Thursday, October 19, 2006

ஞானரத்தினக் குறவஞ்சி (21 - 30)

ஞானரத்தினக் குறவஞ்சி (21 - 30)
*****************************************

21."ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? - அது

அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!"

ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி?

ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர், மண் ஆகியவைதானடா சிங்கா!"

22."ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? - அது
அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!"

ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது(அனுபோகம்) யாரடி சிங்கி?

மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா சிங்கா.

23."தன்னை அறியுந்தலமேதடி சொல்லடி சிங்கி? - அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா!"

தன்னை அறியும் தலம்(இடம்) எதடி சிங்கி?

கண்களிடையேயான ஐம்புலன்களும் சந்திக்கும் இடமேதானடா சிங்கா.

24."என்னவிதமாகத் தன்னையறிவது சிங்கி? - அது
தன்னவன் றாய்தந்தை யாகிநா மானது சிங்கா!"

தன்னையறிவது எப்படி சிங்கி?

தன்னுடைய தாய் தந்தையையும் ஆகி, நாமுமாகிய விந்து தானது சிங்கா.

25."இறையை அறிவதிங் கெப்படிச் சொல்லடி சிங்கி? - அது
இறையெங்கு நின்றாடுந் தன்நினை வாகுமே சிங்கா!"

இறையை அறிவது எப்படி சிங்கி?

இறை எங்கும் நின்றாடும் தன்னுடைய நினைவுதானடா சிங்கா!


26."என்னுள் விளங்குந் தவமென்ன சொல்லடி சிங்கி? - அது
தன்னை மறந்து தவத்தி லிருப்பது சிங்கா!"

தவம் என்றால் என்னடி சிங்கி?

உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும் மறந்து இருப்பதுதான் தவம்.

27."என்னவிதமாகத் தன்னை மறப்பது சிங்கி? - அது
ஒன்றைப் பொருந்தி ஒடுங்கியிருப்பது சிங்கா!"

தன்னை மறப்பது எப்படியடி சிங்கி?

நினைவில் உணர்வை ஒன்றினால் மனமடங்கும். அந்த ஒடுக்கம் தன்னை மறக்கச் செய்யும் சிங்கா.

28."என்னவிதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? - அது
எல்லாம் மறந்து இருளா யிருப்பது சிங்கா!"

ஒன்றைப் பொருந்தும் வழி என்னடி சிங்கி?

எல்லாவற்றையும் மறந்து இருளில் மூழ்கி இருப்பது சிங்கா.

29."ஒன்றென்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி? - அது
உன்னா லுதிப்பல முன்னால் நினைவடா சிங்கா!"

ஒன்று என்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி?

உயர்நிலை நினைவுதானடா சிங்கா.

30."கன்னி யெழுந்து கலந்திடம் எவ்விடஞ் சிங்கி? - சில
முன்னியெழுந்த உயிர் நிலை யல்லவோ சிங்கா!"

வாலைக் குமரியாம் மனோன்மணி எழுந்து கலந்தது எந்த இடம் சிங்கி?

அது முதன்முதலில் உதித்த உயிர்நிலையே சிங்கா.

0 Comments: