும் உண்பவர்கள். அறிவற்றவர்கள். அப்படிப்பட்ட ஆயர் குலத்தில் எங்களுடன் நீ பிறந்திருப்பதனால் நாங்கள் பெரும் புண்ணியம் செய்திருக்கின்றோம்.
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்னுடன் உண்டான இந்த உறவு இனி ஒரு பொழுதும் மாறாது. அன்பு மேலீட்டால் உன்னை மற்ற சிறுவர்களை அழைப்பதைப் போல் உன்னையும் அழைப்பதனால் கோபம் கொள்ளாதே! எங்களை காத்து எப்போதும் உன் சேவகம் செய்யும் வரம் தருவாயாக.
குறையொன்றும் இல்லாத ஸ்ரீ கோவிந்தா:
மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் ஆயர் குலத்தில் வளர்ந்தவன் கண்ணன் என்பதால் கோவிந்தன் என்றும் பெரிய பிராட்டியாரையே தன் வல மார்பில் கொண்டுள்ளதால் குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் என்றும் பாடுகின்றார் ஆண்டாள். ஆன்மா தன்னுடைய இறைத் தொடர்பை உணரத் தவறிய போதும் இறைவனுக்கு ஏதும் குறையில்லை என்று கொள்ள வேண்டும்.
இப்பாடலில் ஆன்மாவின் இயல்பு, ஆன்மாவுக்கு இறைவனோடான தொடர்பு, உடலெடுத்த ஆன்மா இறைவனை நோக்கிய வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய சரியான மனப்பாங்கு ஆகியவை பற்றி விளக்குகிறது.
உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது:
கடவுள் பரிபூரணம். ஆன்மாவுக்கு இறைவனோடான தொடர்பு முடிவில்லாதது என்று பொருள். இதையே அந்த உறவைப் புரிந்து கொள்ளும் வரை வாழ்வோடான பிணைப்பை அறுக்க முடியாது என்றும் பொருள் கொள்ளலாம். எனவே ஆன்ம இறைத் தொடர்பை ஆன்மா உணராமல் இருப்பதாலோ மறுத்துவிடுவதாலோ துணித்துவிடுவதாலோ அது இல்லாமல் போய்விடுவது இல்லையாகும்.
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து:
ஆயர்பாடிப் பெண்டிரின் வாழ்வு கறவையினத்தைச் சார்ந்தது. அன்றாடக் கடமைகளைக் கவனிப்பதால், இறைவனை அவர்கள் மறந்து விட்டிருக்கலாம். அல்லது இறைவனை உணரும் அளவுக்கு உணர்வு, அறிவுக் கூர்மையற்றவர்களாக இருக்கலாம். அவர்கள் மத்தியில் கண்ணன் தோன்றி வந்திருப்பது இறைவனின் கருணையே.
இப்படிப்பட்ட எங்கள்மேல் உன் கருணை மழையைப் பெய்விக்க வேண்டும் என்பதே வேண்டுதல்.
உடலெடுத்த வாழ்வே அறியாமைக்கு அடித்தளமாக அமைந்துவிடுகிறது. அவதாரங்களில் தன்னை மானுடச் சூழலில் வெளிப்படுத்துவது இறைவனின் மிகப் பெரிய கருணைக்கு அடையாளமாகிறது. அதனால்தான் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்தில் இறைவனைப் பெற்றிருப்பதைச் சிறப்பிக்கின்றனர்.
இறைவனோடான ஆன்மாவின்தொடர்பு தவிர்க்கவியலாத ஒன்று. அதனால்தான் உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்கிறார்கள்.
ஆன்மா இவ்வுலக பந்தங்களால் அலைக்கழிக்கப்படுகிறது. என்றாலும் இறைவன் எப்போதும் ஆன்மாவுக்கு அருகிலேயே இருக்கிறான். ஆயினும் இறைவனை அறிந்து கொள்ளும் அளவுக்கு ஆற்றல் அற்றவனாகவே ஆன்மா இருக்கிறது. எனவே என்னதான் செய்து எப்படித்தான் இருந்தாலும் தன் ஈடேற்றத்தை ஆன்மா தன் காரியங்கள், பாவனைகள் மூலம் சாதித்துக் கொள்ள முடியாது. எனவே ஈடேற்றத்துக்கான ஒரே வழி தன் எல்லைகளை அறிந்து இறைவனிடம் முழுக்கச் சரணடைந்துவிடுவதே.
Posted by ஞானவெட்டியான் at 12:09 PM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
திருப்பாவை - 27
நாள் இருபத்தேழு - பாடல் இருபத்தேழு
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சன்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாறக்
கூடியிருந்து குளிர்ந்தோலோர் எம்பாவாய்.
உன்னை கூடி மகிழாது ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வெல்லும் சீரிய கோவிந்தா!
இந்த பாவை நோன்பை நோற்பதால் நாங்கள் பெறும் பரிசு மிகச்சிறந்தது. உன் கருணையினால் அகிலத்து மக்கள் போற்றும் பரிசுகள் அனைத்தும் பெற்றிடுவோம்.
நோன்பிற்காக வைத்துள்ள அலங்காரங்கள் அனைத்தும் மேற்கொள்வோம். தலையில் சூடாமணி சூடுவோம். தோள் வளையங்கள் அணிவோம். தோடணிவோம். கைகளில் வளையல்கள் அணிவோம். செவியில் செவிப்பூ அணிவோம். கால்களில் பாடகம் அணிவோம். இப்படி பல ஆபரணங்களை அணிவோம். மலர் சூடுவோம். புது பட்டணிவோம்.
அதன் பின், பால் சோறு பொங்கி அதில் பசு நெய் கலந்து முழங்கை வழிய வழிய உன்னுடன் கூடி உண்ணுவோம். அதன்பின்னாவது மனம் இரங்கி நீ எங்களுக்கு நாங்கள் கேட்பதைத் தா!
கோவிந்தன்:
மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன்.
"கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா":
பசுக்கள் ஆயர்களின் செல்வம். அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் எனலாம். உன்னை கூடி மகிழாது ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வெல்லுகிறவன் என்றும் கொள்ளலாம்.
இப் பாடல் பாவை நோன்புக்கான கலங்களைப் பட்டியலிடுகிறது.
அருச்சுனனின் சாரதியாகக் கண்ணன் பயன்படுத்தியது பாஞ்ச சன்னியம். அதே சங்கைக் கொண்டுதான் ஆநிரைகளை ஒருங்கு சேர்த்தானாம் கண்ணன். கோயில் வழிபாடுகளில் பயன்படுவதும் இந்தச் சங்கே. அப்படியான சங்கை ஒவ்வொரு பாவைக் கன்னிக்கும் கண்ணன் அருள்கிறான்.
ஈரடிகளால் உலகளந்தபோது ஜாம்பவான் முழக்கியது பறை. அதே பறைதான் ராமன் ராவணனை வெற்றி கொண்டபோதும் முழங்கியது.
கொடி கருடக்கொடி.
விதானம் மதுரையிலிருந்து ஆய்ப்பாடிக்குக் கண்ணனைக் கொண்டு செல்லும் போது மழைக்குக் குடையாக வந்த ஆதிசேஷன்.
இப்படியாக வேண்டிய பறைகள் அனைத்தும் தந்தருளிவிட்ட பின்னும் இன்னும் சில பரிசுகள் கேட்கிறார்கள் பாவையர். ஆபரணங்களும் அணிமணியும் பூண்டு இறைவனோடு இருந்து போசனமும் செய்ய வேண்டுமாம்.
தன்னுடையது என்றிருந்த அனைத்தையும் ஏற்கெனவே துறந்துவிட்டவர்கள் பாவை நோன்பிருக்கும் கன்னியர். எனவே இனித் தமக்கென வேண்டுவது தமக்காவதாக இருக்கப் போவதல்ல.
இறைவனுடையதை இறைவனின் அருளாக அணிந்து கொள்ளப் போகிறார்கள். இறைவனின் அருளையே ஆடையாகவும்
அணிகலனாகவும் பூண்டு மூட நெய் பெய்த பாற்சோறாக உண்ணப் போகிறார்கள்.
உண்ணும் உணவும் பருகும் நீரும் நாரணனாகவே ஆகிப் போகின்றன. பசித்தவன் உண்பதையல்ல இவர்கள் பேசுவது. இறைவனோடு இருத்தலைக் கொண்டாடி கூடியிருந்து விருந்தாடலைக் குறிக்கிறார்கள்.
Posted by ஞானவெட்டியான் at 6:58 AM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
Sunday, January 10, 2010
திருப்பாவை - 26
நாள் இருபத்தாறு - பாடல் இருபத்தாறு
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
போலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்களே போய்ப்பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
ஊயர்ந்தவனே! மேன்மைமிகுந்தவனே! திருமாலே! நீல நிற மணியின் வண்ணத்தை ஒத்தவனே! மார்கழி நோன்பு நோற்று நீராட வந்த பாவையர்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்பாயாகில்......
முழங்கும்போது அகிலத்தை நடுங்கவைக்கும் பாஞ்சசன்னியத்தை போல் முழங்கும் சங்கம் வேண்டும். பெரும் முரசுகள் வேண்டும். உன்னைப் போற்றிப் பல்லாண்டு பாடும் கலைஞர்கள் வேண்டும். அழகிய மங்கள தீபங்கள் வேண்டும். ஆடிப்பறக்கும் கொடிகள் வேண்டும். எங்களைக் காக்க எங்கள் தலை மேல் கூரையும் வேண்டும். ஆலிலையில் பள்ளிகொண்டவனே! இவற்றை எங்களுக்கு நீ அருள்வாயாக.
இப் பாடல் பாவை நோன்புக்கானவற்றைக் கேட்பதாக அமைந்திருக்கிறது. சங்கு, பறை, கொடி, விதானம் ஆகியவற்றோடு இறைவனைப் பாடும் அடியார்களின் சங்கத்தையும் வேண்டிப் பாடுகிறார்கள்.
பாடலில் முதலடியில் இறைவனை “மாலே” என்று அழைக்கிறார் ஆண்டாள். உயர்ந்தவர், மேன்மையானவர் என்று பொருள் கூறலாம். என்றாலும் இறைவனின் உயர்வுக்கு என ஒரு சிறப்பு உண்டு.
மணிவண்ணன் என்பது இறைவனுக்குத் தரப்பட்டுள்ள மறுபெயர். நீலமணியைக் குறித்து எழுந்த பெயர். நாராயணர் நிறம் பற்றி மழை மேகத்தோடும் குவளை மலர்களோடும் நீலமணியோடும் பேசுவது வழக்கம்.
ஆன்மா தன் இயல்பான இருப்பில் இறைவனோடு இடையறாச்
சம்பந்தம் கொண்டது. பிறப்பெடுத்து வந்த போது அந்தச் சம்பந்தத்தை இழந்துவிட்டது. இழந்துவிட்ட இறைச் சம்பந்தம் நோக்கி ஏங்கி பாவை நோன்பில் சங்கு, பறை, கொடி, விளக்கு, விதானம், சாமரம், கண்ணாடி என்று அனைத்தையும் கொண்டு இறைவனோடு இருக்கும் உணர்வை அனுபவித்தலின் வெளிப்பாடாக அமைகிறது இப்பாடல்.
Posted by ஞானவெட்டியான் at 12:29 PM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
திருப்பாவை - 25
நாள் இருபத்தைந்து - பாடல் இருபத்தைந்து
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தருக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்.
வடமதுரையில் தேவகியின் மகனாகப் பிறந்து ஒரு இரவிற்குள்ளாகவே கோகுலத்தில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்தது, அகங்காரத்தினால் கேடு நினைத்த கம்சனுக்கு வயிற்றில் நெருப்புப் போல நின்று இருந்த பெருமாளே! நெடுமாலே! உன் அடிமைகளாகிய நாங்கள் உன்னை வேண்டி வந்துள்ளோம். எங்களுக்கு தேவயான இறைக் கருணையைப் பரிசிலாக அளிப்பாயாக. அவ்வாறு நீ எங்களை ஆட்கொண்டால் என்றென்றும் உன்புகழ் பாடி, உனக்கு சேவை செய்து வருத்தம் தீர்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.
தேவகி மைந்தன் யசோதையின் மகன் ஆனது:
கண்ணன் பிறப்பு, வளர்ப்பு, செயல்கள் அனைத்துமே இனியவை. அவன் தேவகியின் மகனாய் பிறந்தவன். இறைவனையே பிள்ளையாகப் பெற அவள் பெற்ற பேறு பெரியது, ஒப்பற்றது. சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படவேண்டிய கண்ணனின் பிறப்பு சிறைக்குள் நிகழ்ந்தது. கண்ணனை ஓர் இரவு கூட மதுராவில் வைத்துக் கொள்ள இயலவில்லை. இரவோடு இரவாக வாசுதேவர் கண்ணனை கோகுலத்துக்கு எடுத்து சென்றார். விழித்திருந்த காவலர்கள் அனைவரும் மாயையால் உறங்கினர்; சிறைக் கதவுகள் தானாக திறந்து கொண்டன. வெள்ளம் கரை புரண்டு பாய்ந்த யமுனை நதி இரண்டாகப் பிளந்து வசுதேவருக்கு பாதை அமைத்தது. மழையிலிருந்து கண்ணனைக் காப்பாற்ற ஆதிசேடன் குடைப் பிடித்தான். பெண் குழந்தை பெற்ற யசோதை தன் உணர்வின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். கண்ணனை அங்கு விட்டு, வசு தேவர் அந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு சிறைக்குத் திரும்பி வந்தார். சிறைக்கதவுகள் பூட்டிக் கொண்டன. மாயை விலகி காவலர்கள் விழித்துக் கொண்டனர். சிறைக்குள் இருந்த குழந்தை அழுதது. குழந்தை பிறந்த செய்தி மன்னனுக்குச் சென்றது. ஆசையுடன் வரவேண்டிய தாய் மாமன் ஆயுதத்துடன் வந்தான். ஈவு இரக்கமில்லாமல் பெண் குழந்தை என்றும் பாராமல் கொல்ல முற்பட்டான் . குழந்தை மாயாவாக மாறி உன்னைக் கொல்லப்பிறந்தவன் கோகுலத்தில் உள்ளான் என்னும் உண்மைதனை உணர்த்தி மறைந்தது. இத்தனையும் நடந்தது அந்த ஒப்பற்ற இரவில்.
கண்ணனை தன் கண்ணின் மணியாக வளர்த்தாள் யசோதை. நந்தகோபர் கண்ணனை ஒளித்து வளர்ப்ப அறிந்த கம்சன் அவனைக் கொல்ல கருதி, சகடம், கொக்கு, கன்று, குதிரை, விளாமரம், குருந்த மரம், பூதனை முதலிய பல அசுரர்களை அனுப்பினான் அனைவரும் கண்ணால் வதம் செய்யப்பட்டனர். வில் விழாவிற்கு கண்ணனையும், பலராமரையும் அழைத்து, மல்லர்களையும், குவலயாபீடத்தையும் ஏவிக் கொல்ல முயற்சி செய்தான். அதுவும் வீணானது. இவ்வளவு செயல்களும் கம்சனின் வயிற்றில் நெருப்பை வளர்த்தது; அந்நெருப்பு நின்றுகொண்டே இருந்ததாம். இவ்வாறு கம்சனின் அனைத்து செயல்களையும் முறியடித்து அவனையும் கண்ணன் வதம் செய்தான்.
இப்பாடலின் முதற்பகுதி மீண்டும் கண்ணனின் இளமைப் பருவத்தைப் பற்றியும் கண்ணனைக் கொல்லக் கம்சனின் பலனற்ற முயற்சிகள் பற்றியும் பேசுகிறது. கம்சனின் சகோதரியான தேவகியின் மகனாகச் சிறையில் பிறந்தவன் கண்ணன். இரவோடு இரவாக யசோதையின் மகனாக வளரக் கோகுலத்துக்குப் போய்ச் சேர்ந்தவன். ஓருத்திக்கோ பெற்ற தனிச் சிறப்பு; இன்னொருத்திக்கோ வளர்த்த தனிச் சிறப்பு.
இப் பாடலில் இறைவனோடு இடையீடற்ற தொடர்பு வேண்டிப்
பாடுவது தெளிவாகத் தெரிகிறது.
Posted by ஞானவெட்டியான் at 11:59 AM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
திருப்பாவை - 24
நாள் இருபத்து நான்கு - பாடல் இருபத்து நான்கு
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்.
திரிவிக்கிரமனாக மூன்று அடிகளால் மூவுலகங்களையும் அளந்த திருவடியை போற்றி வணங்குகின்றோம். இலங்கையை அழித்த உனது திறமையைப் போற்றுகின்றோம். மாய வடிவில் வந்த சகடாசுரனை உதைத்து மாய்த்து உனது புகழைப் போற்றுகின்றோம். கன்றின் உருவத்தில் வந்த வத்ராசுரனை எறிந்து விளங்கனி விழ வைத்த உனது திறத்தைப் போற்றுகின்றோம். ஆயர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்த உன் கருணை குணத்தைப் போற்றுகின்றோம். பகைவர்களை அழிக்க உன் கையில் விளங்கும் உனது திவ்விய ஆயுதங்களை வணங்குகின்றோம். என்றென்றும் உனக்கு அடிமையாக இருந்து உன் சேவை புறப்பட்டு இன்று வந்தோம். எங்களுக்கு இரங்கி அருள் புரிவாயா?
அன்றிவ்வுலகமளந்தவன்: வாமன அவதாரத்தில் இவ்வுலதத்தை ஒரு அடியில் அளந்தவன்.
சென்றங்கு தென்னிலங்கை செற்றவன்: மேலும் நாங்கள் தேடி வந்த இந்த திருவடிகள் முன்பு சீதா தேவியார் பொருட்டு, தென்னிலங்கை சென்று இராவணனை அழித்தவை.
பொன்றச் சகடம் உதைத்தவன்: கம்சனால் ஏவப்பட்ட அரக்கி பூதனா கண்ணன் கையால் மாண்டதால் கோபம் கொண்ட அவன், கண்ணனைக் கொல்ல மற்றொரு அசுரனை அனுப்பினான் . அவனும் சகட(சக்கர) வடிவம் எடுத்து கண்ணனை ஏற்றிக் கொல்ல உருண்டு வந்தான். அதனை அறிந்த கண்ணன் தனது பிஞ்சுக் கால்களால் அவனை உதைத்து அவனை வதம் செய்தார்.
கன்று குணிலாய் எறிந்தவன்: கண்ணனாகிய குழந்தையைக் கொல்ல கம்சனால் ஏவப்பட்ட அசுரர்கள் ஒவ்வொருவராக மாண்டதால், பின் இரண்டிரண்டாக வரத் தலைப்பட்டனர். கபித்தாசுரன், வத்ராசுரன் என்னும் இரு அரக்கர்கள் இவ்வாறு திட்டம் போட்டு வந்தனர். கபித்தாசுரன் விளா மரமாக நிற்க, கன்றுக் குட்டி போல வத்ராசுரன் உருவெடுத்து சென்று கண்ணனை போக்குக் காட்டி விளா மரத்திற்கு அருகில் வரச் செய்து, வேரோடு கண்ணன் மேல் சாய்ந்து அவரைக் கொல்ல திட்டம் தீட்டி வந்தனர். எல்லாம் அறிந்த மாயக் கண்ணன், மரம் அருகில் வந்து, கோபாலர்கள் விளாம் பழத்தைக் குறி வைத்து அடிக்க சிறு தடியை உபயோகிப்பது போல, கன்று போல வந்த அசுரனை தடியாக மாற்றி விளா மரத்தின் மேல் எறிந்து இருவரையும் வதம் செய்தான்.
