ஆஞ்சநேயன் துதி
********************
மிகச் சிவந்த முகமுடைய வானரன்
.....மேரு போன்ற எழிலுரு வாய்ந்தவன்
பகை யழித்திடும் வாயுவின் புத்திரன்
.....பாரிசாத மர நிழல் வாழ்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்
.....ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்.
அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன்
......ஆளும் இராமனின் நாமம் கேட்டிடில்
சிரத்தின் மீதிவன் கூப்பிய கையுடன்
......திரண்ட கண்ணில் நீர்சோரத் துதிப்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்
......ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்
சித்த வேகமும் வாயுவின் வேகமும்
......சேர்ந்தவன் தன் புலன்களை வென்றவன்
புத்தி மிக்கவர் தம்முட் சிறந்தவன்
......புகழி ராமனின் தூதுவன் வாயுவின்
சேயன் வானர சேனையின் முக்கியன்
......சென்னி தாழ்த்தியச் செம்மலைப் போற்றுவேன்.
யாரும் செய்வதற் கேயரி தானதை
.....ஐயநீ செய்குவை ஏதுனக் கரியது?
பாரில் என்செயல் நீநிறை வேற்றிவை.
.....பரிவின் ஆழிநீ இராம தூதனே!
ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!
.....ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!
அறிவு மற்றும் உடல் வலி நற்புகழ்
.....ஆளும் சொற்றிறம், அச்சமிலா மனம்
வறிய புன்பிணி நீங்கிய மேநிலை
.....வளரும் தைரியம் மேவிடும் நிச்சயம்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்திடின்
......அனுபவத் தினில் இவைபெற லாகுமே!
(ஆஞ்சநேயன் கோயிலில் கொடுத்த ஒரு அறிவிப்புத் தாளிலிருந்து எடுக்கப்பட்டது.)
Thursday, October 19, 2006
ஆஞ்சநேயன் துதி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment