Friday, February 27, 2009

பழமொழி நானூறு - 14

பழமொழி நானூறு - 14
********************************

14.கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு) அடுகிற்பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுவது இல்.



நூல்களைக் கல்லாதவன் தான் நுண்மையாக அறிந்ததாக் நினைக்கும் மிக்க நுண்பொருளைப் பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்டுதல் இயலாது. (ஆனபின்) கல்வியும் சொல்வன்மையும் இல்லாத ஒருவன் நல்ல பொருள் விளக்கம் எனக்குத் தெரியும் என்று தன்னைத் தானே மிகப் பாராட்டுதல் எந்தக் காரணத்தினால்? தமது சொற்களால் செய்யும் தவத்திற்குப் பகையாய் உள்ளவரைப் பணியச் செய்து, அப்படிப் பணியாதவர்களைச் சினந்து சாபம் இட்டுக் கொல்லுகின்ற முனிவர்களுக்கும், தாம் கருதியதை(எண்ணியதை) எடுத்துச் சொல்ல முடியாத இடத்தில் தவத்திற்குச் சொல்லப்பட்ட ஆற்றல்கள் இல்லையாம்.

சொற்றிறம் இல்லையெனில் சாபம் எவ்வாறு பலிக்கும்?

கற்றோருக்குச் சொல்வன்மை இன்றியமையாதது.

பழமொழி
**********
"முற்றத்துறந்த முனிவர்கட்கும் சொற்றிறம் வேண்டும்."

Monday, February 23, 2009

பழமொழி நானூறு - 13

பழமொழி நானூறு - 13
********************************

13.கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய்
வினாமுந் துறாத உரையில்லை இல்லை
கனாமுந் துறாத வினை.


நற்குணம் உடைய பெண்ணே! நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள், நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும்பொழுது வலிவு இழத்தலால் வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லை; கனவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை.(கல்வி இன்றி விளங்கும் நுண்பொருளும் இல்லை)

பழமொழிகள்
************

1.வினா முந்துறாத விடையில்லை
2.கனா முந்துறாத வினையில்லை

Saturday, February 21, 2009

பழமொழி நானூறு - 12

பழமொழி நானூறு - 12
*******************************

12.கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி.


நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும் கல்வி கேள்வி இல்லாதவர்கள் பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள். கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல் எத்தன்மை உடையதெனில், நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல் ஆவதன்றி, கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை.

"கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களை அறியமாட்டார்கள்.'

பழமொழி
**********

"நாவல்கீழ்ப் பெற்ற கனி"

Friday, February 20, 2009

பழமொழி நானூறு - 11

பழமொழி நானூறு - 11
**********************

11.விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு.

மதிப்புறம் - சந்திரனின் ஓரம்

நல்ல நெறிகள் அமைந்த நூல்களை அறிந்து, நூல்களின் விதிகளுக்கும் தமது வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாது வாழ்பவர், மாறுபட்டு எழுந்தோர்களது நூலின் கொள்கைகளைத் தம் அறிவின் வன்மையால் வென்று தலைமைப் பேறு பெற்று வாழும் அறிஞர்கள், இகழ்ச்சிக்குறிய செயல்களைச் செய்தல் சந்திரனின் மேல் விளங்கும் களங்கம் போல் விளங்கித் தோன்றும்.

பழமொழி
*********

"மதிப்புறத்துப் பட்ட மறு"

Thursday, February 19, 2009

பழமொழி நானூறு - 10

பழமொழி நானூறு - 10
***********************

10. கற்(று)அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.



பாறைக் கற்களிருந்து இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலை நாட்டை உடையவனே! நீர் நிறைந்த குடம் ஆரவாரம் செய்யாது. அதுபோல, நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அடக்கத்துடன் செயலாற்றுவார்கள். நூல் உண்மைகளின் அறிவும், அனுபவ அறிவும் அற்று கல்வி மட்டும் கற்றவர்கள், தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

அதாவது, கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்து பேசமாட்டார்கள்.

பழமொழி
**********

"நிறை குடம் நீர்தளும்பாது."

Wednesday, February 18, 2009

பழமொழி நானூறு - 9

பழமொழி நானூறு - 9
**********************

9. நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்
அயிலாலே போழ்ப அயில்.

அயில் - இரும்பு


கண்களுக்கினிய (உவகையோடு தோகை விரித்து ஆடும்) மயில்கள் நடமாடும் சிறந்த மலைநாட்டை உடையவனே! எக்காலத்தேயும் இரும்பைக் கூரிய இரும்பினாலேயே பிளப்பார்கள். அதுபோல, கற்று அறிந்த நற்குணமுடையோரின் அறிவின் நன்மையை அறிவதாக இருந்தால், அவர்களை விடக் கல்வி ஒழுக்கங்களில் மிக்க அறிஞர்களே அதனை அறிவார்கள். கல்வி ஒன்றே உடைய ஒத்தாரும் அவையின்றி இழிந்தாரும் அறியமாட்டார்கள்.

பழமொழி
*********
"நல்லார் அறிவினை அவரினும் நல்லாரே அறிவர்."

"இரும்பை இரும்புகொண்டு துணித்தல் வேண்டும்."

Tuesday, February 17, 2009

பழமொழி நானூறு - 8

பழமொழி நானூறு - 8
******************************

8.புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட்(கு) ஆகாதே
பாம்பறியும் பாம்பின் கால்.

நன்மை மிகுந்த அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரனே! பாம்பின் கால் பாம்பு இனம்
மட்டும் அறியும் தன்மையன. அதுபோல், அறிவிற் சிறந்தவர்களை அறிவினால்
அறிந்துகொள்ளும் திறம் அவர்களைப் போன்ற அரிவிற் சிறந்தோர்க்கே விளங்கும்.
கல்வி அறிவற்ற பொது மக்கட்க்கு ஆகாது.

பழமொழி
********

"பாம்பின் கால் பாம்பறியும்."

Saturday, February 14, 2009

பழமொழி நானூறு - 5

ப‌ழ‌மொழி நானூறு - 5
******************************

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.



ஆற்றுணா - வழியி உண்ண உணவு

மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை ஐயமின்றிக் கற்று அறிந்தோர்களே அறிவுடையர் எனப்படுவர். அவ்வறிவு படைத்தோரின் புகழ் நான்கு திசைகளிலும் பரவாத நாடுகள் இல்லை. அதனால் அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை; அவ்வறிவு உடையோரின் நாடுகள்தாம். அப்படியானால், எந்த நாட்டுக்குச் சென்றாலும் வழியில் உண்ண உணவு(வழியிடையமுது) கொண்டு செல்ல வேண்டியதில்லை.

பழமொழி
*********
"கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு."
"அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்."

Friday, February 13, 2009

பழமொழி நானூறு - 4

4.விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின்று என்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவதாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்.

விளக்கு - உண்மை நிலையை விளக்குவதால் இப்பெயர் பெற்றது.
துளக்கம் - அசைவு - பொருள் நிலை வேறுபாடு


மலை நாட்டை உடையவனே! விளக்கிற்கு வேண்டிய நெய் முதலிய பொருட்களை விலை கொடுத்து வாங்குவது அது இருளைப் போக்கும் என்னும் தன்மையை ஆராய்ந்தேயாகும். விளக்கு தெளிவாகக் காட்டாது தானே மழுங்குதலைச் செய்தால் பொருள் கொடுத்து வாங்கியதன் பயன் என்ன? ஆதலினால், பொருள் கொடுத்து இருளை வாங்கமாட்டார்கள்.

பழமொழி
**********
"பொருளைக் கொடுத்துக் இருளைக் கொள்ளார்"

விளக்கைப் போன்ற குருவின் உதவியால் ஞான நூல்களைக் கற்கவேண்டும்.

புறநானூறு
**********
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"

Thursday, February 12, 2009

பழமொழி நானூறு - 3

3.சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொற்ந்தான் கல்லாத வாறு.


சோர்வு - குற்றம், மனத் தளர்வு
கல்தொறும் - கற்குங் காலத்தே
வழியிறங்கி - வருந்தி
உற்று ஒன்று - மனம் ஒருமைப்பட்டு
உழன்று - வருந்தி

கற்றார் முன் ஒன்றைச் சொல்லும்போது குற்றம் உண்டாதலால் மனத் தளர்வின்றி, கற்கும்போது நான் கல்லாதவன் எனக் கருதி, விரயம் செய்த நாட்களுக்காக வருந்தி, மனம் பொருந்தி ஒருமைப்பட மீண்டும் மீண்டும் நினைத்து வருந்தி, அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின், பின்னும் நூல்களைக் கற்குந்தோறும் தன் கல்லாதவனாகவே நினைத்துக் கற்கக் கடவான்.

படிக்குந்தோறும் அறியாதவனாக நினைத்து ஒவ்வொருவனும் படிக்கவேண்டும்.

பழமொழி
*********
"உற்று ஒன்று சிந்தித்து உழன்று ஒன்று அறியுமேல்"

Wednesday, February 11, 2009

பழமொழி நானூறு - 2

2. ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

ஆற்றுதல் - செய்தல்
சுரம் - வழி கடந்து
சுரம்போக்கி - பாலையில் வழி கடத்தல்
உல்கு - தீர்வைப் பொருள், ஆயம்
மரம் - ஓடம்
புணருமோ - சொல்லலாமோ

பாலையில் மிக்க வழி கடந்து தீர்வைப் பொருள்(ஆயம்) அடைபவர்கள் இல்லை; ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெற்றுக்கொள்பவர்கள் இல்லை. அதுபோல கல்வி கற்கும் காலத்தே கற்காதவன் முதுமையில் கற்று வல்லவன் ஆவான் எனச் சொல்லுதல் கூடுமோ? இல்லை.

பழமொழிகள்:
*************
1. சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லை
2. மரம்போக்கிக் கூலிகொண்டார் இல்லை

“தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே” எனும் இக்காலப் பழமொழியுடன் ஒத்து வருவது காண்.

Saturday, February 07, 2009

பழமொழி நானூறு - கடவுள் வணக்கம்

கடவுள் வணக்கம்
*********************

அரிதவித்(து) ஆசின்(று) உணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்(து)
உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது.

அரிது - முக்குற்றங்கள்(காமம், வெகுளி, மயக்கம்)
அவித்து - அழித்து நீக்கி
ஆசு - குற்றம்
வியன்கண் - அகன்ற
ஓக்கம் - உயர்வு

காமம், வெகுளி, மயக்கம், ஆகிய முக்குற்றங்களையும் அழித்துக் குற்றமின்றி முற்றும் உணர்ந்தவனாம் இறைவனின் பாதத்தையே, அகன்ற கடலால் சூழப்பட்ட பரந்த இவ்வுலகில், தன் உரிமைப் பொருளைப்போல் கருதி உணர்ந்து அறிந்தவர்களின் உயர்வே பேருடலையுடைய ஆவியைப் போன்று பெரியது.

பழமொழி - “பெரியதன் ஆவி பெரியது.”

Friday, January 16, 2009

பழமொழி நானூறு - பாயிரம்

பாயிரம்
************

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா
முன்றுறை மன்னன் நான்கடியும் செய்தமைத்தான்
இந்துறை வெண்பா இவை.

அசோக மரத்து நிழலில் எழுந்தருளியுள்ள அருகக் கடவுளின் திருவடி தொழுது, பழைய பழமொழிகளைத் தழுவி இந்நானூறு பழமொழிகளையும் முன்றுறையரையனாரே இனிய பொருள் துறைகள்(அறம், பொருள், இன்பம், வீடு) அமைந்த நான்கு அடிகள் கொண்ட வெண்பாக்களாய் சுவை சொட்ட யாத்து(பாடி) அமைத்தான்.