குன்று குடையாய் எடுத்தவன்: ஆயர்கள் இந்திர விழாவெடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அப்படித் தனக்கு வழக்கமாக விழாவெடுத்துக் கொண்டாடாமல் போன ஆயர்களைத் தண்டிக்க இந்திரன் வருணனைக் கொண்டு கோகுலத்தில் மிகுமழை பொய்விக்க எங்கும் வெள்ளக்காடாயிற்று. ஆயர்கள் கண்ணனிடம் சென்று சரணடைய கண்ணன் கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாய்ப் பிடிக்க ஆயர்கள் அனைவரும் அதற்கடியில் நின்று தப்பித்தனராம். இதைக் குறிக்கவே குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்கிறார்.
இப்பாடல் இறைவனது மேன்மை வெளிப்பட்ட அவதாரச் செயல்களைப் போற்றிக் கொண்டாடுகிறது.
முதலடியில் வாமன அவதாரம் குறிக்கப்படுகிறது. மகாபலி முவ்வுலகையும் தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்து ஆண்ட காலம் தேவர்கள் அவனுடைய கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனிடம் சென்று முறையிட்டார்கள். என்னதான் கொடூரமானவன் என்றாலும் இல்லையெனாது தரும் வள்ளல். குறளனாக ஒரு பிராம்மண வடிவத்தில் இறைவன் அவனை அணுகியபோது தானமாக என்ன வேண்டுமென்று கேட்க மூன்று அடிகளால் அளக்குமளவுக்கு மண் வேண்டும் என்று இவர் கேட்டார். தாரை வார்த்துத் தானமாக மூன்றடி மண்ணை அவன் வழங்கினான். இறைவன் விண்ணுக்கும் மண்ணுக்குமான வளர்ந்து மண்ணை ஓர் அடியாலும் விண்ணை ஓர் அடியாலும் அளந்துவிட்டு மூன்றாவது அடிவைக்க இடமில்லாமையால் அவன் தலைமீது வைத்து அவனை அழித்தது வாமன அவதாரக் கதையாகும்.
இங்கு அவதாரங்களைப் பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். மொத்தம் பத்து அவதாரங்கள். அதில் பத்தாவது அவதாரமாகிய கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் நிகழப் போவதாக நம்பிக்கை. முந்தைய ஒன்பது அவதாரங்களைப் பார்க்கும் போது பரிணாம தத்துவத்துக்கு ஒரு விளக்கம் கிடைப்பதைப் போல இருக்கிறது. முதல் மூன்று அவதாரங்கள் மிருக வடிவில் இருக்க அடுத்த அவதாரம் பாதி மிருகமும் பாதி மனிதனுமாக இருக்க அடுத்த ஐந்து அவதாரங்களும் மனித வடிவில் இருக்கிறது. பத்தாவது அவதாரம் பற்றிய நம்பிக்கையோ மனிதத்துவத்தைத் தாண்டிய கல்கி அவதாரம்.
முதல் அவதாரம் நீரில் இருக்கும் மச்ச அவதாரம்.
இரண்டாவது நீரிலும் நிலத்திலும் இருக்கும் கூர்ம அவதாரம்.
மூன்றாவது அவதாரம் நிலத்தில் இருக்கும் வராக அவதாரம்.
நான்காவது அவதாரம் நரசிம்மாவதாரம்.
அடுத்ததாக வாமனனாக குறள் வடிவில் மனித அவதாரம்.
இந்த ஐந்து அவதாரங்களும் ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக அவ்வப்போது தோன்றி வருவதாக அமைந்தவை.
ஆறாவதாகத் தோன்றிய பலராமர் உழவுத் தொழிலைக் குறிக்கும் கலப்பயைக் கைக்கொண்டிருக்க அடுத்து பரசுராமர் சத்திரியராக அமைகிறார்.
பிறகு ராமனாக மானுட லட்சியம் எதுவாக அமையும் எனக் காட்டினார். லட்சிய புருடனான ராமனிலிருந்து காரிய மேன்மை கொண்ட கிருட்டிணாவதாரம். பல விதங்களிலும் அதர்மத்தை அழிக்க வேண்டிய காரியபுருடராகவே கண்ணன் இருந்திருக்கிறார். கடைசியாகப் பாரதப் போரில் ஆயுதம் எதுவும் ஏந்தாமல் போரில் பங்கு கொண்ட விந்தையையும் காண்கிறோம். பாரதப் போரில் அவருக்கு ஒரு பங்குண்டு என்றாலும் எந்தப் பக்கமும் சாராதவர் அல்லவா?
இந்தப் பாடலில் நோன்புக்கான பரிசிலாக (பறை) இறை அருளைப் பெற வந்திருக்கிறோம் என்கிறார்கள்.
Posted by ஞானவெட்டியான் at 10:58 AM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
திருப்பாவை - 22
நாள் இருபத்திரெண்டு - பாடல் இருபத்திரெண்டு
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழ்
சங்கமிருப்பார் போல வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
இப் பாடலும் முந்தைய பாடலைப் போலவே இறைவனின் அருளை வேண்டுவதாக அமைந்திருக்கிறது. முந்தைய பாடலில் மாற்றார் வலி தொலைந்து ஆற்றாது வந்து அடிபணிவதைப் பற்றிப் பேசக் கேட்டோம்.
ஆயினும் அவர்கள் வாசற்கடையில்தானே நிற்கிறார்கள்? இருபத்திரெண்டாம் பாடலில் குறித்த அரசர் மாற்றார் அல்லர். அரசர்களானாலும் வாழ்வியலின் ஏற்றத் தாழ்வுகளுக்கு உட்பட்டவர்கள். தோல்வி, வறுமை, விரக்தி போன்ற உணர்வுகளை அநுபவிப்பவர்கள். வாழ்வியலின் கூறுகளான துன்பங்கள் தாக்கும் போது அரசர்களாயினும் ஆண்டிகளாயினும் ஆணவம் அழிகிறது. தான் தனது என்பவற்றின் சிறுமையை உணரும்போது இறைவனிடம் வந்து சேர்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது இக்கன்னியரும் அவ்வாறே ஆனவர் என்பது தெரிகிறது. அவர்களும் வாழ்வின் துயர வசப்பட்டவர்களே. அத்துயரங்கள் எல்லாம் நீங்கிப் போகும் என்பதனாலேயே “எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர்” என்கிறார்கள்.
ஆயினும் அவர்களுடைய சாபம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டதாலோ அல்லது செய்யக் கூடாததைச் செய்து விட்டதாலோ அவர்கள் மேல் பாய்ந்ததல்ல. உடலெடுத்து வந்ததே பாவத்தின் அடிப்பிறந்தது என்பதால் அந்தப் பாவத்தைக் கழிக்க வேண்டும் என்கிறார்கள். சீரிய வாழ்வு வாழ்ந்தால் இறைவனின் கருணைக்கும் கீழான வாழ்வு வாழ்ந்தால் சாபத்துக்கும் ஆளாக நேரிடும். எனவே ஒழுக்கம் என்பது சமய வாழ்வின் முக்கிய பகுதியாகிறது.
இந்து மெய்ப்பொருளியலில் ஈடேற்றம் என்பது சிறப்பான பொருளைப் பெறுகிறது. இறைவனோடு இடையீடற்ற தொடர்பு கொள்ள வேண்டும் என்பதே வாழ்வின் பயனாகிறது. பாவங்கள் மட்டுமன்றி புண்ணியங்களும் தொடர்ந்து வரும் பிறப்புக்குக் காரணமாகின்றது. எனவே உண்மையான துறவு என்பது புண்ணிய பாவம் ஆகிய இரண்டையும் துறந்து விடுவதுதான். இறைவனிடம் சரணடையும் போது புண்ணியம் பாவம் ஆகிய இரண்டின் விளைவுகளும் தீர்ந்து போய்விடுகிறது.
அதனால்தான் நம்மாழ்வார், எல்லாவற்றையும் முழுக்க விட்டுவிட்டு இறைவனிடம் சரணடைய வேண்டும் என்கிறார். எல்லாவற்றையும் எனும்போது பாவம் புண்ணியம் ஆகிய இரண்டையும்தான் என்று கொள்ள வேண்டும்.
அடுத்து, தான் தனது என்ற பற்றை வேரோடு விட்டுவிடுவதைப் போல உயிருக்கு ஆகிவருவது வேறு எதுவும் இல்லை என்கிறார். அப்படித் தனது பற்றை எல்லாம் விட்டுவிட்டு இறைவனிடம் சரணடைய வேண்டும்
என்கிறார். உடலெடுத்திருப்பது அப்படி அனைத்தையும் விட்டுவிட்டுச் சரணடைவதற்குத் தடை.
ஆகையால் பாவையர் தங்கள் மேல் சாபம் இழிய வேண்டும் என்று வேண்டும்போது உடலெடுத்திருப்பதன் பீடிப்பு நீங்கவேண்டும் என்றுதான் பொருள்.
இறைவனின் கருணை திடீரெனப் பொங்கிப் பாய்வதல்ல. சிறுகச் சிறுகச் எங்கள்மேல் விழிபடாதோ என்கின்றனர். அப்பொழுதாவது மெதுவாக மெதுவாக எங்களைப் பிடித்த பாவம் அகலுமே என்கின்றனர். அதுவன்றித் திங்களைப் போலக் குளுமையும் சூரியனைப் போல வெம்மையும் எனும்போது ஆணவத்தைத் தகிக்கும் வெம்மையும் அருளின் குளுமையும் குறிக்கப்பட்டனவாம்.
சாபம் என்றால் செய்த அல்லது செய்யாமல் விடுத்த செயல்களால் விளைவது எனக் கொள்ளாது உடலெடுத்திருப்பதே சாபம் என்று கொள்கின்றனர் பாவையர். இங்கு, தம் பாவம் புண்ணியம் ஆகிய அனைத்தையும் தீர்த்துவிட்டு ஈடேற்றம் வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.
Posted by ஞானவெட்டியான் at 6:50 AM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
திருப்பாவை - 21
நாள் இருபத்து ஒன்று - பாடல் இருபத்து ஒன்று
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தாய் மகனே அறிவுறாய்
ஊக்கமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாறு போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
திருப்பாவையின் இருபத்தொன்று முதல் இருபத்து மூன்றாம் பாடல் வரை நப்பின்னையும் ஆயர்குலச் சிறுமியரோடு சேர்ந்து கொண்டு இறைவனைத் துயிலெழுப்புவதாக அமைந்திருக்கின்றன.
இப்பாடல்களில், வளம், ஊக்கம், பெருமை, பொலிவு ஆகிய இறை இயல்புகளும் ஆய்க்குலத்துப் பெண்டிரின் சரணாகதியும் மிகப் பொருந்தி வந்துள்ளது. ஒரு வகையில் இறைஇயல்பு குறித்த வைணவக் கோட்பாடும் பாகவதர் இலக்கணமும் பக்தியின் முடிந்த குறிக்கோளும் இப்பாடல்களில் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளது எனலாம்.
இருபத்து ஒன்றாம் பாடலில், வளம், ஊக்கம் ஆகியன சொல்லப்படுகின்றன. நந்தகோபன் அரண்மனையின் வளத்தை மிகச் சிறப்பாகச் சொல்கின்றன முதலிரண்டு அடிகள். ஏற்கெனவே பாத்திரங்கள் நிரம்பிவிட்டன. என்றாலும் பசுக்களின் மடியில் இன்னமும் பால் உள்ளது. எனவே ஏற்கெனவே பால் நிறைந்து விட்ட பாத்திரங்களில் மேல் நுரையைத் தள்ளிவிட்டு இடம் உண்டாக்கி இன்னமும் கொஞ்சம் பாலைக் கறந்து விடுகிறார்களாம்.
முன்னரே இறைவனை நந்தகோபன் மகனாகக் கண்டோம். கண்ணனை நந்தகோபன் மகனாகக் காண்பதில் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது. ஆயர் குலத்தில் இறங்கி வந்து வளர்ந்தது இறைவனின் சித்தம். அதுவும் ஆய்க்குலத்துப் பெண்டிரை ஈடேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் அந்த அடியார்கள் தன்னைத் தேடி வந்தபின்னும் உறங்கிக் கொண்டிருக்கலாமா? எனவே அவதாரத்தின் பயனே தம்மை ஈடேற்றுவது என்பதை வலியுறுத்தவே கண்ணனைத் திரும்பத் திரும்ப நந்தகோபன் மகன் என்று கூறுகிறார்கள்.
பசுக்கள் = குரு. ஞானத்தின்பால் சீடர்களைத் திருப்புகிறவர்கள். அவர்களுடைய உபதேசமே பால். மடியில் கைவைத்தவுடன் பால் சொரிய ஆரம்பிக்கும் பசுக்கள் பாத்திரம் நிறைந்த பின்னும் விடாது பால் சொரிந்து கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட எல்லையில்லாத உபதேசமே இந்தப் பாடலில்
சிறப்பித்துப் பேசப்படுகிறது.
ஊக்கமுடையாய் என்ற சொல்லுக்கும் பல பொருள் காண்பர். வேதத்துக்கு உட்பொருள் இறைவன். இறைவன் இல்லாமல் வேதம் பொருளுடையதாகவே ஆவதில்லை. இரண்டாவதாக அமரர் துயரத்தையும் தீர்க்கும் வல்லமை உடையவன் இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
பெரியாய் எனும் வார்த்தைக்குப் பொருள் காணும் போது வேதங்களாலும் உரைக்க முடியாத பெருமையும் அருமையும் கொண்டவன் என்று கொள்வர். இருக்கும் வேதங்களும் இனி இருக்க வரும் வேதங்களும் சொல்லி மாளாத பெருமையும் அருமையும் அவனுடையது. வேதங்கள் உரைத்த அருமை பெருமையெல்லாம் தாண்டியதே அவன் அருமையும் பெருமையும்.
தோற்றுப் போனவர் தன் ஆணவத்தையும் அகந்தையையும்
துறந்துவிட்டு வென்றவர் வாயிற்படியில் காத்துக் கிடப்பதைப் போல நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்கிறார்கள். எதிர்த்தவர் சரணடையும் போது இயல்பாகத் தன் அருளை அவருக்குத் தருபவன் இறைவன். காகத்தின் கண் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்ற இராம பாணத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். இன்று போய் நாளை வா என்று இராவணனை அனுப்பி வைத்தமையை எண்ணிப் பாருங்கள்.
இவர்கள் தோற்று வந்தவர்கள் அல்லர். போற்றிப் பாடி வந்தவர்கள். தம்மைத் தத்தம் கொடுத்துவிட்டவர்கள். இறைவன் வல்லவன் என்பதால் அன்றி இறைவனின் அருளைத் தெரிந்து கொண்டவர்களாக அவனிடம்
சரணடைகிறவர்களாக ஆய்ப்பாடிச் சிறுமியர் தம்மை இனம் காட்டிக் கொள்கிறார்கள்.
உக்கம் என்ற சாமரம் பற்று எல்லாவற்றையும் விரட்டி அடிப்பது. கண்ணாடியே ஞானம்.
எனவே இருபதாம் பாடலின் கோரிக்கையை பற்றுக்களை விரட்டி அடிப்பதற்கும் ஞானத்தைக் கண்டு கொள்வதற்கும் அருளுமாறு கேட்பதாகக் கொள்ள வேண்டும்.
திருப்பாவையின் இருபத்தொன்றாம் பாடல் வைணவ மெய்ப் பொருட்குவியலில் ஒரு வைரம்.
Posted by ஞானவெட்டியான் at 6:22 AM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
Sunday, January 03, 2010
திருப்பாவை - 19
நாள் பத்தொன்பது - பாடல் பத்தொன்பது
குத்து விளக்கெரியக் கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.
குத்து விளக்கு எரிய, யானைத் தந்தத்தினால் செய்த கால்களையுடைய கட்டிலின் மேல், மெத்தென இருக்கும் பஞ்சு மெத்தையின் மேல் ஏறி, கொத்தாக பூவினை முடிந்த கூந்தலுடைய நப்பின்னையின் முலைகளின் மேல் கைகளை வைத்துப் படுத்திருக்கும் மலர் மார்பா, வாயை திறந்து பேசு. மையெழுதிய கண்களையுடையவளே, நீ உன் கணவனை எவ்வளவு நேரமாயினும் எழுப்ப மாட்டாய். சிறிதளவும் கூட அவனைப் பிரிந்திருக்க முடியாது உன்னால். நான் கூறுவது தத்துவமொன்றும் அல்ல, தகவல்தான்.
திருப்பாவையில் பத்தொன்பது மற்றும் இருபதாம் பாடல்களில் மட்டுமே மெய்யுணர்வாம் காமச் சுவை குறிப்பிடப்படுகிறது.
திருப்பாவையின் ஒன்பதாவது பாடலில் பள்ளியறை குறிக்கப்பட்டது. இன்னமும் நோன்பிருக்க வந்து சேர்ந்து கொள்ளாத கன்னியின் படுக்கை அறை அது. அந்தப் பள்ளியறை சுகமான சோம்பலுக்கானது. இந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ள பள்ளியறையோ கூடலின் பரவசத்தைக் குறிப்பது.
அங்கே தூமணி மாடத்தில் சுற்றும் விளக்கெரிந்தன. தூபம் கமழ்ந்தது. தூக்கத்தின் பிடி இழுத்துப் பிடித்தது. புகையில் மங்கிய விளக்கின் ஒளியும் துயிலணையும் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததைக் குறித்தன.
இப்பாடலில் குறித்த பள்ளியறையோ வேறு வகையானதாக இருக்கிறது.
புகையில்லை, நறுமணமோ இல்லையோ. எனவே விளக்கின் ஒளியை மங்கச் செய்ய ஏதுமில்லை. அழகு, குளிர்ச்சி, மென்மை, மணம், தூய்மை ஆகிய ஐந்து நற்பண்புகளும் இந்தப் படுக்கைக்கு உண்டு. போகமன்றி கூடலுக்குப் பின்னான பரவசத்தில் இறைவனும் இறைவியும் கட்டிப் பிடித்துப் படுத்திருப்பதை இங்கே காணலாம்.
இறைவியின் கூந்தல் உணர்வின் வெப்பமற்ற மலர்கள் மலர ஏதுவான குளிர்ச்சியாம்.
தன் மார்பின் மீது கிடப்பவரை எழ விடமாட்டாளாம். அந்த அளவுக்கு கூடலின் பரவசம். தன் நாயகன் பக்தருக்கு அருள் புரிகிறவன் என்பது தெரியும். தனக்கே தனக்கென்று அவனை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தகாதுதான். விடிந்து விட்ட நாள் ஆயர் சிறுமியரைக் கோயிலுக்குக் கொண்டு வந்து விட்டது என்பது அவளுக்கும் தெரியும்.
முந்தைய பாடலின் இறுதியில் நப்பின்னை கட்டிலை விட்டு நீங்கிக் கதவைத் திறக்கப் போகிறாள். கண்ணனோ தானே கதவைத் திறக்க வேண்டும் என நினைக்கிறார். எனவே நப்பின்னையை இழுத்துக் கட்டிலில் போட அவள் இவருடைய மார்புமீது விழ அவள் மார்பின் பரிசம் இவரை எழ விடாமல் செய்துவிட ஆயர் சிறுமியர் வெளியே காத்திருப்பதையும் மறந்து விடுகிறாராம்.
கடைசியில் கதவைத் திறக்காவிட்டாலும் சரி. எங்களுடைய வேண்டுகோளையாகிலும் கேளுங்கள் என்று அவர்கள் சொல்ல நப்பின்னை தனது அணைப்பை இறுக்குகிறாளாம். உள்ளே நடக்கும் உணர்வு
நாடகத்தை உணர்ந்தவர்கள் போலவே ஆயர் சிறுமியர் அவளிடம் தம் பிரார்த்தனைக்குச் செவி மடுக்கவாகிலும் அவரை விடுவிக்குமாறு கேட்கிறார்களாம்.
முதல் நான்கு அடிகளில் பொறாமை ஒலிப்பது தெரிகிறது. முட்களிடையே ஓடிக் கண்ணனோடு இருக்க மணற்பாங்கான இடம் தேடி அவர்கள் அலைய வேண்டியிருக்க நப்பின்னை கோட்டுக்கால் கட்டிலில் மெத்தென்ற பஞ்சணையில் துய்க்கிறாளே என்பதுதான் பொறாமை.
கண்ணனும் நப்பின்னையும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து உறங்குவதை இருவேறு கோணத்தில் காணலாம்.
முதல் வகை: மல்லாந்து படுத்திருக்கும் கண்ணன் நப்பின்னையை இழுத்துத் தன் மேல் போட்டுக் கொள்ள அவளுடைய மார்பகங்களின் பளுவை இவர் உணர்வதாகச் சொல்வது.
இரண்டாவதாக எழுவதற்கு முன்பே நப்பின்னையைப் படுக்கையில் தள்ளி அவள் மேல் இவர் படுப்பதாகச் சொல்லி தன் மார்பு அவள் மார்பை அழுத்தும் சுகத்தை அனுபவிப்பதாகச் சொல்வார்கள். முதல் விளக்கம் இரண்டாவது விளக்கத்தை விடக் கிளர்ச்சி கூடியதாக இருக்கிறது. என்றாலும் சம்பிரதாயமான விளக்கத்தில் பலரும் இரண்டாவது விளக்கத்தையே
ஏற்றுக் கொள்கின்றனர்.
ஆன்மாவுக்கு இறைவன் தேவை என்பது ஒன்று. இறைவனுக்கும் ஆன்மா தேவைப்படுகிறது. இந்தப் பாடலில் முவ்வகை நிலைகள் பேசப்படுகின்றன. கடவுள், தேவி, ஆன்மா. கர்ம வினை பாற்பட்டு இறைவனிடமிருந்து பிரிந்து உடலெடுத்து வாழ வந்தவை ஆன்மாக்கள். உடலோடு கூடிய இந்த வாழ்க்கை கர்ம வினைகளிள் பயன்களைக் கழிப்பதற்கு ஏதுவானது. அப்படிக் கழித்து விட்டு மீண்டும் இறைவனோடு சேர்வதுதான் வாழ்வின் பயன். அப்படி வாழ்வதென்பது எப்போதும் இறை உணர்வோடு இருப்பது. தேவி அத்தகைய வாழ்வுக்குத் துணையாக இருப்பதை விட்டுவிட்டுத் தடையாக இருக்கலாமா?
அதனால்தான் நப்பின்னையே!, "இது உனக்குத் தகுதியல்ல" என்கிறார்கள்.
இன்பங்களைத் துறக்காது, இன்பங்களுக்கு ஒரு நிலைமாற்றம் காண்பதுதான் வைணவத்தில் வாழும் வழி. இன்பத்தைத் துய்க்கும் போது அதை இறைவனுக்கு அர்ப்பணித்துத் துய்ப்பதுதான் அது.
பத்தொன்பது முதல் இருபத்திரண்டாம் பாடல் வரையில் இறைவனும் துயிலெழுந்து வரவேண்டும் என்பது கோரிக்கை.
இறைவனும் உறங்குகிறான் என்றால் பக்தரின் மேல் அக்கறையில்லாதவன் போலப் பாவனை செய்கிறானோ என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இறைவனுக்கு அக்கறை இல்லையென்றால் அது நாத்திகமல்லவா?
நாரணன் துயில்வது யோகநித்திரை.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 11:19 AM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
திருப்பாவை - 18
நாள் பதினெட்டு - பாடல் பதினெட்டு
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
நிற்காது ஓடும் மதம் பிடித்த யானையை உடையவனும் எதிரிகளைக் கண்டு அஞ்சி ஓடாத தோள் வலிமைக் கொண்டவனுமாகிய நந்தகோபனின் மருமகளே, நப்பின்னாய் ! நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே, கோழிகள் கூவத்தொடங்கிவிட்டன; பந்தலின் மேல் குயில்களும் விடாது பலமுறை கூவுகின்றன. இதுகண்டும் விடிந்துவிட்டது தெரியாதோ? கண் திறந்து வந்து வாயில் திறப்பாய்.
பந்தாடுகிற விரல்களையுடையவளே! உன் கணவனின் பேர் சொல்லிப்
பாடுகின்றோம். செந்தாமரைப் போன்ற கைகளில் சீரான வளையல் ஒலிக்க வந்து கதவை திற. நாங்கள் மகிழ்வோம்.
பதினெட்டாம் பாடலின் நோக்கம் நப்பின்னையைத் துயிலெழுப்புவது.
கண்ணனின் தேவியை நந்தகோபாலன் மருமகளாகக் காட்டுகிறது இப்பாடல்.
மதம் கொண்ட யானையைப் போன்ற வலிமையானவன் நந்தகோபாலன். உந்து மதகளிற்றன் என்பதற்கு மூன்று வகையில் பொருள்கொள்ளலாம்.
முதலாவதாக மதம் கொண்ட யானை போன்ற வலிமை உள்ளவன்.
இரண்டாவதாக மதம் கொண்ட யானையை அடக்கும் வலிமை உள்ளவன்.
மூன்றாவதாக களிறுகளைத் தன் படையில் கொண்டவன்.
இதில் மூன்றாவதை விடுத்து முதலிரண்டில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வதற்குத் தடையேதுமில்லை.
ஓடாத தோள்வலியன் என்று வருவதைக் கருத்தில் கொண்டால் இவ்விரு பொருளும் ஏற்புடையது என்பது தெளிவாகிறது. கம்சனின் கொடுங்கோன்மைக்கு முன் நந்தகோபாலன் மட்டுமே கெளரவத்தையும் பாதுகாப்பையும் காப்பாற்ற முடிகிறது. ஆக நந்தகோபானின் வீரமும் வலிமையும் கொண்டாடுப்படுவது சரியே.
பந்தார் விரலி என்பதைக் காணும்போது, பந்தாட்டத்தில் தேர்ந்த நப்பின்னை தான் வென்ற பந்துகளைக் கையில் வைத்துக் கொண்டே தூங்குகிறாளோ?
இறைவனின் கருணையை பக்தியில் முதிர்ந்தோரும் வலிந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை இப்பாடல் வலியுறுத்துகிறது. அம்மையின் அனுமதியின்றி இறைக்கருணை கிட்டுமோ? நப்பின்னை அவர்கள் பக்தியை ஏற்றுக் கொண்ட பின்னரே இறைவனின் கருணை சித்திக்கும். இதையே கையில் வளை குலுங்க வந்து கதவைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை புலப்படுத்துகிறது.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 11:18 AM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
திருப்பாவை - 16
நாள் பதினாறு - பாடல் பதினாறு
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்போனே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்போனே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்.
குலத் தலைவனான நந்தகோபனின் கோயிலைக் காப்பவனே! கொடியுடன் கூடிய தோரணமுடைய வாயிலைக் காப்பவனே ! மணிக் கதவை திற. ஆயர் குலச் சிறுமியருக்கு அருள் தருவதாக நேற்றே அந்த மாயன் மணிவண்ணன் கூறினான். அவனை பாடி எழுப்ப உடலாலும், உள்ளத்தாலும் தூயவர்களாய் வந்துள்ளோம். காலையில் முதன் முதலில் முடியாது என கூறாதே. நீ இந்த நிலைக்கதவைத் திறப்பாயாக.
பதினைந்தாவது பாடலோடு பாவை நோன்பின் ஒரு கட்டம் முடிவடைகிறது.
பதினாறாவது பாடலிலிருந்து அடுத்த கட்டம் தொடங்குகிறது. இப்பாடல்களுக்கு இடையே கன்னியர் நீராடி
வைணவ அடையாளங்களை அணிந்து கொள்கிறார்கள். மனத்தளவிலும் தூயராகிறார்கள்.
அகத்தூய்மையும் புறத்தூய்மையும் அடைந்துவிட்ட காரணத்தால் கோயிலுக்குள் புகுவதற்குக் கோரிக்கை விடுக்க முடிகிறது.
இப் பாடலில் குறிப்பிட்டுள்ள தூய்மை என்பது என்ன?
நம்மாழ்வார், திருவாய்மொழியில்:
நாளும் நின்று அடு நம் பழமையாம் கொடு வினையுடனே
மாளுமோர் குறைவில்லை மனனகமலமறக் கழுவி
நாளும் திருவுடையடிகள்தம் நலம்கழல் வணங்கி
மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு வாழ்வது வளமே.
மனத்தில் இருக்கும் மலங்களைக் கழுவிவிட்டு இறைவன் அடிகளை வணங்கும்போது வினையின் கொடுமையான விளைவுகள் இல்லாமல் கழிந்து போகின்றன. அப்படி வாழ்வதே இந்த வாழ்வைச் சிறப்புற வாழ்வதாம்.
இந்தத் தூய்மையானது கடவுளின் கருணையை ஏற்றுக்கொள்ளப் பக்குவப்பட்ட மனத்தை உடையவராதல் என்று கொள்ள வேண்டும். கோயிலில் கடவுளுடனோடான இப்போதைய உறவு தரும் பரவசம் இனி ஈடேற்றம் நிச்சயம் என்ற நம்பிக்கையைத் தருவதாக அமைகிறது.
கடவுளின் கருணை அளப்பரியது. தகுநிலை எண்ணாது தரப்படுவது என்றாலும் அதைப் பெற்றுக் கொள்ள மனம் ஒரு நிலைக்கு வரவேண்டியிருக்கிறது. அந்நிலையில் மானுட வாழ்க்கை ஆன்ம வாழ்வை வாழ வருகிறது. தான் தனது என்ற மயக்கங்களில் இருந்தும் நுகர்வுகளின் பாற்பட்ட நாட்டத்திலிருந்தும் விடுபட்டுத் தூயதாகிறது.
மனிதனை உணர உடலும் ஆத்மாவும் ஒன்றுக்கொன்று போட்டி போட வேண்டும் என்பதில்லை. அவை தமக்குள் இயைந்து நிற்கும் போது மானுட வாழ்வின் முழுமையில் இறைவனின் வாழ்வை வாழ முடிகிறது. எனவே பாவை நோன்பிருக்கும் கன்னியர் இறைவன் மேல் வைத்த பக்தியைக் கொண்ட தாழ்ந்ததொரு வாழ்வின் பிடியிலிருந்து தாம் விடுபட்டுவிட்டதைக் கூறுகிறார்கள்.
சைவ சித்தாந்தத்திலும் இப்படியாக சாதித்த நிலை மேம்பாடு பேசப்படுகிறது. வாழ்க்கை என்பது பாசி படர்ந்த ஒரு குளம். பாசி மிக அடர்த்தியாகப் படர்ந்திருப்பதால் நீர் கண்ணுக்கே தெரிவதில்லை. குளத்துக்குள் ஒரு கல்லை வீசி எறிந்தால் பாசி விலக நீர் தெரிகிறது. என்றாலும் அந்தக் காட்சி ஒரு
கணத்துக்கே நிலைக்கிறது. பாசி மறுபடி மூடிக் கொள்ள நீர் மறைந்து போகிறது. குளத்துக்குள் எறிந்த கல்லே பக்தி. பாசி விலகத் தெரிந்த நீரே ஆன்மா.
கேரள மாநிலத்தில் ஏற்றமனூர் என்ற இடத்தில் சிவன்கோயில் ஒன்று இருக்கிறது. பக்தர்கள் அந்தக் கோயிலுக்குச் செல்லும் போது எந்தக் குறிப்பிட்ட வேண்டுதலும் இல்லாமல் போக வேண்டும் என்பார்கள். தான் தனது என்பதை முழுக்கக் கழித்துவிட வேண்டும் என்ற ஏகாக்கிரக சிந்தையோடு அங்கே போக வேண்டும். அத்தகைய மனநிலையே இறைவனின் இருப்பிடத்தைச் சென்று சேர ஒருவருடைய தகுநிலையாகிறது.
கோயில் வாசற் காப்பாளருக்குக் கன்னியர் பக்தியில் கனிந்தவர் என்பது தெரிந்துதான் இருக்கிறது. என்றாலும் குரு வழக்கமாகச் செய்வதைப் போல அவர்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தாமதப்படுத்துகிறார்கள்.
கம்சனின் கொடுமையான ஆட்சியின் கீழ் நாடு இருந்த போதே கிருஷ்ணன் வளர்ந்தான். அப்படியே கன்னியர் உடல்வாழ்வெனும் தளையின் பிணைப்பில் இருக்கிறார்கள். எனவே தாம் சூர்ப்பனகை அல்லது பூதனை போன்ற அரக்கியர் அல்லர் என்று வாயிற்காப்போருக்கு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. தம்மை ஆயர்சிறுமியர் என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். மேலும் பாவை நோன்பின் பயனாகத் தம் அருளை வழங்குவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான் என்பதையும் சொல்லி கோயிலுக்குள் நுழைய அனுமதி கேட்கிறார்கள். தம் பாடல்களைக் கொண்டு இறைவனைத் துயிலெழுப்ப வேண்டும் என்கிறார்கள்.
இவ்வாறு கோயிலுக்குள் நுழைய அனுமதி வேண்டிப் பாடிய பாடல் திருப்பாவையின் பதினாறாவது பாடல்.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 7:25 AM 0 comments
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்